கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நாட்கள் - அத்தியாயம் 32

Nuha Maryam

Member
சஜீவ் ஆஃபீஸ் செல்லத் தயாராகி ஹாலில் இருக்க திடீரென அவனின் அரை உயரமே இருந்த ஒரு குட்டி வாண்டு, "மாமா.." என ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டது.

அப்போது தான் வீட்டினுள் நுழைந்த நித்ய யுவனி,

"ஹேய் கவி... " எனக் கத்திக் கொண்டு அவர்களை நோக்கி வந்தாள்.

சஜீவ் அந்த சிறுமியின் உயரத்துக்கு குனிந்தவன்,

"ஹாய் குட்டிப் பொண்ணே... உன் பேரென்ன... யாரு உனக்கு நான் தான் உன் மாமான்னு சொல்லித் தந்தாங்க..." என்றான் புன்னகையுடன்.

நித்ய யுவனி தன் தங்கையிடம் கண்களால் வேண்டாம் எனக் கூற அவளோ அதைக் கண்டு கொள்ளாது,

"என் பேரு காவ்யா... என்ட் நான் ஒன்னும் சின்ன பொண்ணு கிடையாது... ஐம் டுவல்வ் யேர்ஸ் ஓல்ட் நவ்... அக்கா தான் உங்க ஃபோட்டோ காட்டி இவர் தான் உன் மாமான்னு சொல்லித் தந்தாங்க..." என்றாள்.

சஜீவ் நித்ய யுவனியைக் கடைக் கண்ணால் பார்த்தபடி புன்னகையுடன்,

"ஓஹ்... உங்க அக்கா கிட்ட என் ஃபோட்டோஸ்லாம் இருக்கா..." என்றான்.

காவ்யா, "ஆமா மாமா... நீங்க தூங்கும் போது எடுத்த ஃபோட்டோஸ் கூட இருக்கு..." என்றாள் அப்பாவியாக.

தலையில் கை வைத்த யுவனி, "வீட்டிலிருந்து வரும் போது போர் அடிக்குதுன்னு சொன்னதும் கேம் விளையாட என் மொபைல இவ கைல குடுத்தது தப்பா போச்சு... இவன் கிட்ட இப்படி மாட்டி விட்டுட்டாளே... இப்போ என்ன சொல்லி சமாளிக்கலாம்..." என மானசீகமாக தன்னையே திட்டிக் கொண்டாள்.

நித்ய யுவனி, "கவி.. ட்ராவல் பண்ணது உனக்கு டயர்டா இருக்கும்... வா நாம ரூமுக்கு போலாம்..." என்க,

"முடியாதுக்கா... நீ வேணா போ... நான் மாமா கூட இருக்கேன்..." என்ற காவ்யா சஜீவ்விடம்,

"ஆஃபீஸ் போக போறீங்களா மாமா... ப்ளீஸ் மாமா... இன்னைக்கு வீட்டுல இருங்களே... நான் இன்னைக்கு தானே வந்திருக்கேன்... ப்ளீஸ் ப்ளீஸ்..." என கண்களை சுருக்கிக் கெஞ்சினாள்.

நித்ய யுவனி, "பிடிவாதம் பிடிக்காதே கவி... அவருக்கு வர்க் இருக்கும்... அதான் நான் லீவ் போட்டிருக்கேனே... நீ என் கூட இரு இன்னைக்கு..." என்க காவ்யாவின் முகம் வாடியது.

சஜீவ்விற்கு அவளைக் காண பாவமாக இருக்க, "யுவி வேற இன்னைக்கு லீவ்... என்னாலயும் அவள் கூட டைம் ஸ்பென்ட் பண்ணவே முடியல... எப்பப்பாரு ஹாஸ்பிடலே போவாள்..." என நினைத்தவன்,

"கவி குட்டி... நீ ஃபீல் பண்ணாதே... மாமா இன்னைக்கு உன் கூடவே இருக்கேன்..." என்றான் புன்னகையுடன்.

அதைக் கேட்டதும் துள்ளிக் குதித்த காவ்யா, "ஹை... ஜாலி... அப்போ வாங்க மாமா..." என சஜீவ்வை இழுத்துக் கொண்டு செல்லப் பார்க்க,

அங்கு வந்த ஈஷ்வரி, "இது வீடா இல்ல சத்திரமா... முதல்ல இந்த சிறுக்கி வந்தா... இப்போ இவள் இவளோட குடும்பத்தையே கூட்டிட்டு வந்து தங்க வைக்கிறா..." என சத்தம் போட காவ்யா பயந்து சஜீவ்வின் பின் ஒளிந்து கொண்டாள்.

நித்ய யுவனி கோவமாக ஈஷ்வரிக்கு பதிலளிக்க வர அதற்குள் சஜீவ், "அம்மா.... வார்த்தைய பார்த்து பேசுங்க... யுவி ஒன்னும் கண்டவ கிடையாது... என் பொண்டாட்டி... அவளோட குடும்பம்னா அது என் குடும்பமும் தான்... யுவிய அவமதிக்கிறது என்னை அவமதிக்கிறதுக்கு சமம்... " எனக் கோவமாகக் கூறியவன்,

"கண்ட கண்டவள வீட்டுக்கு கூட்டிட்டு வந்து தங்க வெச்சி இருக்குறது நீங்க தான்...‌முதல்ல அதை தூக்கி வெளிய போடுங்க.." என்றான் சுசித்ராவைப் பார்த்துக் கொண்டு.

சஜீவ்வை பகைத்துக் கொள்ள விரும்பாது அமைதியான ஈஷ்வரி நித்ய யுவனியை முறைத்தார்.

தன் பின்னே ஒளிந்திருந்த காவ்யாவை முன்னே கொண்டு வந்த சஜீவ் புன்னகையுடன், "நாம மேல போய் விளையாடலாம் கவி குட்டி... வா.." என காவ்யாவை அழைத்துச் சென்றான்.

இன்னும் தன்னை முறைத்துக் கொண்டிருந்த ஈஷ்வரியை நெருங்கிய நித்ய யுவனி அவரை ஏளனப் பார்வை பார்த்தவள்,

"பார்த்தீங்களா மாமியாரே... என்னை ஒரு வார்த்தை சொன்னதும் உங்க பையன் உங்களையே எதிர்த்து பேசினத... எனக்கு அவன உங்க கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போறதுக்கு கொஞ்சம் நேரம் கூட ஆகாது... நான் ஒரு வார்த்தை சொன்னா என் பின்னாடியே வருவான்... ஆனா நீங்க இந்த சுசித்ரா கூட சேர்ந்து எனக்கு இவ்வளவு அநியாயம் பண்ணியும் நான் அதை செய்யாம இருக்கேன்னா அதுக்கு ஒரே காரணம் என் புருஷன பெத்தவ நீங்க... அந்த மரியாதைக்காக தான்... இனிமேலாவது திருந்துற வழிய பாருங்க.." என்றவள் அங்கு இவ்வளவு நேரம் ஓரமாக நின்று அனைத்தையும் வேடிக்கை பார்த்த சுசித்ராவை முறைத்து விட்டு அங்கிருந்து சென்றாள்.

ஈஷ்வரியோ, "என்னையே என் பையன் கிட்ட இருந்து பிரிப்பேன்னு சொல்றியாடி... உன்ன இந்த வீட்ட விட்டே துறத்துறேன் பாரு.." என்றார் வன்மத்துடன்.

நித்ய யுவனி அறைக்குச் செல்ல காவ்யா ஏதோ கூறியதற்கு வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தான் சஜீவ்.

நித்ய யுவனி வரவும் இருவரும் சிரிப்பை அடக்க அவர்களை சந்தேகமாகப் பார்த்தவள் காவ்யாவிடம்,

"எதுக்கு என்னைப் பார்த்ததும் சிரிக்கிறத நிறுத்திட்டீங்க... என்னாச்சு... எதுக்கு கவி சிரிச்ச.." எனக் கேட்க,

காவ்யா, "ஹஹா... வேற ஒன்னுமில்லக்கா... நான் சின்ன வயசுல பெரியப்பா எனக்கு கொண்டு வர சாக்லேட்டுக்கு சண்டை போட்டு நீ அழுவியே... அதை பத்தி தான் மாமா கிட்ட சொன்னேன்.." என்று சிரிக்க சஜீவ்வும் அவளுடன் இணைந்து சிரித்தான்.

தலையில் அடித்துக் கொண்ட நித்ய யுவனி, "மானத்த வாங்குறாளே..." என முனுமுனுத்தாள்.

"உங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியுமா மாமா.." என்று காவ்யா ஏதோ சொல்ல வரவும்,

"வேணாம் கவி..." என ஓடி வந்து அவள் வாயைப் பொத்தினாள் நித்ய யுவனி.

காவ்யா, "ம்ம்ம்.. ம்ம்.. மாமா..... அக்காவுக்கு காக்ரோச்னா பயம்..." என நித்ய யுவனியின் கரத்தை விலக்கி விட்டு கத்தினாள்.

சஜீவ் நித்ய யுவனியைப் பார்த்து சிரிக்க நித்ய யுவனி ஒரு கையால் முகத்தை மூடிக் கொண்டாள்.

சஜீவ், "கவிக்குட்டிக்கு சாக்லேட்னா ரொம்ப பிடிக்குமா.." எனக் கேட்க,

"ஆமா மாமா... ஆனா இந்த அக்கா எனக்கு தனியா சாப்டவே விட மாட்டா.. என் கிட்ட இருந்து பறிச்சி சாப்பிடுவா.." என உதட்டை சுழித்தாள் காவ்யா.

நித்ய யுவனியும் அவ்வாறே உதட்டை சுழிக்க சஜீவ் தன்னவளையே ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"மாமா மாமா.." என அவனை உலுக்கிய காவ்யா,

"மாமா... நாம மூணு பேரும் வெளிய போலாமா... ப்ளீஸ் மாமா.." என்க,

நித்ய யுவனிக்கும் சஜீவ்வுடன் வெளியே செல்ல ஆசையாக இருந்தது.

ஆனால் ஏதோ ஒரு தயக்கம்.

நித்ய யுவனி ஏதும் கூறாமல் அமைதியாக இருக்க,

"அதுக்கென்னடா கவிக் குட்டி.. வெளிய போறோம்... ஜாலியா ஊரு சுத்திப் பார்க்குறோம்... அப்படியே ஏதாவது பெரிய ஹாட்டல்ல சாப்பிட்டு வரோம்... ஓக்கே.." எனப் புன்னகையுடன் கேட்டான் சஜீவ்.

காவ்யா, "யேஹ்..... ஜாலி ஜாலி.." என கட்டிலில் துள்ளிக் குதித்தவளை கஷ்டப்பட்டு அடக்கினாள் நித்ய யுவனி.

சற்று நேரத்தில் மூவரும் தயாராகி வெளியே வர ஈஷ்வரி, "சுச்சியையும் கூட்டிட்டுப் போ சர்வா.." என்க,

சஜீவ்வின் கையை சுரண்டிய காவ்யா அவன் குனிந்ததும்,

"யாரு மாமா இந்த டெவில் லேடி... " என ஈஷ்வரியைப் பார்த்தபடி மெதுவாகக் கேட்டாள்.

அதிர்ந்த நித்ய யுவனி, "கவி ஷட்டப்... பெரியவங்கள இப்படி தான் மரியாதை இல்லாம பேசுவியா... அது அவரோட அம்மா.." என்க,

காவ்யா, "சாரி மாமா.." என்றாள் முகத்தைத் தொங்கப் போட்டபடி.

சஜீவ், "நீ ஃபீல் பண்ணாதே கவிக் குட்டி... முதல்ல பெரியவங்க பெரியவங்களா நடந்துக்க தெரிஞ்சுக்கனும்..." எனக் காவ்யாவிடம் கூறியவன்,

"நான் என் ஃபேமிலி கூட வெளிய போறேன்மா.. என்னால கண்டவளையும் என் கூட கூட்டிட்டுப் போய் எங்க சந்தோஷத்த கெடுத்துக்க விருப்பமில்ல.." என ஃபேமிலியை சற்று அழுத்தமாகக் கூறினான்.

ஈஸ்வரி ஏதோ கூறவும் அதனைக் கண்டு கொள்ளாது காவ்யாவின் கரத்தைப் பற்றிக் கொண்டு வெளியேறினான்.

அவர்கள் பின்னே நித்ய யுவனியும் சென்றாள்.

மூவரும் சேர்ந்து முதலில் கடற்கரை சென்றனர்.

காவ்யா கடலில் கால் நனைக்கச் செல்ல அவளுக்கு நேராக தங்களின் பார்வையில் காவ்யா படுமாறு கடற்கரை மண்ணில் அமர்ந்தனர் சஜீவ் சர்வேஷ் மற்றும் நித்ய யுவனி.

வெகுநேரம் இருவருக்கும் இடையில் அமைதியே இருக்க அதனைக் கலைத்தான் சஜீவ்.

சஜீவ், "நீ ஏன் போகல யுவி... உனக்கு தான் பீச்ல விளையாட பிடிக்குமே..." என்க,

நித்ய யுவனி காவ்யாவின் மீது பார்வையைப் பதித்தவாறு, "பிடிக்கல... இந்த அஞ்சி வருஷத்துல நிறைய விஷயம் மாறிடுச்சு... என் வாழ்க்கை உட்பட... மனசுக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் எல்லாமே பிடிக்காம போயிடுச்சு... எல்லாவற்றின் மேலயும் ஒரு வெறுப்பு..." என்றாள் கசந்த குரலில்.

தன்னால் தான் நித்ய யுவனி இவ்வாறு மாறி விட்டாள் என நினைக்கும் போதே சஜீவ்வின் மனம் வலித்தது.

தன் தாயைப் பற்றி மட்டுமே சிந்தித்து நித்ய யுவனியைப் பற்றி ஒரு சொட்டு கூட சிந்திக்காத தன் மடமையை அறவே வெறுத்தான் சஜீவ்.

கலங்கிய கண்களுடன் நித்ய யுவனியைப் பார்த்தவன், "என்னால தானே யுவி... ஐம் சாரி... நான் அன்னைக்கு அந்த முடிவ எடுக்காம இருந்திருந்தா இன்னைக்கு நாம ரெண்டு பேருக்கும் இடைல இந்த இடைவெளி இருந்திருக்காது இல்லையா.." எற சஜீவ் கூற,

பெருமூச்சு விட்ட நித்ய யுவனி, "ஒரு விதத்துல நானும் காரணம் தான்... யாரு மேலயும் கண் மூடித்தனமான அன்போ நம்பிக்கையோ வைக்கக் கூடாதுன்னு அதுக்கப்புறம் தான் புரிஞ்சிக்கிட்டேன்... என்ன... அதை புரிஞ்சிக்குற நேரம் ஏற்கனவே எல்லாமே இழந்துட்டேன்.." என்க சஜீவ்வின் மனதில் ஈட்டியைப் பாய்ச்சுவது போல் இருந்தது.

மீண்டும் இருவரும் அமைதியாக இருக்க சஜீவ், "நான் இதை சொன்னாலும் நீ என்னை மன்னிக்க போறதில்லன்னு எனக்கு தெரியும் யுவி... பட் ப்ளீஸ்... எனக்கு ஒரேயொரு தடவ அன்னைக்கு நான் ஏன் அப்படி பண்ணேன்னு விளக்கம் அளிக்க சந்தர்ப்பம் குடு.." எனக் கேட்க,

நித்ய யுவனி அமைதியாக இருக்க அதனை சம்மதம் என எடுத்துக் கொண்ட சஜீவ், "அன்னைக்கு நைட்‌ ஃபுல்லா நான் உன் கூட வீடியோ கால் பேசினேனே.. என் கண்ணுலயோ என் வார்த்தையிலயோ நீ பொய்ய பார்த்தியா யுவி.. என் கண்ண பார்த்தே என்னைப் புரிஞ்சுக்குவேன்னு சொல்லுவியே... அப்போ ஏன் இந்த கொஞ்சம் நாளா என் கண்ண என்ன என் முகத்தையே ஏன் ஏறெடுத்து பார்க்க மாட்டேங்குற... அவ்வளவு வெறுப்பா என் மேல யுவி.." என வேதனையாகக் கேட்க நித்ய யுவனி உள்ளங்கையை அழுத்த மடித்து தன்னை சமன் செய்தாள்.

நித்ய யுவனியிடமிருந்து பதிலேதும் வராமல் போக,

"அன்னைக்கு நைட் நம்ம ஃபியுச்சர பத்தி எவ்வளவு சந்தோஷமா பேசிட்டு இருந்தோம்.." என சஜீவ் கூறவும் இருவரின் நினைவுமே அன்றைய நாளை நோக்கி சென்றன.

_______________________________________________

சஜீவ் வேலை முடிந்து களைப்பாக தன் அறைக்கு வர சரியாக அவன் மொபைல் ஒலி எழுப்பியது.

நித்ய யுவனி தான் வீடியோ காலில் அழைத்திருந்தாள்.

சஜீவ், "என்ன யுவி.. இப்பவே கால் பண்ணி இருக்க... எப்பவுமே லேட்டா தானே பண்ணுவ... வீட்டுல யாரும் இல்லையா..." என்க,

நித்ய யுவனி, "ஆமா சஜு... நாளைக்கு எங்க ரிலேஷன் வீட்டுல வெடிங்... அப்பாவும் அம்மாவும் இன்னைக்கே போய்ட்டாங்க... நான் தனியா தான் இருக்கேன்... நாளைக்கு தான் வருவாங்கன்னு நெனக்கிறேன்... அதுவுமில்லாம நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் தெரியுமா.." என்றாள் புன்னகையுடன்.

பதிலுக்கு புன்னகைத்த சஜீவ், "உன் ஃபேஸ பார்த்ததுமே புரிஞ்சது யுவி... வழமைய விட இன்னைக்கு கொஞ்சம் ப்ரைட்டா இருக்கு..." என்க,

"ஆமா சஜு... நீங்க இப்போ தான் வர்க் முடிஞ்சி வந்தீங்களா... ரொம்ப டயர்டா தெரியுரீங்க..." எனக் கேட்டாள் நித்ய யுவனி.

"ஆமா யுவி... டயர்டா தான் இருந்தேன்...‌ பட் உன் ஃபேஸ பார்த்ததும் புதுசா ஒரு எனர்ஜி கிடைச்சது போல இருக்கு.. பிகாஸ் யூ ஆர் மை ஸ்ட்ரஸ் பஸ்டர்..." எனப் புன்னகையுடன் கூற,

நித்ய யுவனி, "போ சஜு.." என வெட்கத்தில் முகத்தை மூடிக் கொண்டு சிணுங்கினாள்.

கன்னத்தில் கை ஊன்றி சஜீவ் அவளை ரசிக்க,

"இப்படி பார்க்க வேணா சஜு... போங்க... போய் ட்ரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வாங்க முதல்ல..." என தன் வெட்கத்தை மறைக்க அவனை விரட்டினாள் நித்ய யுவனி.

சஜீவ், "சரி சரி... வெரட்டாதே யுவி... அப்படியே ஒரேயடியா போனாலும் போய்டுவேன்..." என சிரித்தபடி கூற நித்யாவின் முகம் வாடியது.

"ஹேய்... சாரிடா... நான் ஜஸ்ட் விளையாட்டுக்கு சொன்னேன் யுவி... இதுக்கு போய் யாராவது ஃபீல் பண்ணுவாங்களா என்ன.." என சஜீவ் கேட்க,

நித்ய யுவனி, "விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாதே சஜு... எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு... நீ இல்லாத லைஃப என்னால இமேஜின் கூட பண்ணி பார்க்க முடியாது... நான் உன் கூட ரொம்ப அட்டேச் ஆகிட்டேன்... என்னால நிச்சயம் நீ இல்லாம இருக்க முடியாது சஜு.." என்றாள் கண்கள் கலங்க.

"அச்சோ... சாரிடா குட்டி... உன்ன ஹர்ட் பண்ண சொல்லல... உன்ன கலாய்க்க தான் அப்படி பண்ணேன்டா... நான் ஒரு பைத்தியம்... ஹேப்பியா இருந்த பொண்ணோட மூட் அப்சட் பண்ணிட்டேன்... சாரிடா யுவி... என் செல்லத்தோட ஃபேஸ்ல ஸ்மைல வர வைக்க என்ன பண்ணனும்..." எனக் கேட்டான் சஜீவ்.

மெல்லியதாக புன்னகைத்த நித்ய யுவனி, "எதுவும் பண்ண வேணாம்.. நானே கொஞ்ச நேரத்துல சரி ஆகிடுவேன்... அது வரை நீங்க போய் ஃப்ரெஷ்ஷாகிட்டு வாங்க... அதுக்குள்ள நான் ஓக்கே ஆகிடுவேன்..." என்க,

சஜீவ், "ஆர் யூ ஷூர் பேபி... நீ ஓக்கே தானே.." என்க,

"ஆமா சஜு... போய்ட்டு க்விக்கா குளிச்சிட்டு ட்ரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வாங்க.. நான் வெய்ட் பண்றேன்.. ஹா சஜு... கால கட் பண்ணாதீங்க.. நான் லைன்லயே இருக்கேன்..." என நித்ய யுவனி கூறவும்,

சஜீவ், "நான் வரும் போது என் யுவி ஃபேஸ்ல அந்த பழைய ப்ரைட்னஸ் திரும்ப வந்து இருக்கனும்... ஓக்கேயா.. நான் ஓடி போய் ஓடி வரேன்..." என்க புன்னகையுடன் தலையசைத்தாள் நித்ய யுவனி.

சற்று நேரத்திலே குளித்து உடை மாற்றி வந்தான் சஜீவ்.

இணைப்பில் இருந்த நித்ய யுவனியோ கண்ணாடியின் முன் நின்று விசிலடித்தபடி கையால் முடியை வாரிக் கொண்டிருந்த சஜீவ்வை கண்ணெடுக்காமல் ரசித்துக் கொண்டிருந்தாள்.

கண்ணாடியில் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த தன்னவளைப் பார்த்து சஜீவ் கண்ணடிக்க அவசரமாக வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள் நித்ய யுவனி.

உதடு மடித்து புன்னகைத்தபடி வந்து மொபைலைக் கையில் எடுத்தவன், "என்ன மை டியர் பொண்டாட்டி... அத்தானை ரொம்ப நேரமா சைட் அடிச்சிட்டு இருக்கீங்க போல..." எனப் புன்னகையுடன் சஜீவ் கேட்க கண்களை விரித்து அவனை நோக்கினாள் நித்ய யுவனி.

அவளைப் பார்த்து சிரித்த சஜீவ், "என்ன யுவி... ஏன் இப்படி பார்க்குற.." என்க,

நித்ய யுவனி, "என்ன சொல்லிக் கூப்பிட்டீங்க இப்போ.. உங்களை என்னன்னு சொன்னீங்க.." என அதிர்ச்சி மாறாமல் கேட்டாள்.

சஜீவ், "ஓஹ்.. அதுவா யுவி... கொஞ்சம் வருஷம் கழிச்சு உன் ஸ்டடீஸ் முடிஞ்சு உன் ஆசைப்படி நீ டாக்டர் ஆனதும் நாம கல்யாணம் பண்ணிக்க போறோம்.. அப்போ நீ என் பொண்டாட்டி தானே... அதான் இப்பவே ரிகர்ஸல் எடுத்தேன்.." எனப் புன்னகையுடன் கூற,

புன்னகைத்த நித்ய யுவனி, "ஹ்ம்ம்ம்... கேக்க நல்லா தான் இருக்கு சஜு... அப்போ உங்கள என்னமோ சொன்னீங்களே..." எனக் கேட்க,

"அது சும்மா சொன்னேன்... நீ என்னை அப்படி கூப்பிட்டா நல்லா இருக்குமே... அதான் சொன்னேன்... சரி அதை விடு... இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன்னு சொன்னியே... என்ன விஷயம் யுவி.." என்றான் சஜீவ்.

நித்ய யுவனி, "நல்ல வேளை ஞாபகப்படுத்தினாய் சஜு... யாரும் வீட்டுல இல்லன்னு நான் இன்னைக்கு என் ஃப்ரெண்ட் திவ்யா வீட்டுக்கு போனேன்... அங்க அவ அக்காவும் அவங்க பசங்கள கூட்டிட்டு வந்திருந்தாங்க... ட்வின்ஸ் சஜு... எவ்வளவு க்யுட்டா இருந்தாங்க தெரியுமா... ரெண்டு பேருமே கொஞ்சம் நேரம் கூட பிரியவே இல்ல... ஒன்னாவே சுத்திட்டு இருந்தாங்க... அவங்க கூடவே டைம் ஸ்பென்ட் பண்ணேன் இன்னைக்கு... ரொம்ப ஜாலியா இருந்தது... என் கூட நல்லா ஒட்டிக்கிட்டாங்க சஜு.." என்றாள்.

சஜீவ், "உன் கூட எந்த குழந்தையாவது சேராம போவாங்களா... உனக்கு தான் குழந்தைங்கன்னாவே உசுராச்சே... சரி முதல்ல இதை சொல்லு... உனக்கு ட்வின்ஸ்னா அவ்வளவு இஷ்டமா யுவி.." எனப் புன்னகையுடன் கேட்க,

"இஷ்டமாவா... என்ன சஜு இப்படி கேட்டுட்ட... ட்வின்ஸ்னா எனக்கு அவ்வளவு பிடிக்கும்.. நீ வேணா பாரு சஜு.. நமக்கு கூட ட்வின்ஸ் தான் பொறப்பாங்க.." எனத் தன்னை மறந்து கூறிய நித்ய யுவனி,

"ச்ச்ச்..." என தான் கூறியதை உணர்ந்து அவசரமாக நாக்கைக் கடித்தாள்.

சஜீவ், "ரொம்ப முன்னேறிட்ட யுவி... பரவாயில்ல... நீ இப்படி பேசுறது கூட எனக்கு பிடிச்சிருக்கு..." என்க,

நித்ய யுவனி, "அ..அது... சஜு.. நான்..." என வார்த்தை வராமல் தடுமாறியவள் முகத்தை மூடிக் கொண்டாள்.

சஜீவ், "யுவி... என்னைப் பாரு.." என்க மறுப்பாக தலையசைத்தாள்.

"சரி அப்போ நான் கால கட் பண்றேன்..." என சஜீவ் பொய்யாகக் கூற,

"இல்ல இல்ல... கட் பண்ணிறாதே சஜு..." எனக் கைகளை விலக்கி விட்டு அவசரமாகக் கூறினாள் நித்ய யுவனி.

அவளைப் புன்னகையுடன் பார்த்த சஜீவ், "நீ இப்படி உன் மனசுல தோணுறத ஓப்பனா பேசுறது தான் எனக்கு பிடிக்கும் யுவி... என் கிட்ட தானே உன்னால இப்படி எல்லாம் பேச முடியும்... நீ தானே... உனக்கு மட்டும் தான் அந்த உரிமை இருக்கு... அதனால இனி என்ன விஷயமா இருந்தாலும் என் கிட்ட தயங்காம சொல்லனும்.." என்க சம்மதமாகத் தலையசைத்தாள் நித்ய யுவனி.

அதன் பின் இருவருமே தங்களைப் பற்றியும் தங்கள் எதிர்காலத்தைப் பற்றியும் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

மறுநாள் அவர்களின் வாழ்வே தலைகீழாக மாறப் போவதை இருவருமே அப்போது அறியவில்லை.

_______________________________________________

அன்றைய நினைவில் இருவரும் கண்கள் கலங்க அமர்ந்திருக்க சஜீவ் அதன் பின்‌ ஈஷ்வரி சுசித்ரா மற்றும் ரகுவரனுடன் இணைந்து நடத்திய நாடகத்திலிருந்து தனக்கு ஜீவிகா மூலம் உண்மை தெரிய வந்தது, அதன் பின் நித்ய யுவனியைத் தொடர்பு கொள்ள முயற்சித்தது என அனைத்தையும் கூறினான்.

சஜீவ் ஒவ்வொன்றாகக் கூறக் கூற நித்ய யுவனியின் கரங்கள் நடுங்க அவள் இதயம் வேகமாகத் துடித்தது.

அன்று நித்ய யுவனியின் வீட்டுக்கு ஈஷ்வரியும் சுசித்ராவும் வந்து பேசியது, சஜீவ் பேசியது என அதன் பின் நடந்த ஒவ்வொன்றும் இன்று நடந்தது போலவே இருந்தது அவளுக்கு.

சஜீவ் நடுங்கிக் கொண்டிருந்த நித்ய யுவனியின் கரத்தைப் பற்றி அவள் மணிக்கட்டில் இருந்த கையை அறுத்துக் கொண்ட வடுவை தன் விரலால் வருடினான்.

பின் அவள் கரத்தை அழுத்த நித்ய யுவனி, "நா... நான்..." என ஏதோ கூற வர அதற்குள் அவர்களை நோக்கி ஓடி வந்த காவ்யா மூச்சிரைக்க நின்றாள்.

அதில் சஜீவ் தன்னிலை அடைய நித்ய யுவனியோ இன்னும் உடல் நடுங்க அமர்ந்திருந்தாள்.

அவளின் நிலையைக் கண்ட சஜீவ் காவ்யாவிடம், "கவிக்குட்டி... நாம இப்போ வீட்டுக்கு போலாமாடா.." எனக் கேட்க,

காவ்யா, "ஏன் மாமா... நீங்க இன்னைக்கு ஃபுல் டே ஊர் சுத்தலாம்னு சொன்னீங்க... நாம எங்கயுமே போகலையே..." என்றாள் சோகமாக.

சஜீவ், "மாமாக்கு அர்ஜன்ட் வர்க் ஒன்னுடா... நாம கண்டிப்பா நாளைக்கு வரலாம்... பாரு அக்கா கூட ரொம்ப டயர்ட் ஆகிட்டா... பாவம்ல அவங்க.." எனக் கேட்கவும் காவ்யா சற்று சமாதானமடைந்தாள்.

அதன் பின் மூவருமே வீட்டிற்கு கிளம்பினர்.

வீடு வரும் வரை நித்ய யுவனி அமைதியாகவே இருக்க காவ்யா கேட்ட கேள்விக்கெல்லாம் சஜீவ் பதிலளித்தபடி வந்தான்.

சஜீவ் அடிக்கடி நித்ய யுவனியின் முகத்தைப் பார்க்க நித்ய யுவனியோ அவை எதையும் உணராமல் முன்னே வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.

❤️❤️❤️❤️❤️

- Nuha Maryam -
 
Top