கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வரமொன்று கேட்கிறேன்

#வரமொன்று_கேட்கிறேன்

உன் விரல் பிடித்திடும்
வரமொன்று கேட்கிறேன்...

நெஞ்சோடு கலந்துவிட்டு
நேரத்தில் பிரிந்துவிட்ட
இதயத்தின் ஓசையே
உன் விரல் பிடித்திடும்
வரமொன்று கேட்கிறேன்....

தோள் மீது சாய்ந்து
மார்பினில் உறங்கி
ஓடிப்பிடித்து விளையாடி
ஒன்றாக உண்டு
அன்னத்தை ஊட்டி
அன்பினில் திளைத்தவளே
உன் விரல் பிடித்திடும்
வரமொன்று கேட்கிறேன்....

கண்ணீர் சிந்திட
கவலைகளை மறைத்து
பொய் சிரிப்பு முகத்தோடு
ஓராயிரம் ஆறுதலுடன்
தவிக்கவிட்டு சென்றவளே
உன் விரல் பிடித்திடும்
வரமொன்று கேட்கிறேன்....

நெடுந்தூரம் பயணப்பட்டு
நினைவுகளை சுமந்து கொண்டு
நெஞ்சத்தின் ஆசைகளோடு
உன்னை காண வந்தநேரம்
தள்ளி நின்று பேசுகிறாய்
தரணி என்ன சொல்லுமென்று
தயக்கத்துடன் நிற்பவளே
உன் விரல் பிடித்திடும்
வரமொன்று கேட்கிறேன்...

கழுத்தினில் அவனிட்ட
மாங்கல்ய முடிச்சும்
அவனுருவாய் வந்திட்ட
குழந்தையின் முகமும்
ஒவ்வொரு முறையும்
என்னையும் தடுக்குதடி
உன்னை நெருங்கி வர....

நூறு கோடி வார்த்தைகளை
உன்னோடு பேச வேண்டும்
நான் தொலைத்த நாட்களெல்லாம்
மறுமுறை வாழ்ந்திட வேண்டும்
வருடங்கள் போன பின்னும்
நடந்தவை மறக்கவில்லை
முள் தைத்த இதயத்தில்
காயம் இன்னும் ஆறவில்லை
வலிகளுக்கு மருந்தாக
உன் விரல் பிடித்திடும்
வரமொன்று கேட்கிறேன்....

பல முறைகள் முயற்சித்தும்
பலனின்றி தவிக்கிறேன்
உயிர் கொல்லும் அன்பிற்கு
அடிமையாய் துடிக்கிறேன்
இறந்த கால அட்டவணை
இமைகளிலே தேடுகிறேன்
நான் செய்த துரோகத்தை
நித்தமும் நினைக்கிறேன்
நானின்று தவிப்பதுபோல
என்னோடு கலந்துவிட்ட
என்னவளின் அவனும் தவித்திருப்பான்...

எத்தனை வலிகளடி
எத்தனை ஏக்கமடி
எத்தனை ஆசையடி
எத்தனை காதலடி
எத்தனை நினைவுகளடி
எத்தனை நிஜங்களடி
எத்தனை கண்ணீரடி
எத்தனை கவலையடி
அத்தனைக்கும் மருந்தாக
உன் விரல் பிடித்திடும்
வரமொன்று கேட்கிறேன்...

சாத்திரமும் சுற்றமும்
குற்றங்கள் சொன்னாலும்
அனைத்து கட்டுப்பாட்டையும்
அழித்து எறிந்துவிட்டு
அன்போடு ஓடி வா
நீயென்றும் குழந்தையடி எனக்கு

கைகோர்த்து சிரித்து மகிழ்ந்து
மனகடலுக்குள் மறைந்து போன
சின்னஞ்சிறு கதைகள் பல பேசி
தேக்கி வைத்த அன்பையெல்லாம்
உச்சி முகர முத்தமிட்டு
நெஞ்சினில் உன் தலைசாய்த்து
சில நிமிடங்கள் வாழ்ந்தாலே
எந்தன் ஜனனமும் முடியுமடி...

என் அணுவில் உருவாகி
எந்தன் பொழுதுகளை களவாடிய
என் அருமை மகளே
மீண்டும் ஒரே ஒருமுறை
உன் விரல் பிடித்திடும்
வரமொன்று கேட்கிறேன்
இறக்கும் தருவாயிலாவது
கொடுத்துவிடு வரத்தினை...

இப்படிக்கு,
திருமணத்தால் மகளை பிரிந்த அப்பா......

- சேதுபதி விசுவநாதன்
 
Top