கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வரவு நல்ல உறவு - பாகம் - 1

Rajasree Murali

Moderator
Staff member
ஞாயிற்று கிழமை என்பதால் கொஞ்சம் லேட்டாக எழுந்து கொள்ளலாம் என்று நினைத்தவாறே படுக்கையில் புரண்டு கொண்டிருந்த காயத்ரி பக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்த மகள் நந்திதாவை பார்த்து ரசித்தாள். பதிமூன்று வயதாகின்றது. இன்னும் குழந்தைத்தனம் மாறாமல் தம்பி ஆதித்யாவுடன் ஐ-பேட் வீடியோ கேமுக்காகவும், பாட்டியுடன் டிவி ரிமோட்டிற்காகவும் சண்டை போடுவாள். எத்தனை தரம் எடுத்து சொன்னாலும் புரிந்து கொள்ளாத பெண். ஒரு வருடத்திற்கு மேல் ஆகின்றது. ஆன் லைன் வகுப்புகள் தான். காயத்ரிக்கும் கணவன் பிரசன்னாவிற்கும் ஒர்க் ப்ரம் ஹோம். ஒரு வருடமாகவே அவளுக்கு டென்ஷன் தான். ஒரு ரூமில் பிரசன்னா லேப்-டாப்புடன் காலை பதினோரு மணிக்கு உட்கார்ந்தால் காபியில் ஆரம்பித்து இரவு டின்னர் வரை அந்த இடத்திற்கே சப்ளை செய்ய வேண்டும். நடுவில் அவள் தன் ஆபிஸ் வேலையை கவனித்தபடியே, நந்திதா ஆதித்யா போடும் சண்டைகளை சமாளித்தபடியே சமையல் அறையில் தனியாக போராடுவாள். மாமியார் பாக்கியம், பாவம் டயபெடீக். மூட்டு வலி காரணமாக தன்னால் எதுவும் உதவ முடியவில்லையே என்று புலம்புவாள்.

இப்படித்தான் இரண்டு நாளைக்கு முன்னால் நந்திதா ஹாட் ஸ்டாரில் வரும் அவளுக்கு விருப்பமான சிண்ட்ரெல்லா படம் பார்க்க வேண்டும் என பிடிவாதம். இன்னொரு புறம் ஆதித்யா அவனுக்கு ஸ்பைடர் மேன் படம் பார்க்கணும்னு அழுகை. இவர்களுக்கு நடுவில் மாமியார் 'சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன்' சீரியல் பார்க்கணும் கொஞ்சம் ரிமோட் கொடுங்கடா என்று தன் பங்கிற்கு கேட்க மூன்று பேரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் ரிமோட்டிற்காக சண்டை போட அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல பிரசன்னா எதையும் கண்டு கொள்ளாமல் தன் வேளையில் மூழ்கி இருந்தான். காயத்ரிக்கு தாங்க முடியாத டென்ஷன் எகிறியது. வேகமாக ஹாலுக்கு வந்தவள் ஆதித்யாவின் கையிலிருந்த ரிமோட்டை பிடுங்கி அவன் முதுகில் ஒரு அடி கொடுத்தாள். திரும்பி நந்திதாவை முறைக்க அடுத்த அடி தனக்குத்தான் என்று ஓடி பெட் ரூமில் ஒளிந்து கொண்டாள். அங்கிருந்த பாக்கியத்திற்கு முகம் சட்டென மாறியது. அமைதியாக பால்கனிக்கு சென்று உட்கார்ந்துவிட, காயத்ரிக்கு கொஞ்சம் சங்கடம் வரவே, நகர்ந்து தன்னுடைய லேப் டாப்பில் உட்கார்ந்து கொண்டாள். அன்று முழுவதும் தன் மாமியாரை பார்க்க முடியாமல் தடுமாறினாள்.

அடுத்த நாள் காலை, ‘டேய் பிரசன்னா நான் ஒரு நாலு நாள் உன் தங்கை கிருத்திகா வீட்டுக்கு போய் வரவா? அந்த குழந்தைகளை பார்த்தும் ரொம்ப நாளாச்சுடா என்றாள். இதை கேட்டவுடன் நாம நேத்து அப்படி நடந்து கொண்டிருக்கக்கூடாதோ என்று தன்னை தானே நொந்தபடி அதே சமயம் பிரசன்னாவிற்கு நடந்தது எதுவும் தெரியாது என்பதால் அமைதியாக நின்றாள். உள்ளூரிலேயே கிருத்திகா இருப்பதால், சரிம்மா நாளைக்கு போலாம். நீ ரெடி ஆகிவிடு என்றபடி அடுத்த நாள் காலை அம்மாவை கொண்டு போய் விட்டு வந்தவன், என்ன காயத்ரி ரொம்ப டல்லா இருக்கே.உடம்பு ஏதாவது சரியில்லையா? இன்னைக்கு சனிக்கிழமை தானே. நீ ரெஸ்ட் எடு சமைக்க வேண்டாம். நம்ம எல்லாருக்கும் ஏதாவது ஆர்டர் பண்றேன் என்று சொன்னவுடன் அவளுக்கும் அந்த ஒரு நாள் ரெஸ்ட் வேண்டும் போலிருக்க சரிங்க நான் கொஞ்ச நேரம் படுத்துக்கறேன் என்று படுத்தபடி மாமியாரை பற்றி யோசித்துக்கொண்டிருந்தாள். வயதாக வயதாக பெரியவர்களும் குழந்தைகளாக மாறுவார்கள் என்பதை நாம ஏன் புரிஞ்சிக்காம நடந்து கொண்டோம் என்று யோசித்தபடியே கண் அயர்ந்து விட்டாள்.
 
Top