கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வாய்ப்பிருந்தால் வந்து போ -17

Akila vaikundam

Moderator
Staff member
17.


என் பொண்ணு எங்கயும் வரமாட்டா...அவ யாரையும் பாக்கவும் வேணாம்...யாரோட ஆசிர்வாதமும் அவளுக்கு தேவையில்லை நான் முன்னமே சொன்னது தான் உன்கிட்ட…. என் பொண்ணு வேணும்னா நீ எல்லாத்தையும் விட்டுட்டு இங்க வா...என்று கூறவும்.


ராகாவின் கைகளை தட்டிவிட்டவன்... இதுக்கு மேலயும் இங்க நின்னுகிட்டு கெஞ்சுவேன்னு எதிர்பாக்காதீங்க உங்க பொண்ணை நீங்களே பத்திரமா வச்சிக்கோங்க என்று கோபத்தில் ராகைவை பிடித்து ராமின் பக்கமாக தள்ளி விட்டபடி வேகமாக வெளியே சென்றான்.


என்னப்பா...என்று இயலாமையுடன் அழுகையுடன் கேட்டவள்... எல்லோரையும் சுற்றி பார்க்க யாருமே பூபதியை தடுத்து நிறுத்துவது போல தெரியவில்லை...நாமும் செல்லாவிட்டால் நிரநதரமாக அவனை பிரிய நேரிடும் என்று புரிந்து கொண்டவள் அவன் பின்னே ஓடத்தொடங்கினாள்.


பூபதி ப்ளீஸ்...போகாதா... கொஞ்சம் வெயிட் பண்ணு... அப்பாகிட்ட நான் பேசி சம்மதம் வாங்கறேன்…


இனி எப்படி பேசி அவர்கிட்ட சம்மதம் வாங்க போற...அதான் தெளிவா சொல்லிட்டாரே... அவருக்கு நம்ம நாட்டை பார்த்தா ஒரு இளக்காரம் இருக்கு... நம்ம ஊர் மனுஷங்களை மதிக்கறதே இல்வை... இந்த மாதிரி மனநிலைல இருக்கற அப்பா கிட்ட வளர்ந்த பொண்ணுக்கும் கண்டிப்பா இது மாதிரியான குணங்களும் இருக்கும்…


அது போல குணம் இருக்குற பொண்ணு எனக்கு வேண்டாம்...உன்னை தெரியாம பாத்துட்டேன்... தெரியாம ஆசைப் பட்டுட்டேன்...புத்தியில்லாம காதலையும் சொல்லிட்டேன்... என்னை மன்னிச்சிடு... உனக்கும் எனக்கும் என்றைக்குமே ஓத்து வராது…


இல்ல பூபதி நீ அப்பாவை தப்பா புரிஞ்சிகிட்ட... அவர் இதுபோல பேசுற ஆள் கிடையாது... நானும் அது போல பொண்ணு கிடையாது...நாங்க ரெண்டு பேருமே மனுஷங்களை மதிக்க தெரிஞ்சவங்க தான்...அவர் பேசினதை மனசுல வச்சிகிட்டு என்னை வெறுத்திடாத….இன்னைக்கு ஏன் அப்பா இப்படி எல்லாம் பேசுறாருன்னு எனக்கு தெரியல..
நான் என்னன்னு விசாரிக்கறேன்... நீ கொஞ்சம் பொறுமையா இரு…


இன்னும் எத்தனை நாள் நான் பொறுமையா இருக்குறது…. இதுவரைக்கும் நான் உங்களுக்காக காத்துகிட்டிருந்தது போதும்‌.‌.
நாளைக்கு நைட் நான் இந்தியா போறேன் இனிமே நான் எதுக்குமே லண்டன் திரும்பி வரப்போவதில்லை... உனக்கு நான் வேணும்னு தோணினா...நீ எனக்காக ‌எல்லாத்தையும் விட்டுட்டு வா ‌..இல்லையா உன் அப்பாவோட செல்ல மகளா இங்கேயே இருந்துக்கோ... என்னைத் தேடவும் செய்யாதே ..
என்கிட்ட பேசணும்னு முயற்சியும் பண்ணாத... நாளைக்கு எட்டு மணிக்கு ஃப்ளைட் உனக்காக என் மனசும் ப்ளைட்ல என் பக்கத்து சீட்டுக்கு காலியா காத்துக்கிட்டு இருக்கும்... விருப்பம் இருந்தா வா... என்று கூறியபடி அங்கிருந்து வேகமாக சென்று விட்டான்.


அழுதபடியே ராகா உள்ளே வர ராம் அங்கில்லை...பிரியாதான் கேசவ்வின் நெஞ்சில் சாய்ந்தபடி அழுத்கொண்டிருந்தார்.

பிரியாவால் ராம் கூறிய வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை... அவரின் இத்தனை ஆண்டுகால வளர்ப்பை ஒரு நிமிடத்தில் தூக்கி போட்டு விட்டாரே... அவர் பெற்ற பெண்களைவிட ராகாவின் மீது தானே அதிக பாசம் கொண்டிருந்தார்...அவரிடம் எப்படி இதுபோல் பேச முடிந்தது என நினைத்து அழுதவரை கேசவ் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்.


விடு பிரியா அவனை பத்தி உனக்கு தெரியாதா…?எப்பவுமே இப்படித்தான் யோசிக்காம பேசிட்டு பின்னாடி ஃபீல் பண்ணுவான்…


யோசிக்காம பேசறதுன்னாலும் எப்படிங்க என்னை பார்த்து இப்படி கேக்க முடியுது...இவ்ளோ நாள் ராகாவிற்காக பட்ட கஷ்டத்தை நொடியில ஓன்னுமில்லாம ஆக்கிட்டாரே...ராகா ஒருத்திக்காக தான் இத்தனை பேச்சுகளுக்கு அப்புறமும் எல்லாத்தையும் தாங்கிகிட்டு இங்க நின்னுட்டு இருக்கேன்... இல்லன்னா இந்த வீட்டோட திசை பக்கம் கூட நான் திரும்பமாட்டேன்…



சரி...ராகா, நம்மளையே பாக்கறா கொஞ்சம் அமைதியா இரு...இது பத்தி அப்புறமா பேசிக்கலாம் என அவரை சாந்தப்படுத்தினார்…பிறகு நீ ராகாவை சமாதானப்படுத்து நான்
கருத்தரங்கு போறதுக்கு ரெடி ஆகனும்...ஏற்கனவே லேட் ஆயிடுச்சு... ஃப்ளைட் மிஸ் பண்ணிட்டா அப்புறம் கலந்துக்க முடியாம போயிடும் என்று கூறியபடி அங்கிருந்து கிளம்பினார்...அவர் நகரவும் பிரியாவிடம் வந்த ராகா அப்பா பேசினதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்...மம்மி.
அதுக்காக என்னை நீங்களும் வெறுத்து ஓதிக்கிடாதீங்க... அப்புறமா நான் வாழறதுக்கே அர்த்தம் இல்லாம போயிடும்…



வாய்லயே ஒன்னு போட்டிடுவேன்... என்ன பேச்சு இது..
எல்லாம் பார்த்து ஓஞ்சிபோனது போல...யார் வெறுத்தா எனன...மம்மி நான் இருக்கேன்ல... பிறகென்ன உனக்கு கவலை...இப்போ ஒன்னும் நடக்கல மம்மி இருக்கிற வரைக்கும் உன் கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீரை வெளிய வர விடமாட்டேன்...தைரியமா இரு...பாத்துக்கலாம்... உன் அப்பாவோட பிடிவாதம் ஜெயிக்கிதா… இல்ல உன்னோட காதல் ஜெயிக்கிதான்னு என்று நம்பிக்கையூட்டும் விதமாக ராகாவிடம் ப்ரீயா பேசினார்.


மம்மி...என்று நெகிழ்வுடன் கட்டியணைத்தாள். அப்பொமுது பெட்டியை தள்ளியபடி அறையில் இருந்து வெளிப்பட்ட ராம் பிரியாவிடம் வந்து...சாரி..பிரியா.
ஏதோ உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை வெளிய விட்டுட்டேன் மனசில வெச்சுகாதே என்ன மன்னிச்சிடு... உன் அண்ணனுக்கும் உன்னை விட்டா வேற யாரும் இல்ல கோபமா இருந்தாலும் சரி சந்தோஷமா இருந்தாலும் சரி அதை நான் உன்கிட்ட தான உரிமையா காட்ட முடியும்…


இப்போ நானும் கேசவ்வும் முக்கியமான கான்ஃபரன்ஸ்க்காக பிரான்ஸ் கிளம்பறோம்...வர எப்படியும் பத்து பதினைந்து நாள் ஆயிடும்... அதுவரைக்கும் குழந்தைகளை நல்லபடியா பார்த்துக்கோ நீ இருக்கிற தைரியத்துல தான் நாங்க ரெண்டு பேரும் வெளியே போறோம்... ராகாவிற்கு புத்தி சொல்லி அவ மனசை மாத்த முயற்சி பண்ணு... கான்ஃப்ரன்ஸ் முடிஞ்சு நான் இங்க வந்ததும் விக்கிக்கும் ராகாவிற்கும் கல்யாணம்...அதை அவகிட்ட சொல்லிடு...என்ற படி ராகாவிடம் கூறிக்கொள்ளாமல் அங்கிருந்து சென்றார்.


பாருங்க மம்மி என்கிட்ட சொல்லிகாமலே போறாங்க தினமும் ஹாஸ்பிடல் போகணும்னா கூட என்கிட்ட ரெண்டு முறை சொல்லிட்டு போறவங்க இன்னைக்கு அவ்வளவு தூரம் போறாங்க ஒரு வார்த்தைக் கூட சொல்லாம போறாங்க... அப்படி என்ன நான் தப்பு செஞ்சுட்டேன்... நீங்க எல்லாருமே என்னை புரிஞ்சிப்பீங்கன்னு தானே பூபதியை காதலிச்சேன்...அதுக்காக எனக்கு இவ்ளோ பெரிய தண்டனையா….



பூபதியும் என்னை தூக்கி விசிட்டு போய்ட்டான்...இப்போ அப்பாவும் சொல்லாம போறாங்க... இதுக்கப்புறம் நான் யாருக்காக வாழனும் என்று அழுதபடியே அவளின் அறைக்குள் ஓடினாள்.


பின்னால் சென்ற பிரியா...இங்க பாரு ராகா இப்போ தான சொன்னேன் இது போல பேசக்கூடாதுன்னு... மறுபடியும் மறுபடியும் இதே போல பேசிகிட்டு இருந்தா அப்புறம் எனக்கு என்ன மரியாதை சொல்லு... அதான் நான் பாத்துக்கறேன்னு சொல்றேன்ல... அப்புறம் எதுக்காக இப்படி மனசுடைஞ்ச மாதிரி பேசுற…


என்னை என்ன பண்ண சொல்றீங்க மம்மி பூபதி தெளிவா சொல்லிட்டு போயிட்டான் எல்லாத்தையும் விட்டுட்டு என் பின்னாடி வர்றதுன்னா வான்னு... இங்க அப்பாவும் அவர் விஷயத்தில பிடிவாதமா இருக்காரு…


ஊருக்கு போய்ட்டு வந்ததும் விக்கியோட கல்யாணம் பண்ணி வைக்க போறேன்னு வேற சொல்றாங்க நான் என்ன செய்யட்டும் சொல்லுங்க…என்று அழவும் ப்ரியாவிற்கு எதை சொல்லி ஆறுதல் படுத்துவது என தெரியவில்லை எவ்வளவோ தைரியம் சொல்லிப் பார்த்தார்... ஆனால் ராகா சமாதானம் அடைவது போல் தோன்றவில்லை அழுது கொண்டே இருக்க துணைக்கு அவரின் இரு மகள்களையும் விட்டுவிட்டு அவரின் வீடு வந்து சேர்ந்தார்.


இரவு முழுவதுமே தூக்கம் இல்லாமல் தவிர்த்தார்... யாருமே இரவு உணவை தொடக்கூட இல்லை... ராகா அலைபேசியின் மூலம் பூபதியை பல முறை தொடர்பு கொள்ள முயற்சித்தாள்.


நள்ளிரவு வரை ஓயாது அடிக்கும் அலைபேசியின் சத்தத்தை கேட்க சகித்துக் கொள்ளாதவன் நள்ளிரவுக்கு மேல் அழைப்பை எடுத்தான்…


என்ன பிரச்சனை ராகா…


ப்ளீஸ் பூபதி என்ன விட்டுட்டு போயிடாத நீ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால வாழவே முடியாது…


நான் உன்னை விட்டுட்டு போறேன்னு சொல்லவே இல்லையே ராகா... உன் அப்பா தான் பிடிவாதமா நம்மள பிரிச்சு வைக்கிறார்.. நீ என்கிட்ட பேசறதை விட உன் அப்பா கிட்ட பேசறது பெட்டர்னு தோணுது... ஒரு முறை என்னோட ஊருக்கு வர்றதுல உங்களுக்கு என்ன பிரச்சனை இதுதான் எனக்கு தெரியல அதும் இல்லாம உன் அப்பா நம்ம நாட்டை பற்றி ரொம்பவே கேவலமா பேசுறாரு…


அதை என்னால ஜீரணிக்கவே முடியாது... அந்த ஒரு காரணத்துக்காகவே நீயும் வேண்டாம் உன் பொண்ணும் வேணாம்னு சொல்ல தயாரா இருக்கேன்…. ஆனாலும் நீ என் மேல வச்சிருக்கிற காதல், நான் உன் மேல வச்சிருக்கிற காதல், ரெண்டும் என்னை அப்படி சொல்ல விடாம தடுத்து வைக்கிது…


இப்போ கூட ஒன்னும் பிரச்சனை இல்ல நாளைக்கு நான் இந்தியா போறேன் நீ முடிஞ்ச அளவு உன் அப்பாவை கூட்டிட்டு வர பாரு….இல்லன்னா அவருக்கு நம்ம காதலை புரிய வைச்சிட்டு அவர் சம்மதத்தோட நீ மட்டுமாவது வா…


நான் உன் கிட்ட கொடுத்து வாக்கு அப்படியே தான் இருக்கு... என் வீட்ல எல்லாரும் உன்னை பாத்துட்டாங்கன்னா போதும் அவங்களுக்கு புடிச்சாலும் சரி பிடிக்கலனாலும் சரி உன்னை கல்யாணம் செய்யறதுல உறுதியா இருக்கேன்…


உன்னையும் உன் அப்பாவையும் என்னைக்குமே பிரிக்க மாட்டேன் இது நம்ம காதல் மேல சத்தியம் என்று மிகவும் பொறுமையாக கூறினான்.


எதிர்முனையில் அழுத ராகா என்னால என் அப்பாவை மீறி வர முடியாது பூபதி…


இன்னைக்கு அப்பா ஊருக்கு போனாங்க... என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம போயிருக்காங்க ... அதையே இந்த நிமிஷம் வரை என்னால தாங்கிக்க முடியல..



இப்போ மறுபடியும் அவர்கிட்ட உன்னை பத்தி பேச முடியாது...பேசினாலும் அவர் அதை காது குடுத்து கேக்கறது கஷ்டம்…உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னதுக்கே என்கிட்ட பேசாம போய்ட்டாங்க ...இப்போ உன்னோட நான் போறேன்னு சொன்னா
காலத்துக்கும் என்னோட பேச மாட்டாரு... எனக்கு அவர் ரொம்ப முக்கியம்‌.. அவருக்கு விருப்பமில்லாத எதையும் நான் செய்ய மாட்டேன் என்று உறுதியாக கூறினாள்.



முடிவெடுக்க வேண்டிய இடத்தில நீதான் இருக்கிற ராகா... உன் முன்னாடி இப்போ ஓரே சாய்ஸ் தான் இருக்கு…நான்,உன் அப்பா... நீ என்னை தேர்ந்தெடுத்தா உன் கண்ணில் இருந்து வர்ற கடைசி சொட்டு கண்ணீர் இப்போ நீ விடறதாதான் இருக்கும்... இதுக்கப்புறம் என் உயிர் இருக்கிற வரைக்கும் உன் கண்ணில் இருந்து கண்ணீர் வர விடமாட்டேன் ...உன் அப்பாவை விட ஆயிரம் மடங்கு உன்ன நல்லா பாத்துப்பேன்..ஒரே ஒருமுறை என்னை நம்பி,நம்ம காதலை நம்பி இந்தியா வா…


இல்ல உன் அப்பாவா இருந்தா...
இனிமே எனக்கு போன் பண்ண வேண்டாம் என்று ஃகாலை கட் செய்தான்.

அதன்பிறகு பலமுறை முயற்சித்துப் பார்க்க ஒரு முறை கூட பூபதி அவளின் ஃகாலை எடுக்கவேயில்லை.


அதிகாலை வாக்கில் அவளது அலைபேசியின் தொல்லையால் மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்தான்.



அவன் மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்த உடனே மீண்டும் பேரழுகைக்கு தயாரானாள்.


விடியற்காலையில் வந்து பார்த்த பிரியா ராகாவின் கோலத்தைக் கண்டு மிகவும் பயமாகி விட்டது... இரவு முழுவதும் அழுது இருக்கிறார் இப்பொழுதும் அழுது கொண்டிருக்கிறாள் …


எப்படி அவளை சமாதானம் செய்வது எனத் தெரியவில்லை…ராம் இடத்தில் பேச வைக்கலாம் என்று பார்த்தால் அவர் காலையிலேயே கருத்தரங்கில் கலந்துகொள்ள சென்றுவிட்டார் அவரது மொபைல் போனும் கணவரின் மொபைல் போன் ஸ்விட்ச் ஆஃப் என வர என்ன செய்வது என குழம்பி தவிக்க ஆரம்பித்தார் பிரியா.



நேரம் செல்லச் செல்ல எதுவுமே சாப்பிடாத ராகா பசி மயக்கத்தில் சோர்வடைய ஆரம்பித்தாள்…
அவளை சாப்பிட வைக்கலாம் என்று அருகில் சென்றால் அவளின் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அழுகை மீண்டும் தொடர ஆரம்பிக்க மேலும் பயம் வந்தது.


அவள் அருகே சென்று நிதானமாகப் பேச ஆரம்பித்தார் பிரியா...அப்பா ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ராகா... அவர் போனை ஆன் செய்ததுமே அவரோட பேச வைக்கிறேன்...இப்போ நீ சாப்பிடு... இப்படி பட்டினி கிடந்து என்னை கொல்லாத... என்று கூறும்பொழுது அழுகையுடனே ராகா கூறிய பதில் பிரியாவை அதிர்ச்சி அடைய வைத்தது.


அதற்காக நான் சாப்பிடாம இல்ல மம்மி... நான் அப்பாவோட பேசாம இருந்தாலும் அப்பாவால என் கூட பேசாம இருக்க முடியாது எப்படி இருந்தாலும் இன்னைக்கு இல்லனா நாளைக்கு என்னோட பேசிடுவாரு...ஆனா பூபதி எப்பவுமே என்கூட பேசமாட்டான்னு நினைக்கும்போது என்னால தாங்க முடியல…


இன்னும் கொஞ்ச நேரத்துல அவன் ஃப்ளைட் ஏறிடுவான்... அதுக்கு அப்புறம் அவனுக்கும் எனக்கும் இருக்கற எல்லா தொடர்பும் முடிஞ்சு போகுது... எப்படி நான் இந்த வேதனைல இருந்து வெளியே வரப் போறேன்னு எனக்கு சுத்தமா தெரியல ...இந்த நிமிஷம் வரைக்கும் பூபதிக்காக மட்டும்தான் என் இதயம் துடிச்சிகிட்டு இருக்கு…. கொஞ்ச நாள் பொறுமையா இருந்தா எல்லாத்தையும் சரி பண்ணிடுவேன்னு சொல்றதை கூட அவன் கேட்க தயாரா இல்ல…. இந்த சமயத்தில் என்னால் எப்படி சாப்பிட முடியும்…


ஒருவேளை நான் சாப்பிடாம பட்டினி கிடந்தா என்னை சாப்பிட வைக்கவாவது அப்பாவோட மனசு கொஞ்சம் மாறும்ல்ல…



ப்ள்ஸ் மம்மி அப்பா ஃபோன் செஞ்சா நான் சாப்பிடாம இருக்கிறேன்னு மட்டும் சொல்லுங்க ஒருவேளை அவர் எனக்காக பூபதியோட ஊருக்கு வர சம்மதிக்கலாம்ல...என்றாள்.



சரி ராகா...நீ சொன்ன மாதிரி அப்பா உனக்காக ஓத்துகிட்டா சந்தோஷம் ஒருவேளை ஒத்துக்கலன்னா….



சத்தியமா செத்துப் போயிடுவேன் மம்மி... உயிருக்கு உயிரா காதலிச்சி... இவன் தான் என்னுடைய எதிர்காலம்னு நம்பிகிட்டு இருந்தவனும் என் வாழ்க்கையை விட்டு போயிட்டான் ‌..


பெத்த பொண்ணு பட்டினி கிடந்து செத்தாலும் பரவாயில்லை என்னோட பிடிவாதத்தில இருந்து நான் கொஞ்சம்கூட இறங்கி வர மாட்டேன்னு நினைக்கற அப்பா கூட மிச்சக் காலம் வாழ்ந்து நான் என்ன சாதிக்க போறேன் சொல்லுங்க...என்று திருப்பி கேட்டாள்.


செத்துப்போயிடுவேன் என்று ராகா சொன்ன வார்த்தையை பிரியாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை ...ஒரு தாயாக மிகவும் பலகீனமாக உணர்ந்தார் .


மனதளவில் அவர் மிகவும் சோர்வடைந்து விட்டார்... இப்பொழுது அவருக்கு அவரின் மகள் வேண்டும்... ஒருவேளை ராம் கோபத்தில் பட்டினி கிடந்தால் கிடக்கட்டும் என்று கூறிவிட்டால் கண்டிப்பாக இன்னும் இரண்டு மூன்று நாட்கல் பட்டினி கிடக்கவும் தயங்கமாட்டாள்.




அவருக்கு ராகா மிகவும் முக்கியம் ராம் வந்தபிறகு தந்தைக்கும் மகளுக்கும் எத்தனை சண்டைகள் இருந்தாலும் அதை அவர்கள் பேசிக் கொள்ளட்டும் அவர் வரும்வரை அவளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு என்னுடையது என்று உணர்ந்து கொண்டவர் கண்களை அழுத்தி துடைத்தபடி …


சரி பூபதிக்கு எத்தனை மணிக்கு ஃபிளைட் என்று கேட்டார்…


இன்னும் கொஞ்ச நேரத்துல அவன் இந்நேரம் ஏர்போர்ட் போயிருப்பான் என்று சுரத்தையே இல்லாத குரலில் கூறினாள்…


சரி ஏர்போர்ட் கிளம்பு…


எதுக்கு...என்று கேட்கும் பொழுதே மீண்டும் கண்ணீர் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது…


அவனை சென்ட் ஆஃப் பண்ணிட்டு வரலாம்….


இல்ல அவன் என்னை விட்டுட்டு போறதை பாக்குற சக்தி எனக்கு கிடையாது …


அப்போ நீயும் அவனோட போ…


என்ன மம்மி உளறீங்க…


உளறல... உண்மையத்தான் சொல்றேன் உன் அப்பாவும் அங்கிளும் இங்க வர எப்படியும் பத்து, பதினைந்து நாள் ஆகும் அதுக்குள்ளே பூபதி ஆசைப்பட்ட மாதிரி நீ அவனோட ஊருக்கு போயிட்டு திரும்பி வந்திடு…



அவனோட ஆசை என்ன ஒரே ஒரு முறை அவன் ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லாரும் உன்னை பாக்கணும்... அவ்வளவு தானே...அதை ஏன் நாம தடுக்கனும்…அவன் ஆசையை நிறைவேத்தினா அவன் ஏன் உன்னை விட்டுட்டு போகபோறான்…
இந்தியா அவனோட போய்ட்டு வர்றதை நீ,நான் ,பூபதி...மூனு பேரை தவிர வேற யாருக்கும் தெரியாத மாதிரி பாத்துக்கலாம்...அப்பா வந்ததும் பூபதி வந்து மறுபடியும் கல்யாணம் பேசட்டும்….நீ அங்க போறது தானே உன் அப்பா பிரச்சனை...பூபதி வாயாலேயே வேணாம்னு சொல்ல வைக்கலாம் என்று கூறவும் சற்று பயந்த ராகா இது சரியா வருமா மம்மி... எனக்கேட்டாள்.


எல்லாம் சரியா வரும் கிளப்பு... முக்கியமானதை மட்டும் எடுத்துக்கோ...மறக்காம பாஸ்போர்ட் எடுத்துக்கோ என்று துரிதப்படுத்தினார்.


அவளும் பூபதிக்காக பிரியாவின் பேச்சைக்கேட்டு கிளம்பினாள்.


இங்கே ஏர்போர்ட்டின் உள்ளே செல்லாமல் முன்புறமாகவே பூபதி அமர்ந்திருந்தான்…கையில் ராகாவிற்கான பயண டிக்கெட் இருக்க அதையே கண் கலங்க பார்த்து கொண்டிருந்தான் .


இன்னும் அவனது இதயத்தில் ஒரு ஓரத்தில் ஒரு நம்பிக்கை இருக்கிறது ராகா எப்படியாவது அவள் தந்தையிடம் கூறி விட்டு வருவாள்...அவனது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாள் என்று நம்பிக்கையில் உள்ளே செல்ல மனம்வராமல் வாயிலிலேயே காத்திருக்கிறான்…


இன்னும் சற்று நேரத்தில் அவன் உள்ளே செல்ல வேண்டும்...போகும் பொழுது டிக்கெட்டுடன் சேர்த்து அவளது நினைவுகளையும் கிழித்து போட்டு விட வேண்டும் என்று நினைத்தபடி அமர்ந்திருந்தான்.


அப்பொழுது பிரியா ராகாவை அழைத்தபடி அங்கே வந்தார்…


அவர்களை கண்டதும் ஆச்சர்யமாக எழுந்து நின்றவன் ராகாவின் கையிலிருந்த பையை பார்த்ததும் குழம்பினான்.


ஆன்ட்டி என்ன ஆச்சி...நீங்க இங்க என்ன பண்ணறீங்க...எங்காவது ஊருக்கு போறீங்களா…?


நான் போகல...ராகா போறா...அவ எதிர்காலத்தை தேடி…


புரியல ஆன்ட்டி…


புரியறது போலவே சொல்லறேன்
பூபதி…. உன்னோட டிமான்ட் என்ன ஒருமுறை ராகாவை உன் ஊருக்கு கூட்டிட்டு போயிட்டு வரணும் அதை நான் மதிக்கிறேன் இப்போ நீ இவளை உன்னோட ஊருக்கு கூட்டிட்டு போ... அதுக்கப்புறமா இவ அப்பா ஆசைப்பட்டது போல இங்க வந்து நீ அவளைக் கல்யாணம் செய்துக்கணும் இங்கேயே செட்டிலும் ஆகணும்…


எல்லாம் சரி...ராகா இப்படி வந்தது ராம் சார்க்கு தெரியுமா…?


தெரியாது... தெரியவும் கூடாது…


என்ன ஆன்ட்டி குழப்பறீங்க…



இங்க பாரு பூபதி இவ அப்பாவும் என் கணவரும் வேலை விஷயமா வெளிநாடு போயிருக்காங்க…அவங்க வர்றதுக்கு எப்படியும் பதினைந்து நாள் ஆகும்... அதுக்குள்ளே நீ இவளை ஊருக்கு கூட்டிட்டு போய் உன் குடும்பத்தாருக்கு அறிமுகப்படுத்திட்டு மறுபடியும் இங்க கொண்டு வந்து விட்டிடு…


ஆன்ட்டி ராம் சாருக்கு தெரியாம கூட்டிட்டு போறது தப்பில்லையா... அவருக்கு தெரிஞ்சா தேவையில்லாத பிரச்சனை தான் வரும்... நான் ராகாவை கூட்டிட்டு போக மாட்டேன்...நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க….


புரியாம பேசாத பூபதி...
நேத்து நீ வந்துட்டு போனதிலிருந்து இந்த நிமிஷம் வரைக்கும் ராகா பச்சைத்தண்ணி கூட குடிக்கல... அது மட்டும் கிடையாது..
விடாம அழ மட்டும்தான் செஞ்சிருக்கா..


கொஞ்சம் யோசிச்சு பாரு ஒரு அம்மாவா என்னால எப்படி அதை பாத்துக்கிட்டு இருக்க முடியும்னு…


அதான் முடிவு பண்ணினேன் அவ இங்க இருந்து கஷ்டப்படறதுக்கு உன்னோட வரட்டும்னு…அவங்க அப்பாவை நான் சமாளிச்சிக்கறேன்...நீங்க கிளம்புங்க…


இல்ல ஆன்ட்டி நீங்க என்ன காரணம் சொன்னாலும் என்னால ஏத்துக்க முடியாது என்றவன் ராகாவை பார்த்து உன் அப்பாக்கு தெரியாம நீ என்னோட வர்றது ஒன்னும் சாதாரண விஷயம் கிடையாது இப்படி பண்றது மிகப் பெரிய தப்பு நீ ஒழுங்கா வீட்டுக்கு போய் சாப்பிடு…


உங்க அப்பா சம்மதிக்கற வரைக்கும் நான் உனக்காக காத்துகிட்டிருக்கேன்... எனக்கு நம்ம காதல் மேல நிறையவே நம்பிக்கை இருக்கு…


பூபதி அவங்க அப்பா என்னைக்குமே சம்மதிக்க போறது இல்ல….நீங்க காத்திருக்கறதுல பிரயோஜனம் கிடையாது... ஊர்ல இருந்து வந்ததும் இவளை விக்கிக்கு கல்யாணம் செஞ்சி வைச்சிடுவாரு…


வாட் நான்சென்ஸ்...இந்தியாவிலேயே இப்போ கட்டாய கல்யாணம் கிடையாது... அப்படி இருக்கும் போது லண்டன்ல எப்படி பாஸிபிள்…



எல்லாம் பாஸிபிள் தான்...இங்க அவ அப்பா பண்ணிவைப்பாரு...இவளும் அவருக்காக பண்ணிப்பா….



அதுக்காக அவங்க அப்பாக்கு தெரியாம எப்படி இவளை கூட்டிட்டு போக முடியும்…
என்று கேட்டவனின் முன்பு வந்த ராகா...


நேத்து நைட் கூட சொன்னேன்ல எனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வான்னு... அதான் எல்லாத்தையும் விட்டுட்டு வந்திருக்கேன் பூபதி என்று கண் கலங்க கூறவும்…


பைத்தியம் மாதிரி பேசாத... நான் அப்படி சொன்னேனா அதற்கான அர்த்தம் உன்னோட அப்பாவோட ஃபைட் பண்ணி அவர்கிட்ட சொல்லிட்டு வெளியே வான்னு அர்த்தம்...இப்படி திருட்டுதனமா ஓடிவர சொல்லல்ல…


இப்பொழுது பிரியா கோபமாக பார்த்து கொஞ்சம் யோசிச்சு பேசு பூபதி...அவ திருட்டுத்தனமாக ஓன்னும் ஓடி வரல...உன் காதலுக்காக வந்திருக்கா…


நீ தான‌ அவ அப்பாகிட்ட சொன்ன...ஒருமுறை ராகாவை உன் வீட்ல இருக்கிற எல்லார்கிட்டயும் காட்டணும்னு…


அதுக்கப்புறமா இங்கு வந்து அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லியிருக்க... அதை நம்பி தான் நாங்க ரெண்டு பேரும் இவ்வளவு தூரம் வந்திருக்கோம்…


என்னைக்குமே ராம் அண்ணா ராகாவை இந்தியா அனுப்ப போறதே கிடையாது அப்படி இருக்கும் பொழுது இது மாதிரி ஏதாவது ஒரு காரியம் செஞ்சா மட்டும் தான் நீ அவளைக் கல்யாணம் செஞ்சுக்க முடியும் ...உண்மையிலேயே நீ ராகாவை மனசார காதலிச்சி இருந்தா அவளை இப்படி தவிக்க விடாம இப்போ
உன்னோட கூட்டிட்டு போறது தான் சரியான முடிவுன்னு எனக்கு தோணுது இதுக்கப்புறம் உன்கிட்ட நான் இது பற்றி பேச போறது இல்ல ஆனா ஒன்னு மட்டும் உறுதியா தெரிஞ்சுக்கோ உன்னை கல்யாணம் பண்ண முடியாம போனா... என் பொண்ணு கண்டிப்பா உயிரோடு இருக்க மாட்டா... அது மட்டும் நிஜம்…என்று முடித்தார்.



என்ன செய்வது என்பது போல் யோசித்தவன் பிரியா கூறுவதில் இருந்த உண்மையையும் உணர்ந்தான்…



சரி ஆன்ட்டி இப்போ இவளை நான் கூட்டிட்டு போனா அவ அப்பாவை எப்படி சரிகட்டுவீங்க…



அத நான் பாத்துக்குறேன் எப்படியும் ஒரு நாளைக்கு ஒரு தடவையோ இல்லனா ரெண்டு தடவைதான் ஃபோன் பண்ணிப் பேசுவாரு அந்த சமயத்துல ராகா தூங்குறா ...காலேஜ் போயிட்டா ஸ்பா போயிட்டான்னு எதாவது ஒன்னை சொல்லிக்கிறேன்... ஆனா எனக்காக நீ ஒரு சத்தியம் பண்ணனும் எப்படி என் பொண்ணை ன உன்கிட்ட ஒப்படைக்கிறேனோ அதேமாதிரி சரியா பதினைந்தாவது நாள் நீ அவளை என் கையில் ஒப்படைக்கனும்... அவளுக்கு எந்த வகையிலும் சின்ன பாதிப்பு கூட வராத மாதிரி நீ தான் பார்த்துக்கனும் எனக்காக அதை பண்ணுவியா என்று கேட்கவும் எதுவுமே பேசாமல் அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றவன்…



எந்த ஒரு அம்மாவும் செய்யாத காரியத்தை என் மேல நம்பிக்கை வைத்து நீங்க செய்றீங்க என்னோட உயிர் இருக்கிற வரைக்கும் அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன்…



உங்களுக்கு இப்போ நான் வாக்கு தர்றேன்... எந்த நம்பிக்கையில உங்க பொண்ணை என்னோட அனுப்பி வைக்கறீங்களோ….அந்த நம்பிக்கையே என்னைக்குமே நான் உடைக்க மாட்டேன்…. அவளை என் உயிருக்கும் மேலா பாதுகாப்பேன்… இது என் அம்மா மேல சத்தியம்…
இப்போ எனக்கு நிறையவே பொறுப்பு இருக்கு ஆன்ட்டி…


எனக்காக அவ அப்பாவோட நம்பிக்கையை உடைச்சிட்டு என் பின்னாடி வர்றா...இவளை இனி யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன்…ராம் சார் மட்டும் இல்ல ஆண்டவனே தடுத்தாலும் இந்த ஜென்மத்துல ராகா தான் என்னோட மனைவி என்றவன்...நாங்க கிளம்பறோம் என்று கூறினான்.


பத்திரமா கூட்டிட்டு போய்ட்டு கொண்டு வந்துவிட்டிடு என்று மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்திய பிரியா ராகாவை அழைத்து சில அறிவுரைகளைக் கூறினார் .


எல்லாம் அவளின் சுய பாதுகாப்பை பற்றி தான் இங்கிருந்து பல்லாயிரம் கிலோமீட்டர் தாண்டி அழைத்து செல்பவனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என பாடமே எடுத்தார்...


எல்லாம் அவனின் காதில் விழுந்தாலும் கூட கேட்காதது போல தள்ளி நின்று அவனுக்குள்ளாகவே சிரித்துக்கொண்டான்…


இந்தியாவாக இருந்தாலும் சரி லண்டனாக இருந்தாலும் சரி... பெண்கள் எப்பொழுதுமே பெண்கள் தான்...என நினைத்துக் கொண்டான்.


இங்கே ராகாவிடம் இருந்த மொபைல் போனை பிரியா வாங்கிக்கொண்டார்..
ஒருவேளை ராம் ராகாவிற்கு போன் செய்யும் பொழுது அவளின் லொகேஷனை அது காட்டி விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை..
ஒருவேளை அவர் ஃகால் செய்தாலும் கூட பிரியாவே பேசி சமாளிப்பது என ஏற்பாடு... மெசேஜ் எதுவும் செய்தால் அதற்கு பிரியாவே ரிப்ளே செய்து விடுவதாக கூறினார்... முக்கியமான ஃகாலாக இருந்தால் ஃகாலை பூபதியின் எண்ணிற்கு மாற்றிவிடுவது என பயங்கரமாக திட்டம் போட்டார்...
கடைசியாக பிரியாவை கட்டியணைத்து ராகா கண்கள் கலங்க போய்ட்டு வர்றேன் மம்மி...என்றவளிடம் கண்கள் கலங்க பிரியாவும் தலையசைத்தார்.


அருகில் வந்த பூபதி...சரி வா ராகா உள்ள போகலாம்...இப்போ போனா தான் செக்கிங் முடிஞ்சி போக சரியா இருக்கும் என்றவன் அப்பொழுது தான் அவளின் வலக்கையை கவனித்தான்…ஹேய் இன்னும் இதை கழட்டலையா என்று தாயத்தை பார்த்து கேட்டான்….


இல்ல என் கையோட செட் ஆயிடுச்சி அதான் விட்டுட்டேன் என்றாள்.


ஆனா இமிக்ரேஷன்ல அலோவ் பண்ண மாட்டாங்க….ஆன்ட்டி கிட்ட கழட்டி குடுத்திடு... திரும்பி வந்ததும் கட்டிக்கோ என்றான்.


பிரியா சற்று தயங்கவும்... ஆன்ட்டி எப்படி இருந்தாலும் ஆபீசர்ஸ் கழட்ட வெச்சுடுவாங்க ...அவங்க முன்னாடி கழட்டினா யோசிக்காமல் குப்பை தொட்டியில் தூக்கி வீசிடுவாங்க...அப்படி இல்லன்னா தேவையில்லாம செக்கிங்கற பேர்ல நிக்க வச்சிடுவாங்க…. எதுக்கு பிரச்சினை... நீங்களே எடுத்துட்டு போய் வீட்ல வைங்க என கழட்டி கொடுத்தான்…



சரி என்ற பிரியா அதை வாங்கிக் கொண்டவர் வீட்டிற்குச் சென்றதும் பூஜையறையில் வைத்து மனம் உருக வேண்டிக் கொண்டார் மகளின் பாதுகாப்பிற்காக மந்திரித்து கட்டிய தாயத்து ‌.. இன்று சந்தர்ப்ப சூழ்நிலையால் கழட்டும் படியாகிவிட்டது...அதற்காக அவர்களுக்கு துணை போகாமல் இருந்துவிடாதே கடவுளே என்று வேண்டிக் கொண்டார் அதன் பிறகு அவரின் இரு மகள்களையும் அழைத்தவர் அக்கா முக்கியமான எக்ஸாமுக்காக படிக்கறா... அதனால அக்காவை தேடிக்கிட்டு அவ வீட்டுக்கு போகக்கூடாது என்றும் கூறிவைத்தார்.



இங்கே ஏர்போர்ட்டில் எல்லா செங்கிங்கும் முடிந்து மதுரைக்குச் செல்லும் விமானத்தில் ராகாவும் பூபதியும் ஏறி அமர்ந்தார்கள்... சற்று முன் தான் அவளுக்கு பிடித்தவற்றை சாப்பிட வாங்கிகொடுத்தான்…
திருப்தியாக உண்டவளுக்கு விமானத்தில் ஏறியதுமே தூக்கம் வர ஆரம்பித்துவிட்டது... முதல் நாள் முழுவதும் உறங்காமல் இருந்ததால் பூபதிக்கும் கண்கள் சொக்க ஆரம்பித்தது…


இருவருமே ஒருவர் மீது ஓருவர் சாய்ந்த படி அமர்ந்து கொண்டனர்… மகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக ராம் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டார் ஆனால் விதி அவளை எதிரியின் குகைக்கே அழைத்துச் செல்கிறது….



உலகில் தோன்றும் ஒவ்வொரு மனித உயிருக்கும் ஒவ்வொரு கடமை உண்டு... அதை நாம் எவ்வளவுதான் தடுத்து நிறுத்தினாலும் அந்த ஆன்மா விற்கான கடமையை அது நிறைவேற்றியே ஆகவேண்டும்... அதற்கான சந்தர்ப்பத்தை விதியே ஏற்படுத்தியும் கொடுக்கும்...அது போல தான் பூபதியின் காதலை காரணம் காட்டி ராகாவை அழைத்துச் செல்கிறது அவளின் விதிப்பயன்.


எந்த ஊர் காற்றுக்கூட மகளின் மீது படக்கூடாது என்று பொக்கிஷமாக இருபது ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வளர்த்தாரோ...அந்த ஊரில் அவளின் கடமையை செய்ய ...அவளுக்கே தெரியாமல் வானில் பறக்க ஆரம்பித்து விட்டாள்…



அவளை பாதுகாக்கத் துடித்த கலைவாணியின் ஆன்மா இப்பொழுது மண்ணுக்கடியில்…. கடவுள் காப்பாற்றுவார் என்று நம்பி கட்டிய தாயத்து இப்பொழுது பிரியாவின் பூஜையறையில்…. அவளுக்கான ஆபத்து அவளின் பிறந்த ஊரில் காத்துக் கொண்டிருக்க இது எதுவும் அறியாத பூபதி சந்தோஷத்துடன் அவளை அழைத்துச் செல்கிறான்...

 
Top