Annapurani Dhandapani
Active member
காதல் மொழி - 10
செல்வி இப்போது சமைக்கவும் செய்தாள். கொஞ்சம் கொஞ்சமாக வடஇந்திய உணவுவகைகளை மாமியார் செய்வதைப் பார்த்து ஓரளவு கற்றுக்கொண்டாள்.
கௌரி தன்னுடைய கிராமத்துக்கு செல்ல வேண்டியிருந்தது. போய் வர இரண்டு நாட்கள் ஆகும். அவளுடைய உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அவரைப் பார்த்துவிட்டு அப்படியே தங்கள் நிலத்திலிருந்து கிடைக்கும் குத்தகைப் பணத்தை வாங்கிக் கொண்டு வருவதற்காக அவள் மட்டும் கிராமத்துக்குப் புறப்பட்டாள்.
வீட்டில் செல்வி பார்த்துக் கொண்டு விடுவதாக கூறியிருந்ததால் கௌரி கிளம்பினாள்.
எப்போதும் போல விராட் வேலைக்குச் சென்றுவிட்டான். தீன்தயாளுடன் சேர்ந்து உணவருந்திவிட்டு செல்வி தன் வேலைகளில் மூழ்கினாள்.
மாலை விராட் வருவதற்கு தாமதமாகியது. எப்போதும் ட்யூஷன் வகுப்புகள் முடியும் போது வந்துவிடுவான். இன்று வகுப்புகள் முடிந்து இரண்டு மணி நேரமாகிறது. இன்னும் இவனைக் காணோமே என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே காவலர் ஒருவர் அவனைக் கைதாங்கலாக அழைத்து வந்து வீட்டில் விட்டார்.
உள்ளே வரும்போதே மூக்கை உறிஞ்சிக்கொண்டே வந்தான். நன்றாக காய்ச்சல் வந்திருந்தது. கண்களும் முகமும் சிவந்திருந்தது. ஏற்கனவே சிவந்த நிறத்தில் இருக்கும் முகம் இன்னும் சிவந்து விட்டது. அவனால் நிற்கவே முடியவில்லை. தள்ளாடியபடியே வந்தான். தீன்தயாள் மகனைப் பார்த்துவிட்டு ஓடி வந்து அவனைக் கைதாங்கலாக பிடித்து அழைத்து வந்து தான் எப்போதும் அமரும் சாய்வு நாற்காலியில் அமர வைத்தார்.
"க்யா ஹுவா?" செல்வி காவலரிடம் பதறியபடி கேட்டாள்.
"அவருக்கு பயங்கர ஜுரம். மத்யானத்துக்கு மேலேர்ந்தே தலை வலின்னு சொல்லிகிட்டு இருந்தாரு. தீடீர்னு ஜுரம் வந்திடிச்சி! டாக்டர்கிட்ட போயிட்டுதான் கூட்டிட்டு வரேன். இந்தாங்கம்மா! இந்த மருந்தெல்லாம் தரச் சொன்னாரு!" என்று சொல்லி டாக்டரின் சீட்டையும் வாங்கிய மருந்துகளையும் கொடுத்தார்.
விராட்டை அவருடைய உதவியுடனேயே மாமனாரின் அறைக்குள் படுக்க வைக்க மாமனாரிடம் சைகை செய்தாள். அவர்கள் இருவரும் அவனை தீன்தயாளின் அறையில் படுக்க வைத்தனர்.
நன்றி சொல்லி காவலரை அனுப்பிவிட்டு உள்ளே வந்தாள். விராட்டின் நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள். சரியான காய்ச்சல். மாடிக்குச் சென்று அவன் வீட்டில் அணியும் உடைகளை எடுத்து வந்து மாமனாரிடம் கொடுத்து விராட்டுக்கு உடை மாற்றும்படி சைகை செய்து வெளியில் வந்தாள்.
புழுங்கரிசிக் கஞ்சி செய்து எடுத்துக் கொண்டு விராட்டிடம் வந்தாள். மயக்கத்தில் கிடந்த அவனை எழுப்பி கஞ்சியை குடிக்கச் செய்து மருந்தையும் உட்கொள்ள வைத்தாள். மருந்து உட்கொண்டபின் அவன் திரும்பவும் மயங்கினான். அவனுக்குப் போர்த்திவிட்டுவிட்டு ஃபேனை மட்டும் போட்டுவிட்டு வெளியே வந்தாள்.
மாமனாரும் அவளும் சேர்ந்து இரவு உணவை உண்டு முடித்தனர். வேலைகளை முடித்துவிட்டு படுக்கப் போகும்போது மாமனாரிடம் எதுவானாலும் எப்போது வேண்டுமானாலும் தன்னை எழுப்ப தயங்க வேண்டாம் என்று கூறிவிட்டு எதிரில் இருக்கும் தன்னுடைய அறையில் சென்று படுத்தாள்.
விராட்டுக்காக கதவைத் தாழிடாமல் வெறுமே சாத்திவிட்டு உறங்கத் தொடங்கினாள். கண்ணைச் சொருகி நன்றாக இழுத்துக் கொண்டு செல்லும்போது விராட்டின் இருமல் சத்தம் கேட்டு அவசரமாக எழுந்தாள். ஓடிச்சென்று கதவைத் திறந்து கொண்டு போய் பார்க்கும் போது விராட் தலையைப் பிடித்துக் கொண்டு இருமிக் கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தான். மாமனார் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்.
இருமும் போது அவனுக்கு தலை வலித்தது. சூடாக வெந்நீர் கொடுக்கலாம் என்று நினைத்துத் திரும்பும் போது விராட் பயங்கரமாக இருமி இருமி வாந்தியெடுத்தான். அறை முழுக்க வாந்தி! அறையில் அசைவு தெரிகிறதே என்று மாமனார் எழுந்து பார்த்தார். வாந்தி எடுத்து முடித்ததும் அவனே எழுந்து போய் பாத்ரூமில் சென்று வாய் கொப்பளித்து விட்டு வந்தான். அவ்வளவு தெம்பு தான் அவனுக்கு இருந்தது. பாத்ரூமில் இருந்து வந்து திரும்பவும் கட்டிலில் விழுந்தான். மயங்கி விட்டான். ஆனால் நன்றாகத் தூங்காமல் நடுநடுவே அனத்திக் கொண்டே இருந்தான்.
செல்வி மாமனாரின் உதவியுடன் அறையைக் கழுவி சுத்தம் செய்தாள். பிறகு மாமனாரை உறங்கச் சொல்லிவிட்டு மணி பார்த்தாள். பத்தே முக்கால் ஆகியிருந்தது. தன்னுடைய அம்மாவுக்கு போன் செய்தாள்.
"என்ன செல்வி! இந்த நேரத்ல போன் பண்ண மாட்டியே! என்னம்மா ஆச்சு?" என்று பதட்டமானாள் அன்னை.
"பயப்படாதீங்கமா! சின்னவருக்கு பயங்கர ஃபீவர். கோல்டும் தலைவலியும் இருக்கு. இப்பதான் ஒரு முறை வாமிட் பண்ணாரு. அனத்திகிட்டே இருக்காரு! எனக்கு ஃபீவர் வந்தா கஷாயம் போட்டுத் தருவீங்களே! அது எப்டி செய்யணும்னு சொல்லுங்மா!"
"ஏம்மா! அத்த இல்ல வீட்ல?"
"இல்லமா! கிராமத்துக்குப் போய்ருக்காங்க!"
மங்கையிடம் கஷாயத்தின் செய்முறையை அறிந்து கொண்டு அதே மாதிரி கஷாயத்தைச் செய்து எடுத்துக் கொண்டு போய், விராட்டை எழுப்பி கஷாயத்தை குடிக்கச் செய்தாள்.
"யே க்யா பாபி?"
"தவா ஹை.. பீயோ.." என்றாள்.
அவன் அதை வேண்டா வெறுப்பாக குடித்தான். அவன் அதைக் குடித்து முடித்ததும் படுக்கச் சொன்னாள். ஆனால் அவனக்கு திரும்பவும் வாந்தி வரும் போல இருந்தது. அதனால் உட்கார்ந்தபடியே இருந்தான். அங்கிருந்த நாற்காலியில் செல்வி அமர்ந்தாள். சிறிது நேரத்தில் தலைபாரம் கொஞ்சம் இறங்கியது போல உணர்ந்தான். தொண்டை வரட்சியும் கொஞ்சம் அடங்கியது போல உணர்ந்தான். பேசாமல் அப்படியே படுத்தான். சில நிமிடங்களில் உறங்கிப் போனான். செல்வி வந்து நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள். சூடு கொஞ்சம் தணிந்தது போல இருந்தது. போர்த்திவிட்டாள். லைட்டை அணைத்துவிட்டு உறங்கப் போனாள்.
காலை எழுந்து பல்துலக்கி வந்து முதலில் விராட்டை பார்த்தாள். அவன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள். ஜுரம் இருந்தது. ஆனால் நேற்றைய அளவுக்கு இல்லை.
யோகாவை முடித்து குளித்துவிட்டு வந்து சுவாமி விளக்கேற்றினாள். பாலைக் காய்ச்சி டீயைப் போட்டாள். மாமனார் எழுந்து வந்தார். அவரிடம் டீயைக் கொடுத்துவிட்டு தானும் குடித்தாள். தனக்கும் மாமனாருக்கும் எளிமையாக சமைத்து எடுத்து வைத்தாள். வீட்டு வேலைகளை ஒவ்வொன்றாக செய்ய ஆரம்பித்தாள். துணியை துவைத்து மாடியில் உலர்த்திவிட்டு வரும்போது விராட் எழுந்திருந்தான். மணி ஒன்பது ஆகியிருந்தது.
"குட் மானிங்! விராட்ஜி! ஹௌ டு யூ ஃபீல் நௌ?"
"குட் மானிங்! பாபி! யா! ஃபீலிங் பெட்டர்!"
"ப்ரஷ் பண்ணிட்டு வாங்க! கஞ்சி தரேன்! குடிச்சிட்டு டேப்லெட்ஸ போட்டுக்குங்க!" சொல்லிக் கொண்டே சமையலறையில் நுழைந்தாள். விராட்டுக்காக கஞ்சி போட்டு வைத்தாள். மாமனார் மாடி பாத்ரூமிலிருந்து விராட்டின் ப்ரஷ்ஷை எடுத்து வந்து தந்தார். விராட் பல்துலக்கிவிட்டு வந்து வீட்டுக் கூடத்தில் அப்பாவின் சாய்வு நாற்காலியில் அமர்ந்தான்.
கஞ்சியை சரியான சூடில் ஆத்தி எடுத்து வந்து கொடுத்தாள்.
"ஹ்ம்! கஞ்சியா? உவ்வ!"
"குடிங்க விராட்! ஃபீவர் சரியாகணும்ல!"
வேண்டா வெறுப்பாய் கஞ்சியை முழுங்கி வைத்தான். செல்வி மாத்திரைகளையும் வெந்நீரையும் கொடுத்தாள். அதையும் முணுமுணுத்துக் கொண்டே முழுங்கினான்.
தன்னுடைய கைபேசியைத் தேடினான். செல்வி எடுத்து வந்து தந்தாள். அவன் தன் உயர் அதிகாரிக்கு அழைத்து விடுப்பு கூறினான். நேற்று மாலை வந்த காவலர் வந்து பார்த்தார். அவருக்கு நன்றி கூறி விட்டு மருத்துவருக்கும் மருந்துக்கும் அவர் செலவு செய்த தொகையை கேட்டு அவரிடம் அதைக் கொடுக்கச் சொல்லி அண்ணியிடம் கூறினான். அவளும் கொண்டு வந்து கொடுத்தாள். அவர் மறுக்காமல் பணத்தை வாங்கிக் கொண்டு நன்றி கூறிவிட்டு சென்றார்.
விராட் செய்தித் தாளை விரித்து வைத்து தலைப்பு செய்திகளை பார்க்க ஆரம்பித்தான். செய்தித் தாளைப் பார்க்கும் போதே திரும்பவும் தலைவலியை உணரத் தொடங்கினான். அதனால் அதை அப்படியே போட்டுவிட்டு எழுந்து போய் படுத்தான்.
"என்னாச்சு விராட்?"
"தலை வலிக்கிது பாபி! ஆ! விண் விண்னு தெரிக்கிது பாபி!"
"ஓ! மை காட்! சரி நீங்க படுங்க! நான் இப்ப வரேன்!" சொல்லிவிட்டு சுக்கை இழைத்து எடுத்து வந்தாள்.
"ஓ நோ! நோ கஷாயம் பாபி!"
"இல்ல இல்ல! நீங்க படுங்க! இது எக்ஸ்டர்னல்தான்! ஹாஃப் அன் அவர்ல தலைவலி போய்டும்!" சொல்லிக் கொண்டே அவனுக்கு நெற்றியில் பத்து போட்டுவிட்டு தூங்கச் சொன்னாள்.
"பாபி! லஞ்சுக்கு கஞ்சி வேணாம். ப்ளீஸ்!"
"என்ன விராட் நீங்க? ஸ்கூல் படிக்கற பையன் மாதிரி அடம் பிடிக்றீங்க?"
"ப்ளீஸ் பாபி! வாயெல்லாம் கசக்குது!"
"சரி சரி! நான் வேற எதாவது பண்ணித் தரேன்! நீங்க நிம்மதியா தூங்குங்க!"
விராட் நன்றாகத் தூங்கி எழுந்தான். தலைவலி விட்டிருந்தது.
செல்வி அவனுக்கு மிளகு ரசம் வைத்து காரமில்லாமல் பீன்ஸ் பொரியல் செய்திருந்தாள். சாப்பிடும் அளவு மிதமான சூட்டில் ரசம் சாதத்தை குழையப் பிசைந்து பீன்ஸ் பொரியலுடன் ஸ்பூன் போட்டு விராட்டிடம் கொடுத்தாள். வேண்டா வெறுப்பாய் சாப்பிட ஆரம்பித்தான். கசந்த வாய்க்கு ரசம் நன்றாக இருந்தது. பொரியலும் பிடித்தது. மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடித்தான்.
"தேங்க்ஸ் பாபி! நல்லா இருந்தது. ரொம்ப தேங்கஸ்!"
"சரி! அப்டியே இந்த டேப்லெட்ஸயும் முழுங்குங்க!" கட்டளையிட்டாள்.
"ஹையோ!" அதையும் முழுங்கினான். போய் படுத்து தூங்கியே விட்டான்.
மாலை ட்யூஷன் எடுக்கும் போது கௌரி வர ஒரு வாரம் ஆகும் என்று போன் செய்தாள்.
"சரி அத்த! நான் பாத்துக்கறேன். நீங்க மெதுவா வாங்க!" என்றாள்.
மறுநாள் அவனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றாள். அவர் மேலும் சில மருந்துகள் எழுதித் தந்தார்.
விராட் இரண்டு நாட்கள் ஜுரத்தில் அவஸ்த்தைபட்டுவிட்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தேற ஆரம்பித்தான். செல்வி அவனைக் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டாள். கொஞ்சம் புளிப்புத் தூக்கலாக காரம் கம்மியாக ரசம் வைத்துக் கொடுத்தாள். காரம் இல்லாமல் பொரியல் செய்தாள். இட்லி செய்து காரமில்லாமல் தேங்காய் சட்னி செய்து கொடுத்தாள். ஜுரம் விட்ட பின் அவன் உடலில் தெம்பு வர சூப் செய்து கொடுத்தாள். பருப்பு சாதம் நெய் ஊற்றி குழையப் பிசைந்து கொடுத்தாள். கொஞ்சம் கொஞ்சமாக உடல் நிலை தேறினான். ஒரு வார விடுப்புக்குப் பின் வேலைக்குச் செல்லத் தொடங்கினான்.
கௌரி வந்த பின் தீன்தயாள் மனைவியிடம் செல்வி விராட்டுக்காக செய்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினார். தூங்காமல் விழித்திருந்து, வாந்தியெல்லாம் கழுவிவிட்டு, நெற்றியில் பத்து போட்டு, மருத்துவரிடம் கூட்டிச் சென்று, கசந்த வாய்க்குப் பிடித்த மாதிரி சமையல் செய்து, கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டாள் என்று சைகை பாஷையில் தெரிவித்தார்.
கௌரி செல்வியை அணைத்து நெற்றியில் முத்தமிட்டாள். அவள் கண்கள் குளமாகியது. அதைக் கண்டு செல்வி தன் துப்பட்டாவால் கௌரியின் கண்ணைத் துடைத்து விட்டாள்.
"என்ன அத்த! சுரஜ்க்கு தம்பின்னா, எனக்கும் தம்பிதானே! என் தம்பிய நான்தானே கவனிச்சிக்கணும்! அதுக்கு போய் கண் கலங்கறீங்களே! சின்ன குழந்தை மாதிரி!" கண்ணைத் துடைத்து மாமியாரைத் தேற்றி விட்டு ட்யூஷன் பிள்ளைகளுக்காக மாடிக்கு விரைந்தாள்.
இவர்கள் பேசுவதைக் கேட்டபடியே வந்த விராட்டுக்கு கண்கலங்கியது. இவங்க என்ன தம்பியா நெனச்சிருக்காங்க! எனக்காக என்னல்லாம் செய்தாங்க! நான் எடுத்த வாந்திய கூட முகம் சுளிக்காம துடைச்சிருக்காங்க! டாக்டர்ட்ட கூட்டிட்டு போனாங்க! வாய்க்குப் பிடிச்ச மாதிரி சமைச்சுப் போட்டு வேளா வேளைக்கு மருந்து குடுத்து ஃபீவர் விட்டப்புறம் சூப் செஞ்சு குடுத்து.. நான் இவங்களப் போய் சந்தேகப் பட்டுட்டேனே! சே! என் புத்திய எத வெச்சு அடிக்கறது என்று நினைத்து வருந்தினான். அவன் மட்டும் என் கைல கெடச்சான், சட்னிதான்! மனதுக்குள் கருவிக் கொண்டான்.
அண்ணி நல்லவங்கதான்.. ஆனா.. அந்த ஒரு விஷயத்தில மட்டும் அண்ணிய மன்னிக்கவே மாட்டேன்.. என்றும் நினைத்துக் கொண்டான்.
செல்வி மறுநாள் மதியம் விராட்டுக்கு உணவு எடுத்துக் கொண்டு விராட் வேலை செய்யும் காவல் நிலையத்துக்குச் சென்றாள்.
"என்ன பாபி! இவ்ளோ தூரம்? எதுனா ப்ரச்சனையா?"
"இல்ல விராட்ஜி! உங்களுக்காகதான் வந்தேன். இப்பதான் உடம்பு தேறியிருக்கு! வெளிய சாப்ட்டா திரும்பவும் உடம்பு கெட்டுடும்ல. மருந்து மாத்திரை வேற நெறைய சாப்பிட்டிருக்கீங்க! வயிறு புண்ணாகி இருக்கும். அதான் லஞ்ச் கொண்டு வந்தேன்."
"ஸோ கைண்ட் ஆஃப் யூ பாபி! பஹுத் பஹுத் ஷுக்ரியா பாபி!" என்று நன்றி கூறினான்.
சாப்பாட்டை அவனிடம் கொடுத்துவிட்டு கிளம்பினாள்.
விராட் சூரஜுக்கும் தீபிகாவுக்கும் போன் செய்து செல்வி செய்த அனைத்தையும் சொன்னான். சூரஜ் மனதுக்குள் மனைவியை எப்போது பார்க்கப் போகிறோம் என்று ஏங்கத் தொடங்கினான். தீபிகா செல்விக்கு போன் செய்தாள்.
"பாபி! சூப்பர் பாபி! சின்ன அண்ணன் போன் பண்ணினார்! நீங்க க்ரேட்!"
"சுட்கி! இது என் கடமைடா! எனக்கு ஆனந்தனுக்கும் விராட்டுக்கும் டிஃபரென்ஸே இல்லை! ரெண்டு பேரும் எனக்கு ஒண்ணுதான். அதே மாதிரி நீயும் ஆனந்தியும் எனக்கு ஒண்ணுதான்டா!"
"பாபி! ரியலி யூ ஆர் க்ரேட்! உங்கள எங்க பாபியா அடைஞ்சதுக்கு நாங்கதான் குடுத்து வெச்சிருக்கணும்." என்றாள் தீபிகா.
செல்வியின் பெற்றோர் போன் செய்து விராட்டிடம் நலம் விசாரித்தனர். செல்வியின் சித்தப்பா சித்தியும் கூட போன் செய்து நலம் விசாரித்தனர்.
ஆனந்தன் போன் செய்தான்.
"ஹாய் விராட்! ஹௌ ஆர் யூ நௌ?"
"யா! ஃபைன்! கொஞ்சம் அவஸ்தை பட்டேன். ஆனா பாபி என்ன நல்லா கவனிச்சுகிட்டாங்க!"
"அக்கா எப்பவுமே அப்டிதான்! கேர் டேக்கர்!"
"ஆமா!"
"வேலையெல்லாம் எப்டி போகுது?"
"அதுக்கென்ன? டைட்டாதான் இருக்கு! லீவ் வேற போட்டேன்ல! உங்க வேலை எப்டி போகுது!"
"யா! ஃபைன்! டேக் கேர்! பை விராட்!"
"பை ஆனந்த்!"
விராட்டுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. தமிழ்காரங்கன்னா செல்ஃபிஷ்ஷா இருப்பாங்கன்னு நெனச்சேன். இவங்க எல்லாரும் போன் பண்ணி இவ்ளோ அக்கறையா விசாரிக்கறாங்களே! என்று நினைத்தான். சிறிது நேரத்தில் மற்றொரு போன் வந்தது. ஏதோ தெரியாத நம்பர்.
"ஹலோ சப் இன்ஸ்பெக்டர் விராட் ஹியர்!" போலீஸ் மிடுக்குடன் குரல் கொடுத்தான்.
"ஹலோ!" ஒரு பெண் குரல் கேட்டது.
"ஜி! போலியே!" கேட்ட குரலாய் இருக்கிறதே என்று நினைத்தாலும் மிடுக்கு குறையாமல் பேசினான்.
"ஐம் ஆனந்தி! டமில்செல்விஸ் ஸிஸ்டர்!" மென்மையாகப் பேசினாள்.
"ஹாங்! சொல்லுங்க! என்னங்க திடீர்னு போன் பண்ணிருக்கீங்க? ஆச்சர்யமா இருக்கு!"
இருவரும் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் பேசிக் கொண்டார்கள்.
"உங்களுக்கு உடம்பு சரியில்லன்னு கேள்விப்பட்டேன்! இப்ப எப்டி இருக்கீங்க?"
"நல்லா இருக்கேங்க! உங்க அக்கா என்ன நல்லா கவனிச்சுகிட்டாங்க!"
"அக்காவுக்கு ரொம்ப நல்ல மனசு! நீங்க வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டீங்க போல!"
"ஆமாங்க! ஒரு வாரம் லீவ்ல இருந்தேன். இன்னிக்குதான் ஜாயின் பண்ணினேன். இது உங்க நம்பரா? நான் சேவ் பண்ணிக்கலாமா?"
"ஆமா! இது என் நம்பர்தான்! எங்க அண்ணன் கிட்ட இப்பதான் உங்க நம்பர் வாங்கி சேவ் பண்ணினேன். நீங்களும் சேவ் பண்ணிக்குங்க!"
"ம். அப்றம்...."
"இல்ல! ஃபீவர் வந்து ரொம்ப அவஸ்த்தை பட்டீங்கன்னு அண்ணன் சொன்னான். பயங்கர ஃபீவர்னா நிறைய மருந்து சாப்ட்ருப்பீங்களே! வயிறு புண்ணாகியிருக்கும். இப்ப ஃபீவர் விட்ருச்சுன்னு ரொம்ப காரமா சாப்பிடாதீங்க! அது அல்சரா மாறிடும். அதுதான் உங்களுக்கு சொல்லலாமேன்னு போன் பண்ணினேன்!" தயங்கி தயங்கி மெல்லிய குரலில் சொன்னாள்.
"தேங்க்ஸ்ங்க! இப்பதான் உங்க அக்கா லஞ்ச் கொண்டு வந்து குடுத்துட்டு இதையே சொல்லிட்டு போனாங்க! நீங்களும் இதையே சொல்றீங்க! அக்காவும் தங்கையும் ஒரே மாதிரி இருக்கீங்க!" என்றான்.
"உடம்ப பாத்துகுங்க!"
"சரிங்க!"
"உடம்பு நல்லா தேறினதுக்கப்புறம் உங்க எக்ஸர்ஸைஸ், ஜிம் இதெல்லாம் ஆரம்பிங்க! இப்பவே பண்ண ஆரம்பிச்சா ரொம்ப டயர்டா ஆய்டும்!"
"தேங்க்ஸ்ங்க!"
"நிறைய ஃப்ரூட்ஸ் சாப்பிடுங்க!"
வேற என்ன பேசலாம் என்று இழுத்தாள்.
"சரிங்க!" வேற எதாவது பேசேன் என்று நினைத்தான்.
"ஸாரிங்க! ரொம்ப அட்வைஸ் பண்றேன்ல!?"
"ஹையோ! அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க! நீங்க என் நல்லதுக்குதானே சொல்றீங்க!"
"நல்ல வேள! நீங்க என்ன தப்பா எடுத்துகிட்டீங்களோன்னு நெனச்சுட்டேன்!"
"நான் ஏங்க உங்கள தப்பா நெனக்கப் போறேன்!"
"சரிங்க! நான் வெச்சுடவா?" வெக்கவே மனசில்லையேடா என்று நினைத்தாள்.
"ம்." அதுக்குள்ளயா! இன்னும் கொஞ்சம் பேசக் கூடாதா? என்று நினைத்தான்.
"பை விராட்ஜி!" சரி நம்பர் இருக்கு! அப்றம் பண்லாம். அவள் நினைத்தாள்.
"பை!" சரி நம்பர் இருக்கு! அப்றம் பண்லாம். அவனும் அதையே நினைத்தான்.
இருவரும் போனை வைத்தனர்.
விராட் வானில் பறக்கலானான். ஆனந்திக்கு மனசெல்லாம் பட்டாம்பூச்சி பறந்தது. அன்று முழுதும் சந்தோஷமாக இருந்தாள். பூங்குழலியும் கீர்த்திவாசனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சரி மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க நேரம் வந்துவிட்டது என்று பேசிக் கொண்டனர்.
செல்வி அன்று இரவு வேலையெல்லாம் முடித்த பிறகு உறங்கப் போகும் போது சூரஜ் ஸ்கைப்பில் வந்தான். அவள் முகத்தை ஆவலோடு பார்த்தான்.
"எப்ப இண்டியா வரப்போறோம்னு இருக்கு டமில்."
"எனக்கும் நீங்க எப்ப வரப்போறீங்கன்னுதான் இருக்கு!"
"தேங்கஸ் டமில்!"
"எதுக்கு?"
"விராட்.."
"அடடா! ஏங்க! மத்தவங்கதான் ஒண்ணும் புரியாம பேசறாங்கன்னா நீங்களுமா?"
"இருந்தாலும்.."
"கமான் சூரஜ்! எனக்கு ஆனந்தனும் விராட்டும் வேற வேற இல்ல! அதே மாதிரி ஆனந்தியும் தீபிகாவும் வேற வேற இல்ல. சரி! நாளைக்கே ஆனந்துக்கோ ஆனந்திக்கோ எதாவது பிரச்சனைன்னா நீங்க போய் ஹெல்ப் பண்ண மாட்டீங்களா? அது மாதிரிதானே இதுவும்?"
"ரொம்ப பெருமையா இருக்கு டமில்!"
"நீங்க அன்னிக்கு சொன்னீங்கல்ல? என் சாய்ஸ் எப்பவுமே தப்பாவே போகாது அப்டீன்னு! உங்க சாய்ஸ் தப்பா போகக் கூடாதுல்ல! உங்க நம்பிக்கை பொய்யா போயிடக் கூடாதுல்ல! ஐயியோ! இவளையா லவ் பண்ணி கல்யாணம் பண்ணினோம்னு நீங்க நெனச்சுடக் கூடாதுல்ல!"
"டமில்! ஐ லவ் யூ! எனக்கு இப்பவே உன்ன பாக்கணும் போல இருக்கு!"
"பாத்துகிட்டுதானே இருக்கீங்க! ஸ்கைப்ல!"
"என் செல்லம்! எவ்ளோ சீக்ரம் முடியுமோ அவ்ளோ சீக்ரம் வந்துடறேன்!"
"ம். பை!"
"பை டமில்!"
மனதுக்குள் சூரஜுடன் கழித்த இனிமையான தருணங்களை நினைத்துக் கொண்டே உறங்கிப் போனாள். சூரஜும் மனதுக்குள் செல்வியுடன் கழித்த இனிமையான தருணங்களை நினைத்தபடியே தன் வேலையைத் தொடர்ந்தான்.
மன்னவனின் இல்லமதில்
மருமகளும் திருமகளாய்
மனமுவந்து பணிகள் செய்தாள்!
மன்னவனின் தம்பியையும்
தன் மகவாக எண்ணியுமே
அன்பாலே அரவணைத்தாள்!
அன்னையில்லா நேரத்தில்
நோயில் விழுந்த மகனுக்கு
அன்னையாக ஆதரவு தந்தாள்!
பணிவிடைகள் சலிக்காமல்
பாசத்துடன் அவள் செய்ய
வெறுப்பை அவன் விடுத்தானே!
புதிதாகக் காதல் மொட்டு
அவன் மனதில் துளிர்க்கையிலே
சிலிர்க்கிறானே சின்னவனும்!
அண்ணியின் உறவுகளும்
அவன் மனதில் ஆட்சி செய்யும்
நாளும் நாளை வந்துவிடும்!
அன்பே அவள் கை ஆயுதம்!
கள்ளமில்லாமல் கனிவு தந்து
பெண்ணவளும் வென்றிடுவாள்!
- C. புவனா.
- காதலின் மொழி என்ன?