பாட்டி சொன்ன வைத்தியம்
இந்த அவசர வாழ்க்கையில் நம்மில் பலர் தங்கள் உடல்நலத்தைப் பேணுவதில் கவனம் செலுத்துவதில்லை. அதனால் பல தொல்லைகளுக்கு ஆளாகி நம் உடல்நலம் கெடுவதுடன், மருத்துவமனையே கதி என்று தொடர்கதையாய் முற்றுகை இட நேரும் அவல நிலைதான் கடைசியில்..
சற்றே சிந்தித்துப் பார்த்தால், வருமுன் காப்பது சாலச் சிறந்தது என்று நமக்கே புரியும்.
நம் வீட்டுப் பெரியவர்கள், எத்தனையோ கைவைத்தியம் நமக்குச் சொல்லி இருப்பார்கள். காலப்போக்கில் எல்லாவற்றையும் மறுந்து விட்ட நமக்கு, இங்கே மீண்டும் அவற்றை ஞாபகப்படுத்தி நம் உடல் நலம் பேண ‘பாட்டி சொன்ன வைத்தியம்’ வருகிறது.
பாட்டி சொல்லைத் தட்டக் கூடாது மக்களே.. கேட்கத் தயாராகுங்கள்..
கைவைத்தியம் 1
வயிற்றுப் பொருமலா? இல்லை வயிற்றுப் போக்கா?
பிள்ளைங்களா, இதோ உங்களுக்கான உடனடித் தீர்வாய் பாட்டியின் கைவைத்தியம்..
சிறிதளவு காய்ந்த சுக்கைப் பொடித்துக் கொள்ளுங்கள். சுக்கு பொடிக்க கஷ்டமாக இருக்கிறதா? கடைகளில் ரெடிமேடாக சுக்குப்பொடியும் உங்களுக்குக் கிடைக்கும் பாருங்கள்.
ஒரு டேபிள் ஸ்பூன் சுக்குப்பொடியைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள். சூடான ஒரு கைப்பிடி அளவு சாதத்தையும் தனியாக எடுத்து வையுங்கள். வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய்விட்டு, அதில் ஒரு ஆர்க்கு கறிவேப்பிலையைப் போடுங்கள். சிறிதளவு பெருங்காயத்தைப் போட்டு, ஒரு டேபிள் ஸ்பூன் சுக்குப்பொடியைப் போட்டுவிட்டு, கையோடு, நாம் எடுத்துவைத்திருந்த சாதத்தையும் போட்டு, ஒரு பிரட்டுப் பிரட்டிவிட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்..
அவ்வளவுதான்… சூடாக இந்த சுக்குப்பொடி சாதத்தை உண்ணுங்கள்.. தொடர்ந்து இரண்டு வேளைகள் எடுத்துக்கொள்ளவும்.. இரண்டு மூன்று நாட்களில் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்..
சின்ன கைவைத்தியம்தான்.. வாரத்தில் ஒருநாள் யார் வேண்டுமானாலும், இதை எடுத்துக்கொள்ளலாம்..
முயன்று பாருங்கள்.. பலன் நிச்சயம்.
பாட்டி சொல்லைத் தட்டாதீங்க..
Last edited by a moderator: