கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தலைமைச் செயலகம் 1

Akhilanda bharati

Moderator
Staff member
தலைமைச் செயலகம்

முன்கதை

அந்த சாதாரண உணவகத்தில் வெகு சாதாரணத் தோற்றம் கொண்ட அந்த மூவரும் அமர்ந்திருந்தனர். சரியாகச் சொல்லப்போனால், இருவர் அமர்ந்திருக்க, மிகப் பருமனாக இருந்த முதலாமவன், எங்கே தன் நாற்காலி உடைந்து விடுமோ என்ற பயத்தில் அவ்வப்போது அமர்வதும் அவ்வப்போது எழுந்து ஆங்காங்கே நடப்பதுமாக இருந்தான்.


எப்போதும் பேசாத இரண்டாமவன், "நம்ம மூணு பேருக்குள்ளேயும் ஏதோ ஒரு ஒற்றுமை இருக்குதுன்னு சொல்ல வரீங்களா?" என்று கேட்க,

மூன்றாவது நபரான அந்த இளம்பெண் தன் முன்னிருந்த மில்க் ஷேக்கை ஸ்ட்ராவால் கலக்கியபடியே, "அப்படித்தான் தோணுது. நேத்து ஒரு வெப் சீரிஸ் பார்த்தேன். பெனடிக்ட்ஸ் மிஸ்டீரியஸ் சொசைட்டின்னு.. அதுக்கப்புறம் தான் இப்படித் தோணுது" என்றாள்.

இப்போது அந்த இரண்டாவது இளைஞன், "உறுதியாச் சொல்லுங்க.. இது ரிஸ்க் மேட்டர் தான்னு கன்ஃபர்மா தெரியுமா? அப்ப என்ன பண்ணலாம்? பேசாம ஊரைக் காலி பண்ணிடலாமா? எனக்கு அது ரொம்பப் பழக்கமானது தான். நாளைக்குக் காலைல எந்தத் தடயமும் இல்லாம மறைஞ்சுடுவேன்" என்றான்.

அதே மிகச் சிறிய உணவகத்தில், இருப்பதே தெரியாமல் இருந்த புகை படிந்த சிசிடிவி கேமரா ஒன்று, "இந்தக் காலத்துல அப்படி நீ யாருக்கும் தெரியாம மறைஞ்சு போய்டுவ?" அவனைப் பார்த்து கைகொட்டி சிரித்தது.

அத்தியாயம் 1

அனுஸ்ரீயின் கூகிள் ட்ரைவில் இருந்து:

கொஞ்சம் கொசுவத்திச் சுருளைச் சுருட்டி இந்த மூன்று பேரும் ஒரு வாரத்திற்கு முன்பாக என்ன செய்தார்கள் என்று பார்த்தால் என்ன?

அதை லேடிஸ் ஹாஸ்டல், பிஜி ஒண்டுக் குடித்தனம் எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.‌மூவமூவரில் ஒருத்தியான பவித்ரா அங்கு தான் தங்கி இருந்தாள்.

"பாப்பா பவித்ரா.. இந்த வெங்காயத்தைக் கொஞ்சம் நறுக்கி வச்சிருடா" என்று சுமார் ஐந்து கிலோ வெங்காயங்கள் அடங்கிய ஒரு பையை கொண்டு வந்து அவள் முன் வைத்தார் சரோஜா.

"என்ன சரோஜா அக்கா கொஞ்சம் நறுக்கிருன்னு சொல்லிட்டு குறைஞ்சது ஒரு மணி நேரத்துக்கு வேலை வைக்கிறீங்க?"

"டிவி தானே பாத்துட்டு இருக்கே.. அதுல ஒரு கண்ணு, இதுல ஒரு கண்ணு.. அப்படியே நறுக்கித் தாயேன் கண்ணு.."

"இங்க நாம ரெண்டு பேரு இருக்கோம்.. அஞ்சு கிலோ வெங்காயம் வெட்டச் சொல்றீங்களே? இது அடுக்குமா?" என்றாள் பவித்ரா.

"ஏன் கண்ணு.. தெரிஞ்சிக்கிட்டே கேக்குற? இன்னிக்கு தள்ளுவண்டி கடையில் வெங்காய பக்கோடா.. உனக்கு ஒரு கால் கிலோ சூடா போட்டு எடுத்து வைக்கிறேன் கண்ணு.. சாயங்காலம் அந்தப் பக்கம் வரும்போது வாங்கிக்கோ" என்றார் சரோஜா.

"கால் கிலோவை வச்சு நான் என்ன பண்றது? ஏற்கனவே சாப்பிட்டு சாப்பிட்டு வெயிட் போட்ருமோன்னு கவலையில் இருக்கேன்.. கொடுங்க நறுக்குறேன்" என்ற படி பார்த்துக் கொண்டிருந்த வெப் சீரிஸை மாற்றி பாடல்கள் போட்டுவிட்டு வெங்காயத்தின் பக்கம் பாதி கவனத்தைத் திருப்பினாள் பவித்ரா.

"கண்ணு.. தண்ணி வரி கட்டலைன்னு தண்ணி கனெக்க்ஷனை கட் பண்ணிட்டான் கார்ப்பரேஷன் காரன். ஏற்கனவே போர்வெல் மோட்டார் ரிப்பேராத் தான் கிடக்கு.. ஒரு அரை டேங்க் தண்ணி கிடக்கும்.. தினசரி ரெண்டு வாளி வச்சுக்கிட்டேன்னா, ஒரு நாலு நாளைக்கு வச்சுக்கலாம். உனக்கு அதுக்குள்ள ரூம் கிடைச்சிருமா?" என்று கேட்ட சரோஜா பதிலுக்குக் காத்திராமல் வெளியேற,

உணவுடன் கூடிய புது அறைக்குப் போக வேண்டும் என்றால் மாதம் ஐந்தாயிரமாவது கேட்பார்கள். குறைந்தது இருபதாயிரம் அட்வான்ஸ் இல்லாமல் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள், இங்கு கொடுத்திருந்த முன்பணம் தீர்ந்து போய்விட்டது. கையில் இப்போது இருப்பது 250 ரூபாய் மட்டுமே. எங்கே போவது? சரோஜா அக்கா வீட்ல ஒரு ஓரமா இடம் கிடைக்குமான்னு கேட்போமா இன்று நூற்றியோராவது முறையாக சிந்தித்தாள்.

இரண்டு வெங்காயங்களைக் கூட நறுக்கி இருக்க மாட்டாள். அவளது அலைபேசி அழைத்தது. என்ன, கிரெடிட் கார்டு வேணுமா, இல்ல பிள்ளையை கோச்சிங் சென்டர்ல சேர்த்து விடுறியா, வண்டி வச்சிருக்கீங்களா, சர்வீஸ் அப்பாயின்ட்மென்ட் போடுறீங்களான்னு கேட்பான். வேறு யாரு நமக்கு போன் பண்ண போறது என்று ஆசிவாரசியமாக எடுத்து ஹலோ என்றவளுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.

"மேடம் லிங்க்ட் இன்ல உங்க ப்ரோஃபைல் பார்த்தோம். உங்களுக்கு ஒரு ஜாப் ஆஃபர் பண்றோம். ரொம்ப கான்ஃபிடன்சியான ஒர்க். நல்ல சேலரி. ஃபுட், அக்காமடேஷன் எல்லாம் கிடைக்கும். நாளைக்குக் காலையில 11 மணிக்கு செக்ரெட்டரியேட்டுக்கு வர முடியுமா?" என்றது அந்தக் குரல்.

'பார்ரா அப்ப வெங்காயம் நறுக்குறதுல இருந்து விடுதலையா? நல்ல சாப்பாடு கிடைக்குமா? யாரு என்னன்னு சொல்லாம மொட்டையா செகரட்டரியேட்டுக்கு வாங்கன்னு சொன்னா என்ன அர்த்தம்? ஒரு மெயில் கிடையாது. ஜாப் ஆஃபர் லெட்டர் கிடையாது. செகரட்டரியேட்னா அரசாங்க வேலை இல்லையா? அது அவ்வளவு சாதாரணமாவா கிடைக்கும்?' வெங்காயத்தால் வரத் துவங்கி விட்ட கண்ணீரை ஒரு கையால் துடைத்துக் கொண்டு, லேசாக கையில் இருந்து கத்தியால் தன் காலில் குத்திப் பார்த்து இப்பொழுது கேட்ட தகவல் உண்மை தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டாள் பவித்ரா. திடீரென்று ஒன்று தோன்றியது. 'ஃபோன்ல பேசின பொண்ணோட குரல் கிட்டத்தட்ட என் குரல் மாதிரியே இருந்துச்சுல்ல?'

அதே நேரம் அதே சென்னையில் வேறொரு பகுதியில் சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிய அப்பார்ட்மெண்ட், சொந்தமாக சமைத்து சாப்பிட அனைத்துப் பொருட்கள், ஒரு அலமாரி நிறைய புத்தகங்கள், இன்னும் மூன்று அலமாரி நிறைய உடைகள் எல்லாம் இருந்தும் பேச்சுத் துணைக்கு கூட ஒரு ஆள் இல்லாமல் தனிமை வாட்டி எடுக்க லேப்டாப்பை வைத்துக்கொண்டு சும்மா உட்கார்ந்திருந்தான் சண்முகசுந்தரம். மேட்ரிமோனியில் பதிந்து வைத்திருப்பதற்கு ஏதாவது எதிர்வினை வந்திருக்கிறதா என்று தேடினான்.

"டேய் சண்முகசுந்தரம்னு அரதப்பழசான பேர்ல ப்ரொஃபைல் கிரியேட் பண்ணி இருக்க.. டிரெண்டியா மாத்துடா!" என்று அவனுக்குள் இருந்து இன்னொரு சண்முகசுந்தரம் சொல்ல, மேட்ரிமோனி பக்கத்திற்கு சென்று Shansun2k என்று தன் ப்ரோபைல் ஃபோட்டோவில் தன் பம்ப்ளி மாஸ் போன்ற முகத்தை எடுத்துவிட்டு ஷாருக்கானின் புகைப்படத்தை வைத்தான் சண்முகசுந்தரம்.

வழக்கமாக லேப்டாப்பை மூடுவதற்கு முன்பாகச் செய்வது போல் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் எல்லா அக்கவுண்டுகளிலும் கடைசிக் கட்ட மெசேஜ்கள் ஏதாவது வந்திருக்கின்றனவா என்று பரிசோதித்து விட்டு இறுதியாக மெயிலைத் திறந்து பார்க்க, Shansun99 என்று ஒரு புதிய மெயில் ஐடியில் இருந்து இரண்டு நிமிடங்களுக்கு முன்பாக ஒரு மெயில் வந்திருந்தது. பவித்ராவுக்கு வந்த அலைபேசி அழைப்பில் வாய்மொழியாக சொல்லப்பட்ட அதே வரிகள் இவனுக்கு மெயில் வழியாக. அதே 'உங்க ப்ரொபைல் பார்த்தேன். தலைமைச் செயலகத்தில் வேலை வர விருப்பமா?' என்ற வரிகள். முக்கியமாக, பல மனிதர்களுடன் பழக பேச பிரகாசமான வாய்ப்பு என்ற ஒரே ஒரு வரி அதிகமாக இருந்தது.

'கட் பண்ணி ஃப்ரீஸ் பண்றோம். அடுத்த சீனுக்குப் போறோம்'

கிட்டத்தட்ட அதே நேரம். சென்னையில் இன்னொரு பகுதியில் ஒரு அறையில் ஒரு காட்சி. உருப்படாதவன், தறுதலை எங்கேயோ போய் தொலை, தண்டச் சோறு போன்ற வார்த்தைகள் பொறுக்காமல் சென்னைக்கு படையெடுத்த இளைஞர்களின் கதையை இருந்து வருடங்களுக்கு முன்பாக அடிக்கடி கேட்டிருப்பீர்கள். முன்னேற்றத்தில் இருந்து வருடம் பின்தங்கியிருக்கும் அந்த கிராமத்தில் இப்போதுதான் அந்த காலகட்டம் வந்திருக்கிறது. பக்கத்து ஊர்களில் இப்படி கோபித்துக் கொண்டு ஊரை விட்டுப் போனவர்கள் எல்லாம் ஒன்று காணாமலேயே போயிருந்தார்கள், அல்லது திரும்பி வந்து அந்த ஊரிலேயே செட்டில் ஆகி குழந்தை குட்டி என்றிருக்கிறார்கள். இப்போதுதான் இந்த ஊர் இளைஞர்கள் தண்டசோறு என்ற வார்த்தையைக் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் விளைவாக ஊரை விட்டு ஓடவும் ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் ஒருவன் அஜித்குமார். அதே இருபது வருடங்களுக்கு முந்தைய வழக்கமான நண்பன் அறையில் ஓசியில் தங்கும் வழக்கத்தைக் கடைபிடித்து, அவனது ஊரைச் சேர்ந்த சரவணனின் அறையில் தங்கியிருந்தான் அஜித் குமார்.

கிடைத்த வேலைகளைச் செய்து பொழுதை ஓட்டிக்கொண்டிருக்கும் சரவணன் ஊருக்குப் போயிருக்க, நான்கு நாட்களாகக் கையில் இருக்கும் காசை வைத்து அரை வயிற்றை நிரப்பி கொண்டிருந்தான் அஜித் குமார். சரவணன் பெயருக்கு வந்த 'ஜாப் ஆஃபர் லெட்டர்' என்ற தலைப்பிட்டு இருந்த உறை ரொம்பவும் ஈர்த்தது. "பார்ரா! இந்த கவர்ல இருக்கிற கையெழுத்து நம்ம சரவணனோடது மாதிரியே இல்ல?" என்று நினைத்தவன், நம்ம சரவணன் தானே கோவிச்சுக்க மாட்டான் என்ற தைரியத்தில் அதைத் திறந்து பார்க்க, "தலைமைச் செயலகம் பகுதியில் பிரபல கூரியர் நிறுவனத்திற்கு டெலிவரி பாய் தேவை. நீங்கள் ஏஜென்சியில் பதிவு செய்து வைத்திருந்த விபரங்களைப் பார்த்தோம். இதற்குத் தகுதியான நபராக இருப்பீர்கள் என்று நினைக்கிறோம். நல்ல சம்பளம், தங்குமிடம், உணவு உண்டு. நிரந்தர வேலை இல்லை. ஆனால் நல்ல அனுபவம் கிடைக்கும்" என்ற வாசகங்கள் அஜித் குமாரை ஈர்த்தன.

'சரவணன் திரும்பி வர ஒரு வாரம் ஆகும், கொரியர் கம்பெனியில டெலிவரி பாய் வேலை தானே.. நம்ம மூஞ்சியும் சரவணன் மூஞ்சியும் பெரிய வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. சாயங்காலம் அஞ்சு மணிக்குள்ள போகணுமாமே, சும்மா போய்த்தான் பார்ப்போமே, காசா பணமா.. ஒரு மாசமாக இந்த சென்னையில் டிரெயினாகட்டும், பஸ்ஸாகட்டும் வித்தவுட்ல தானே போறோம், அதே மாதிரி போயிடலாம்' என்று யோசித்தவன் சரவணனின் பெட்டியைத் துழாவி இருந்ததில்லையே நல்ல சட்டை பான்ட்டை எடுத்து அணிந்து கொண்டு தலைமைச் செயலகம் செல்லும் பேருந்தைப் பிடித்தான்.

***


"பரவால்ல உனக்குள்ள ஒரு எழுத்தாளர் ஒளிஞ்சிருக்காரு.. கனவுல வர்றதை அப்படியே எழுதப் போறேன்னு சொன்னே.. ஆனா அதுக்கு நீ கொடுத்திருக்கிற எஃபெக்ட் சூப்பரா இருக்கு.. கேரக்டர்ஸுக்கு எல்லாம் அழகழகா பேர் வெச்சிருக்க.. என்ன, எனக்குத்தான் வேலைக்கு நடுவில படிக்கிறதுக்குள்ள ஒன்றரை மணி நேரம் ஆயிடுச்சு. இனிமே என்ன செய்ற.. இதெல்லாம் மொத்தமா எழுதி வைக்கிற.. கடைசில எல்லாத்தையும் சேர்த்து நடு நடுவுல மானே, தேனே, பொன்மானே போட்டு பெரிய கதையா உருவாக்கி ஒரு புத்தகம் போட்டு மாஸ் ரைட்டர் ஆயிடலாம். ஓகே? பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் இப்படி கனவுல வந்ததை கதையா பண்ணி இருக்காங்களாம். ஏன் முக்கியமான கண்டுபிடிப்புகளுக்குக் கூட கனவுல தான் வழி கிடைச்சதுன்னு விஞ்ஞானிகள் சொல்லி இருக்காங்க.. இப்ப நிம்மதியா படுத்து தூங்கு. ஏதாவது நல்ல கதை கனவுல வரும்" பிரகல்யா அனுஸ்ரீயிடம் கூற,

"தேங்க்ஸ் பிரகல்! நீ மட்டும் இல்லைனா நான் என்ன ஆவேன்னே தெரியல.."

"தேங்க்ஸ் எல்லாம் நீயே வச்சுக்கோ டி.. அன்னைக்கு ஏதோ சைட்ல திடீர் காம்படிஷன் நடந்துச்சு.. ஒரு மொக்கை ஸ்டோரி எழுதினேன்.. ஃபர்ஸ்ட் பிரைஸ் கொடுத்துட்டாங்கன்னு சொன்னியே? அந்த அமௌன்ட் கிரெடிட் ஆயிடுச்சா?" என்று கேட்டாள் பிரகல்யா.

"ஆயிடுச்சுடி! ஐநூறு ரூபா வந்திருக்கு"

"சரி அந்த 500 ரூபாயை எடுத்துக்கிட்டு நாளைக்கு ஈவினிங் காலேஜ் கேன்டீன் வா.. பார்ட்டி பண்ணி காலி பண்ணிடலாம்" என்க,

"தோணுறதெல்லாம் எழுதச் சொல்லி என்கரேஜ் பண்ணி, கனவுல வர்றதை கதையாக்குறதுக்கு ஐடியா கொடுத்தவளே நீ தானேடி! உனக்கு இல்லாததா? வித் ப்ளஷர்" என்றாள் அனுஸ்ரீ.

-கனவுகள் பூக்கும்
❤️
 
Last edited:

Chellam

Well-known member
ஏதோ மர்மமாக நடக்க போகிறது என்று மட்டும் தெரிகிறது.
 
Top