கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தானா வந்த சந்தனமே...அத்தியாயம்-19

Nilasubramanian

Moderator
Staff member
அத்தியாயம்-19

அவர்கள் சென்றதும், தன் அறைக்குள் வந்த அகிலாண்டத்திற்கு,முதல் நாள் இரவு நடந்தது ஞாபகம் வந்தது.

தூக்க மாத்திரை தீர்ந்து விட்டதை கவனிக்காததால், நேற்று இரவு தூக்க மாத்திரை போட வில்லை.

வெகுநேரம் தூக்கம் வராமல் தவித்தவர், ஹாலில் வந்து அமர்ந்தார்.அப்பொழுது, கீர்த்தி மொட்டை மாடியில் இருந்து வருவதை பார்த்தார்.கண்ணில் கனவோடு,முகத்தில் வெட்க சிவப்போடு, மேகத்தில் மிதப்பவள் போல வந்தவளை பார்த்தார்.

'இந்த நேரத்துல, இவ என்ன, மொட்டை மாடியில் இருந்து வர்றா??'

அவள், இவரை கவனிக்கவில்லை.விடிவிளக்கின் ஒளியில், இவர் அமர்ந்திருப்பது, உடனடியாக தெரியாது.

கீர்த்தியும், இவரை கவனிக்கும் நிலையில் இல்லை.
அத்தோடு, அதிக வெளிச்சத்தில் இருந்து வருபவளுக்கு, விடிவிளக்கின் ஒளி பழக நேரம் எடுக்கும்.அதற்குள், அவள் அறைக்குள் சென்று விட்டாள்.

இவளை பற்றி யோசித்துக்கொண்டே, தன் பார்வையை திரும்பியவர் கண்களில், பார்த்தி விழுந்தான்.
ஹால் ஜன்னலுக்கு வெளியே,தலையை கோதிக் கொண்டு,கீர்த்தியின் நிலைக்கு சற்றும் குறையாமல், மாடி படியில் இறங்கி வந்தான்.

அவன் புன்னகை முகத்தை பார்த்ததும்,அகிலாண்டத்தின் கண்களில், கோபம் கொப்பளித்தது,அவர் மனம் சில கணக்குகள் போட்டது.
எப்படி கணக்குப் போட்டாலும்,ஒரே விடை தான் கிடைத்தது.அந்த விடை அவருக்கு உவப்பானதாக இல்லை.

யோசனையோடு,அறைக்குள் சென்றவர்,பின் தூங்க முயற்சிக்கவில்லை.
விடிய, விடிய யோசித்து, பல திட்டங்கள் போட்டார்.அதன் முதல் படியை செயல்படுத்த, விடியலுக்காக காத்திருந்தார்.

விடியல் அவருக்கு சாதகமாய் இருந்தது.
விடியற்காலையில், கேசவனுக்கு அலைபேசியில் அழைப்பு விடுத்தார்.
அந்த பக்கம், இவ்ளோ காலையில், சம்பந்தியிடம் இருந்து போன் என்றதும்,பதட்டத்துடன் எடுத்த கேசவன்,

"ஹலோ,சம்பந்தியம்மா, யாருக்கும் ஒன்னும் இல்லியே..??"

"இப்போதைக்கு இல்ல..இனி இல்லாம இருக்கது, உங்க கையில தான் இருக்கு.."

அவர் பீடிகையில்,பதட்டத்தில் இருந்து, யோசனைக்கு தாவியது, அவர் முகம்.

"என்ன ம்மா சொல்லுறீங்க..??"

"ஹ்ம்ம்…உங்க பொண்ணு,உங்க பொண்ணா திரும்பி வர்றதும்,ஒரு தறுதலை கையில சிக்கி சின்னாபின்னமாக போறதும், இப்போ உங்க முடிவுல.."

"என்ன விஷயம் ம்மா??ஏதேதோ சொல்லுறீங்க..பதட்டமா இருக்கு ம்மா.. கொஞ்சம் விளக்கமா, புரியுற மாதிரி சொல்லுங்க.."

"உங்க பொண்ணை, என்னை நம்பி தான் ஒப்படைசிங்க.திரும்ப, அவளை உங்க பொண்ணா, பத்திரமா ஒப்படைக்க வேண்டியது என் பொறுப்பு.இப்போ, அப்படி ஒப்படைக்க முடியுமா ??தெரியல.

அப்புறம், நீங்க என்னை குத்தம் சொல்லக் கூடாது பாருங்க..இதான், உங்களை நம்புனதுக்கு பலனானு.??."

கேசவன் கைகள், லேசாய் நடுங்கியது.மொபைலை இறுக்கிப் பிடித்து கொண்டார்.

"நான் என்ன சொல்ல வரேன் புரியுதா??உங்க பொண்ணு காதலிக்குறா. யாரைன்னு தெரியுமா??எங்க வீட்டு தறுதலையை..

அவன், எங்க வீட்டு பையனா இருந்தாலும்,ஒரு பொண்ணு வாழ்க்கைன்னு, உண்மையை சொல்ல வேண்டி இருக்கு.எனக்கு ஒரு பொண்ணு இருந்தா, இப்படி ஒரு பையனுக்கு கொடுக்க மாட்டேன்.நீங்க கொடுப்பிங்களா என்ன??"

கீர்த்தி காதலிக்கும் உண்மையை போட்டு உடைத்து,வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, ஆரவ் ஆர்த்தி கல்யாணத்தில் செய்தது போல, கேசவனின் கௌரவ பிரச்னையை கிளப்பினார்.

இன்னும் பார்த்தியை பற்றி,எவ்வளவு மட்டமாக சொல்ல முடியுமோ சொல்லி,இரவில் இருவரையும் பார்த்ததை வைத்து,அவர் யூகங்கள், கற்பனைகள், அனைத்தையும் கலந்து,அரை மணி நேரம் பேசி முடித்தார்.

அவர் கண்களில், வஞ்சம் கொழுந்து விட்டு எரிந்தது.

கேசவன் பேச்சற்று, அவர் சொல்லுவதை கேட்டு கொண்டிருந்தார்.
அவர் கோபம், அவர் கண்களின் சிவப்பில் தெரிந்தது.

அகிலாண்டம் பேசி முடித்து அலைபேசியை வைத்த பின்னும்,அந்த உரையாடலில் இருந்து வெளி வர முடியாமல், அந்த இடத்திலேயே அமர்ந்திருந்தார்.

அவருக்கு காபி எடுத்துக்கொண்டு,அறைக்குள் நுழைத்த மீனாட்சி,அவர் அமர்ந்திருந்த கோலத்தை பார்த்து,அவர் தோளை பிடித்து உலுக்கி, சுய நினைவுக்கு கொண்டு வந்தார்.

நிமிர்ந்து பார்த்தவரின் கண்கள், ரத்த நிறம் கொண்டிருந்தது.அவர் கண்ணை பார்த்து அதிர்ந்த மீனாட்சி.

"என்னாச்சுங்க..??"

அவருக்கு பதில் அளிக்காமல்,தலையை மறுப்பாக ஆட்டியவர்,மறுபடியும் பேச்சற்று அமர்ந்து விட்டார்.

என்ன செய்வது என்று தெரியாமல் ,மீனாட்சி, கைகளை பிசைந்து கொண்டு நின்றிந்தார்.
பிரச்சனை தெரியாமல், என்ன செய்ய முடியும்??

இரண்டு மணி நேரம், அவ்விடத்தை விட்டு அசையாத கேசவன்.

பின் எழுந்து, காலைக் கடன்களை முடித்தார்.காலை உணவை மறுத்து விட்டு,கடைக்கு சென்றார்.

அவரை நெருங்கவே, மீனாட்சிக்கு பயமாய் இருந்தது.

கடைக்கு சென்று, சில ஏற்பாடுகள் செய்து விட்டு,கடையை, அங்கு வேலை செய்பவரை பார்த்து கொள்ள சொல்லி விட்டு,மறுபடியும் வீட்டிற்கு வந்தவர்,மீனாட்சியிடம்,திருச்சிக்கு செல்வதாய் கூறிவிட்டு,திருச்சி நோக்கி பயணப்பட்டார்.

அவரிடம் காரணம் கேட்க பயந்து,திருச்சியில் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன், அமர்ந்தார் மீனாட்சி.

தந்தையுடன், பேருந்தில் அமர்ந்திருந்த கீர்த்தியின் மனதில், பயப்பந்து உருண்டாது.

'இவரு முகமே சரி இல்லியே..நிஜமாவே அம்மாக்கு உடம்பு சரி இல்லைன்னா.. அரூவையும் சேர்த்து தானே கூட்டிட்டு போனும்.

அவளை பத்தி விசாரிச்சதாவே தெரியல.அம்மா, என்னை மட்டும், நிச்சயம் பார்க்கணும்னு சொல்லி இருக்க மாட்டாங்க.

என்ன விஷயமா இருக்கும்??பூசணி பார்வை கூட, இன்னிக்கு சரி இல்லை.பேச்சும் வித்தியாசமா இருந்துது.ஏதோ உள்குத்து வச்சு பேசுன மாதிரி.

மாமி கூட, சாப்பிட்டு போங்கன்னு சொன்னாங்க.இது வாயே திறக்கலை. காபி குடிச்சுட்டு போங்கன்னு கூட, சொல்லல.அரூவை பார்த்துட்டு போங்க,இல்ல, கடைக்கு போய் கூட்டிட்டு போங்க,ம்ஹம்ம்..இப்படி எதுவுமே சொல்லல.

நான், கீழ வாரத்துக்கு முன்னவும், ஏதும் பேசுன மாதிரி தெரியலை.

என்னை, டிரஸ் கூட எடுத்துக்க விடல.அரக்க பறக்க கூட்டிட்டு வந்துட்டார்.

மாமாக்கு, எப்படி தகவல் சொல்லுறது??.மொபைலும், இந்த நேரத்துல போய் ரிப்பேர் ஆயிடுச்சு.

இவர் பண்ணுறதை பார்த்தா, என் பேக்கை வாங்கி கூட செக் பண்ணுவார் போல.

மாமா சாயங்காலம் என்னை தேடுவாரே, பஸ் ஸ்டாப்ல.அவருக்கு எப்படி சொல்ல??
வீட்டுல லேண்ட் லைன்னும், ஹால்ல இருக்கும்.அதுல ஒரு தகவலும் சொல்ல முடியாது.

அம்மாக்கு ரொம்ப உடம்பு சரி இல்லாத மாதிரி தெரியலை.
அப்படி இருந்தா, அவங்களை விட்டுட்டு, என்னை கூப்பிட வர மாட்டாரு.

அரூவை விட்டுட்டு என்னையும் கூட்டிட்டு போக மாட்டாரு.அதோட, அவங்களுக்கு உடம்பு சரி இல்லைன்னு இவர் சொல்லல,பூசணி தான் சொன்னுச்சு.

இவரு மொட்டையா, கிளம்பு கிளம்புன்னு, கிளப்புறதுல தான் குறியா இருந்தார்.
நம்ம உள் உணர்வு சொன்ன மாதிரி, ஏதாவது தப்பு நடந்துடுச்சா..??கடவுளே,என் மாமாக்கு எப்படியாவது,தகவல் சொல்லு.

என்னை காணுமுன்னு பதட்டப் படாம இருக்கனும்.,பதட்டத்துல, யாருக்கிட்டேயும் தகவல் கேட்க முடியாம திணறுவார்.'

டென்சனில்,நகத்தை கடித்துத் துப்பினாள்.

கேசவனின் முறைப்பில், கை தானாக கீழ் இறங்கியது.

இரண்டு மணி நேர பயணம், இரண்டு யுகம் கடந்தது போல தோன்றியது கீர்த்திக்கு.

வீட்டிற்குள் நுழையும் வரை, ஒரு வார்த்தை கூட பேசவில்லை கேசவன்.

முதலில் வீட்டிற்குள் நுழைந்த கீர்த்தி, அன்னையை தேடி,அவசரமாய் உள் நுழைந்தாள்.

கதவை பூட்டி விட்டு, கேசவன் அவள் பின்னோடு வந்தார்.

அடுக்களையில் இருந்து, முந்தானையில் வேர்வையை துடைத்து கொண்டு வெளி வந்த மீனாட்சி,இவளை பார்த்ததும்,திகைத்தார்.

அன்னையை பார்த்து,கீர்த்திக்கும் குழப்பம்,வேகமாய் அவர் அருகில் சென்று அவர் கை பிடித்து,

"உனக்கு ஒன்னும் இல்லையே ம்மா..??நல்லா இருக்கில்ல.."

புரியாமல் அவளை பார்த்தவர்,
"எனக்கு என்ன??"

அவர் கேள்வியில், கீர்த்தி நிலைமையை புரிவதற்குள்,கேசவன் அவள் கூந்தலை பிடித்து, முகத்தை தன் பக்கம் திருப்பி,அவள் கன்னத்தில், ஓங்கி ஒரு அரை விட்டார்.

அந்த அடியில், ஒரு மூலையில் போய் விழுந்தாள் கீர்த்தி.

அவள் உதடு கிழிந்து ரத்தம் வெளியேறியது,துளி,துளியாய்.

தன் இடுப்பில் இருந்த பெல்ட்டை கழட்டி,அவளை அடிக்க ஆரம்பித்தார். அவர் அவளை அறைந்ததும், அதிர்ச்சியில் இருந்த மீனாட்சி, அதன் பிறகு சுதாரித்து,அவளுக்கும் ,அவருக்கும் குறுக்கே வந்து நின்று,அவர் கை பிடித்து தடுத்து,

"என்னாச்சுங்க ??ஏன் இப்படி அடிக்குறீங்க??அவ என்ன பண்ணா??"

"ஹ்ம்ம்…என்ன பண்ணாளா??உன் மக காதலிக்குறாளாம்.கேட்கவே பெருமையா இருக்கு.அதையும் சம்மந்தி வாயால கேட்க,குளுக்குளுன்னு இருக்கு.."

"என்னங்க சொல்லுறீங்க??"
அதிர்ச்சியில் வாய் பொத்தி கேட்டார்.

"ஏன் அதுக்குள்ள அதிர்ச்சி ஆயிட்ட??, முழுசும் கேளு.யாரை காதலிக்குறா தெரியுமா??"

"யாரை..??"
காற்றாகி விட்ட குரலில் கேட்டார்.

"அவங்க வீட்டுல இருக்குற, இன்னொரு பையனை.அரூ மாமனாரோட, இன்னொரு பிள்ளையை."

"ஓ…."

"அந்த பையனை பத்தி,சம்பந்தியம்மாவே நல்ல விதமா சொல்லல.எனக்கு ஒரு பொண்ணு இருந்தா, இப்படி பையனுக்கு கொடுக்க மாட்டேன்னு சொல்லுறாங்க..அவனை போய்.."

கீர்த்தி மூலையில் சுருண்டு, அழுது கொண்டிருந்தாள்.உடம்பில் பெல்ட் தடங்கள் மற்றும் உதட்டில் ரத்த காயத்துடன்.

கடைசியில், அவள் பயந்தது போல,அவள் உள்ளுணர்வு பலித்து விட்டது.

'எல்லாம் அந்த பூசணியின் வேலை..'

"சம்பந்தி முன்ன, என்னை தலை குனிய வச்சுட்டா.இவளை வச்சு தானே, அரூவையும் எடை போடுவாங்க..கல்யாணத்துக்கு முன்ன, யாரை காதலிச்சாளோனு,ரொம்ப பெருமையா இருக்கு.

பொண்ணு வளர்த்த லட்சணம் பாருன்னு, அந்த அம்மா நெனைப்பாங்க..முகத்துக்கு நேரே கேட்கலை.அவ்ளோ தான் வித்தியாசம். இவளை பெத்ததுக்கு, எவ்ளோ கேவலப்படுத்த முடியுமோ பண்ணிட்டா.இவளை.."

மறுபடியும் பெல்ட்டை ஓங்கி கொண்டு சென்றவரை தடுத்து,அவரை கை எடுத்து கும்பிட்டார் மீனாட்சி.

"வேணாங்க…அவ குழந்தை. தாங்க மாட்டா.."

"யாரு,இவளா குழந்தை??குழந்தை செய்யுற காரியாமா செஞ்சுருக்கா??எல்லாம் உன்னை சொல்லணும்,பொம்பளை பிள்ளை,பார்த்து வள,பார்த்து வளன்னு சொன்னேன் இல்ல…என்ன லட்சணத்துல வளத்துருக்க??ஊரே காரி துப்புற மாதிரி.."

மீனாட்சி புடவை முந்தானையால், வாயை மூடி கொண்டு அழுதார்.

"பொம்பளை பிள்ளைன்னு, நான் வருத்த பட்டப்போ எல்லாம்.உங்க அம்மா மாதிரி,அம்மா மாதிரினு சொல்லுவியே…அதுக்குத்தான், நமக்கு பேரு வாங்கி கொடுத்துருக்கா..பொண்ணு வளர்க்க தெரியாதவங்கன்னு..

அவன் ஒரு, வேலை வெட்டி இல்லாதவன்,அயோக்கியன்,பொம்பளை பொறுக்கி,ஊதாரி,ஏமாத்துக்காரன், பொறுப்பில்லாதவன்,அடங்காதவன், பெத்தவங்க, வளர்த்தவங்க, யாரையும் மதிக்காதவன்,குடிகாரன்,அவன் கிட்ட இல்லாத கெட்ட பழக்கமே இல்லையாம்,போயும்,போயும் அவனை போய்…அப்படி என்ன?? உனக்கு காதல் கேட்குது இந்த வயசுல.."

'அவரை பற்றி, உங்களுக்கு ரொம்ப தெரியுமா..??….'

என்று, கத்த வேண்டும் போல இருந்தது கீர்திக்கு,
பல்லை கடித்து, கண்களை இறுக்க மூடி,முகத்தை இரு கரங்களால் மறைத்து, உணர்ச்சிகளை அடக்கினாள்.

"இங்க பாரு,இனி, இவ இந்த வீட்டை விட்டு எங்கேயும் போக கூடாது.எனக்கு தெரியாம போன்ல கூட, யார்கிட்டயும் பேச கூடாது.இவ மூச்சு காத்து கூட, என் அனுமதி கேட்டு தான் வெளிய விடனும்.தோழி,அவ இவன்னு, யார் வந்தாலும், என்னை கேட்காம, இவ ரூம் விட்டு வெளிய வர கூடாது.

போதும், இவ படிச்சு கிழிச்சது. எல்லாத்துக்கும் ஒரு முழுக்கு போட்டுட்டு,வீட்டோட அடங்கி இருக்க சொல்லு.இல்ல, உன் பொண்ணை கொல்லக் கூட தயங்க மாட்டேன்."

மீனாட்சியிடம் கூறிவிட்டு,
பெல்ட்டை உதறிவிட்டு, அறைக்குள் சென்று விட்டார்.

அவர் சென்றதும்,கீர்த்தியின் அருகில் சென்று, அவளை கை தாங்கலாய் பிடித்து எழுப்பிய மீனாட்சி,மாடிக்கு, அவள் அறைக்கு கூட்டி சென்றார்.

அங்கு சென்று, அவளின் சுடிதார் ஒன்றை எடுத்து, குளியல் அறையில் போட்டு விட்டு வந்த மீனாட்சி.

"போ..போய் தலை முழுகிட்டு வா.."

அவரின் கடுமையான குரலில்,அவரை நிமிர்ந்து பார்த்த கீர்த்தி,

"யாரை..??"

"உன் புதுப் பழக்கத்தை,புதுசா பழகுன ஆளை.."

"அது, நான் உயிரோட இருக்க வரை நடக்காது.."
சற்றும் தாமதிக்காமல் பதில் வந்தது.

அவள் பதிலில் கோபம் கொண்ட மீனாட்சி,
தன் இரு கைகளாலும், அவள் முதுகில் அடித்தார்.

"ஏண்டி,ஏன் இப்படி நடந்துக்குற??அவளை மாதிரி தானே உன்னையும் வளர்த்தோம்.அவ சொன்னது கேக்குற மாதிரி,நீ ஏன் கேட்க மாட்டேங்குற..??

ஏண்டி எங்களை இந்த பாடு படுத்தற??ஒழுங்கா நான் சொல்லுறதை கேளு, அவனை மறந்துரு.உனக்கு, சீக்கிரம் மாப்பிள்ளை பார்க்க சொல்லுறேன்.அவனை கல்யாணம் பண்ணிக்குற வழியை பாரு.."

கை ஓயும் வரை அடித்தார்.
அவர் அடிக்கு, அசையாமல் நின்றாள்.பெல்ட் அடி வாங்கியவளுக்கு, இது பெரிதல்ல.

"நீ அப்பாவை மறந்துட்டு, இன்னொரு கல்யாணம் பண்ணிக்குவியா??"

அவள் கேள்வியில் அதிர்ந்து,
"என்னடி உளர்ருற??"

"முடியாதுல்ல??என்னாலையும் அப்படி தான்,என் தீபனை மறக்க முடியாது.."

அவள் பதிலில், வாய் அடைத்து நின்றவரை,சட்டை செய்யாமல் குளியல் அறை நோக்கி சென்றாள்.

கிழிந்து, ரத்தம் படிந்த தன் உடையை மாற்றி,நீரில் காயத்தை கழுவினாள். எரிச்சலில் கண்ணில் நீர் வந்தது.உடை மாற்றி விட்டு, அறைக்கு வந்தாள். மீனாட்சி, இன்னும் அதிர்ச்சி விலகாமல் அங்கேயே நின்றார்.

அவரை கண்டு கொள்ளாமல், படுக்கையில் சென்று படுத்தாள்.

"கவலை படாம போ…ஓடிப் போயிட மாட்டேன்.நிம்மதியா இரு.."

அவரிடம் சொல்லி விட்டு, கண்களை மூடிக்கொண்டாள்.

இது, கொஞ்சம் ஆற போட வேண்டிய விஷயம் என்று ,அப்போதைக்கு ஒன்றும் கூறாமல், அறையை விட்டு வெளியேறினார் மீனாட்சி.

அவர் செல்வதற்கு காத்திருந்தது போல,மூடிய இமைக்குள் இருந்து கண்ணீர் வழிந்தது கீர்திக்கு.

'என்னை மன்னிச்சுடு மாமா..உன் கூட சேர முடியுமா ??தெரில..எந்த உறவும் கிடைச்சதில்லை, நிலைச்சதில்லை உனக்குன்னு சொன்ன,நானும் அது மாதிரி ஆகிட்டேன்.

உன் மனசுல என்னை பத்தி என்ன நெனைப்ப?? நம்பிக்கை துரோகின்னு தானே??
என்னை வெறுத்துடாத மாமா..ப்ளீஸ்…'
மனதுக்குள் அவனோடு உரையாடி விட்டு, களைப்பிலும், சோர்விலும் கண் அயர்ந்தாள்.

….தொடரும்…

 
Top