7
என் காதல் பூவது
தீயாகி நிற்கக் கண்டேன்!
கனல் வீசும் காரிகையின்
வண்ணம் என்னவென்று
புரியாது நின்றேன்!
என் காதல் பூவது
தீயாகி நிற்கக் கண்டேன்!
கனல் வீசும் காரிகையின்
வண்ணம் என்னவென்று
புரியாது நின்றேன்!
சூரியன் உச்சியில் வந்து
நின்றிருந்தான்.மாந்தர்
செய்யும் இழி செயலால்
எழுந்த கோபமோ என்னவோ
தீப்பிழம்பாய்த் தெரிந்தான்
ஆதவன்.
மது தப்பி விட்டாள்
என மனதில் ஏற்பட்டிருந்த
நிம்மதியோடு அங்கிருந்த
நிலைமையைக் கவனித்தான்
மதிவதனன்.
லோகுவின் மயக்கத்தைத்
தெளிவிக்க சுமன் முயன்று
கொண்டிருக்க,நடந்து
நடந்து ஓய்ந்து போனவன்
போல சோபாவில்
அமர்ந்திருந்தான் ரெஜீஸ்.
இவர்களை எப்படித்
தாக்குவது?கையில் வலி
உயிர் போகிறது.காலும்
வலிக்கிறது.
யாரையேனும் உதவிக்கு
அழைக்கலாமா?போலீஸ்?
ம்ஹூம்.அவர்கள்
வருவதற்குள் இவர்கள்
என்னைக் கொன்று புதைத்து
விடுவார்கள்.
மதி!இவர்கள் முதல்
உன்னை போன் செய்ய
விடுவார்களா? ஒழுங்காக
யோசி!
மது என் காரைப்
பார்த்திருப்பாளா?பதட்டத்தில்
ஓடுகையில் கவனிக்க
வாய்ப்பு குறைவு தான்.
இருந்தாலும்...எனக்கு
நம்பிக்கை இருக்கிறது.
"சுமன்,அவனை விடு.
எனக்கு ஒரு கிளாஸ்
ஊத்திட்டு வா"
இவனுக்குக் குடித்தால்
தான் மூளை வேலை
செய்யும் போலிருக்கிறது.
சுவற்றில் சாய்ந்து,கால்
நீட்டி அமர்ந்து கொண்டு,
தன்னை ஏளனமாய்ப் பார்க்கும்
மதிவதனனின் முகத்தைப்
பார்த்த ரெஜீஸ்ஸின்
குழப்பம் அதிகரித்தது.
இத்தனை நேரம் இவன்
முகத்தில் தெரிந்த பதற்றம்
இப்போது இல்லையே!ஏன்?
"அமைதியா யோசி ரெஜீ"
என்று கிளாஸ்ஸை மேஜை
மீது வைத்தான் சுமன்.
அதை எடுத்த ரெஜீஸ்,
அப்போதே அங்கிருந்த மற்ற
இரு டம்ளர்களையும்
கவனித்தான்.
ஒன்று காலியாக இருக்க,
ஒன்றில் ஜூஸ் அப்படியே
இருந்தது.இரு டம்ளர்களையும்
மாறி மாறிப் பார்த்த
ரெஜீஸ்ஸிற்கு அப்போதே
உண்மை உறைத்தது.
அவள் குடித்த ஜூஸ்...ஆம்!
என்னுடைய டம்ளராக இருக்க
வேண்டும்.அது தான் தப்பிச்
சென்றிருக்கிறாள்.இது
தெரியாமல்,ஜூஸ்
குடித்தவளால் எப்படித்
தப்பிச் செல்ல முடியும் என
யோசித்து நேரத்தை
வீணடித்துக் கொண்டிருக்கிறேன்.
அவள் கையில் டம்ளரைக்
கொடுத்தேனே.எப்படி மாற்றிக்
குடித்திருக்க முடியும்?
ஒரு வேளை...அவளுக்கு
எங்கள் திட்டம் தெரிந்து...
டம்ளரை மாற்றிக் குடித்து...
மயங்குவது போல்...என்னை
நம்ப வைத்து...தப்ப
நினைத்தாளா?
நான் அவளை முட்டாள்
என்று நினைத்தேன்.அவள்
என்னை முட்டாளாக்கி
இருக்கிறாள்.
தப்பியா செல்கிறாய்?உன்னை
அவ்வளவு சுலபமாகத்
தப்ப விட மாட்டேன்.
"சுமன்,என் போனை
எடுத்துட்டு வா.இல்லை..இரு
இரு சுமன்"என அவனை
நிறுத்தினான் ரெஜீஸ்.
"என் போனை இனி
எடுக்க மாட்டா.இவன்
போன்ல இருந்து கூப்பிடுவோம்"
அடிப்பதற்குத் தயாராக
மரக்கட்டையோடு எழுந்து
நின்றிருந்த மதிவதனனைப்
பார்த்தவன் பார்வையில்
தான் எத்தனை வன்மம்!
"பரவாயில்லையே!இன்னும்
உன்னால அடிக்க முடியும்னு
நம்பறயே.சுமன்,நம்ம ஹீரோ
கையில இருக்கிற கட்டையை
வாங்கு"என்று சிரித்தான் ரெஜீஸ்.
எதற்கு இவன் திடீரென்று
பல்லைக் காட்டுகிறான்?
கையில் இருந்த ஆயுதம்
பறிக்கப்பட,மதிவதனன்
சிந்தனை வேகம் கொண்டது.
"தப்பிச்சுட்டான்னு சந்தோஷப்
பட்டே இல்லே?எப்படி வர
வைக்கிறேன்னு பாரு"
"உனக்குக் கொஞ்சம் கூட
மூளை இல்லையா?அவளுக்கு
நான் யாரோ!எனக்காக அவ
வருவான்னு கனவு காணாதே"
"அதையும் தான் பார்ப்பமே.
உன் அலறலைக் கேட்டா...
வராம இருப்பாளா என்ன?"
ரெஜீஸ் சுமனுக்கு கண்
ஜாடை காட்டியதில்,அவன்
மதிவதனன் கையைப் பிடித்து
முறுக்கி முதுகிற்குப் பின்னால்
கொண்டு சென்று மதிவதனனை
வலியில் துடிக்கச் செய்தான்.
"நண்பனைக் காப்பாத்த
எத்தனை மணி நேரம் கெடு
கொடுக்கலாம் ஹீரோ"
அலட்சியமாகக் கேட்டபடி
மதிவதனனின் கைபேசியைப்
பறிக்க அவனருகில் சென்ற
ரெஜீஸ்ஸின் வயிற்றில்
மதிவதனன் வைத்த பலமான
உதையில்,அங்கிருந்த
மரக்கட்டிலில் தலை மோதி
விழுந்தான் ரெஜீஸ்.
"ரெஜீ!!!"
மதிவதனனை விட்டு விட்டு,
நண்பனிடம் ஓடினான் சுமன்.
"ரெஜீ...ரெஜீ...அடி படலையே..."
நண்பனின் தோளைத் தொட்டுத்
திருப்பிய சுமன்,தலையில்
விழுந்த அடியில்,ரெஜீஸ்
மீதே மயங்கிச் சாய்ந்தான்.
நெற்றியில் ரத்தம் கசிய,
நண்பனை விலக்கி விட்டு
எழுந்தான் ரெஜீஸ்.
"என் மதுவை நெருங்கணும்னு
நினைக்காதே.நீ நினைக்கிறது
எப்பவும் நடக்காது"
மதிவதனன் முகம் வலியைக்
காட்ட,அவன் குரலோ
இரும்பை ஒத்திருந்தது.
"ஏன் நடக்காது"சுற்றிலும்
பார்த்த ரெஜீஸ்ஸிற்கு,தலை
வலி எடுக்கத் தொடங்கியது.
இவனைக் கொன்றால் தான்
என் ஆத்திரம் தீரும்.அவள்
என்னை முட்டாளாக்கி விட்டுத்
தப்பிச் சென்று விட்டாள்.
இவனையும் தப்ப விடுவதா?
கூடாது.
பக்கத்தில் வரட்டும் அடிக்கலாம்
என மரக்கட்டையை ஓங்கிப்
பிடித்தபடியே நின்றிருந்தான்
மதிவதனன்.
எதைக் கொண்டு தாக்கலாம்
என்று பார்த்த ரெஜீஸ்ஸிற்கு,
சுமன் ஜூஸ் டம்ளர் அருகே
வைத்திருந்த மதிவதனனின்
ரத்தத்தை ருசி பார்த்த
உடைந்த பாட்டில் துண்டு
கண்ணில் பட்டது.
கண்ணாடித் துண்டோடு
தன்னை நெருங்கி
வருபவனைக் கண்டு,
சுவற்றில் ஒரு காலை
ஊன்றி தன்னை
திடப்படுத்திக் கொண்டான்
மதிவதனன்.
"அங்கயே நில்லு ரெஜீஸ்"
கடுமை விரவி ஆணை
போல் ஒலித்தது மதுராவின்
குரல்!
ஆம்,மதுராவின் குரலே
தான்!
குரல் வந்த திசை நோக்கிப்
பார்த்த ரெஜீஸ்,அப்படியே
உறைந்து நின்றான்.
மயங்கிக் கிடந்த சுமன்
கையின் மீது,தனது ஹீல்ஸ்
அணிந்த காலை வைத்து,அவன்
நெற்றிக்கு நேராகத் துப்பாக்கியைப்
பிடித்திருந்தது,கை உறை
அணிந்திருந்த மதுராவின்
மலர்க்கரம்!
தித்திக்கும்



ஹாய் பிரெண்ட்ஸ்,
ஏழாம் அத்தியாயம் பதிந்து
விட்டேன்.இனி மது,மதி
குறித்தக் கவலையின்றி
நீங்கள் வாசிக்கலாம்.
வாசிப்பதோடு உங்கள்
கருத்தையும் பகிர்ந்து
கொள்ளுங்கள் தோழமைகளே.
நன்றி


அன்புடன்,
நித்திலா