கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

துணையாக நான் வருவேன்-3

Akila vaikundam

Moderator
Staff member
3

திருமணம் முடிந்ததுமே இரு குடும்பத்தாரும் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்துக்கொண்டிருக்க,சற்று நேரம் வரை மேடையில் நின்ற மாறன் பிறகு எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் கழுத்தில் இருந்த மாலையை கழட்டி ஒரமாக வைத்தவன் யாரிடமும் எதுவும் கூறாமல் பந்தி நடக்கும் இடத்தை நோக்கி செல்ல மேடையில் நின்ற உறவினர்கள் அனைவருக்குமே அதிர்ச்சி.

மணமக்களின் பெற்றொர்கள் உறவினர்களிடம் உரையாடிய படி மேடைக்கு அனுப்பி வைக்க மேடையில் மாப்பிள்ளை இல்லாமல் வேதா மட்டும் விழித்து கொண்டிருந்தாள்.


தோழிகளிடம் பேசிய படி டைனிங் ஹாலை விட்டு வெளியே வந்து கொண்டிருந்த இந்து மாறனை அங்கு காணவும் யோசனையுடன் மாமா அக்கா எங்க…? என்று மாறனின் பின்னால் தேடியவள் சகோதரி இல்லாததைக் கண்டு சற்று புன்னகையுடன் சாப்பாட்டை பார்த்ததும் அக்காவை விட்டுடிங்களே என்று கேலி செய்தாள்.
அவளின் கேலியை பொருட்படுத்தாது அவன் செல்ல... குழப்பத்துடன் இந்துமதி வேதாவை தேடி வந்தாள்.


மண்டபத்தில் மணமக்களை வாழ்த்திவிட்டு புகைப்படம் எடுப்பதற்காக வந்த உறவினர்கள் அனைவருமே மாப்பிள்ளை இல்லாமல்
எப்படி புகைப்படம் எடுப்பது என்றபடி சாப்பிடும் இடம் நோக்கி நகர்ந்து செல்ல ஆரம்பித்தார்கள்.


வேதாவிற்கு அவளின் உணர்ச்சியை எப்படி வெளிக்காட்டுவது என்றே தெரியவில்லை திருமணமாகி சடங்குகள் கூட இன்னும் முற்றிலும் முடியவில்லை ஆனால் அதற்குள் கணவன் தன்னை விட்டு விட்டு சாப்பிட சென்றுவிட்டார் .


மரியாதைக்காக கூட சாப்பிட செல்கிறேன் என்று கூறவும் இல்லை அவளையும் வா என்று அழைக்கவும் இல்லை என்ன மாதிரியான மனிதர் திருமண விஷயத்தில் தன்னுடைய பெற்றோர்கள் அவசரப்பட்டு விட்டார்களா…?


இல்லையென்றால் இவனின் புறத்தோற்றத்தை கண்டு நான் நான் மதி மயங்கி புத்தி இழந்து விட்டேனா…
இப்படி பலவாறான எண்ணங்கள் அவளின் மனதில் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்க மாமியார் கனகா அவளின் அருகில் வந்து நின்றார்.


மேடை அருகே வரும் உறவினர்களிடம் எல்லாம் சிரித்தபடியே சாப்பிட்டுட்டு வாங்க என்று போலியான புன்னகையுடன் கூறிய கனகா இந்துவையும் வேதாவையும் கேள்வியுடன் பார்த்த படி


என்ன வேதா…!
தனியா நின்னுகிட்டு இருக்க…?
மாறன் எங்கே என்று கேட்டார்.


பதில் கூறத் தெரியாமல் வேதா மாமியாரின் முகத்தையே பார்க்க இந்துமதி முந்திக்கொண்டு அத்தை மாமா டைனிங் ஹால் போயிட்டாங்க என்றாள்.

என்ன டைனிங் ஹால் போயிட்டானா அது எப்படி உன்னை தனியா விட்டுட்டு போனான்…உன்னை கூப்பிடலையா?


*******


சரி மாலையை கழட்டி இப்படி வச்சிட்டு என் கூடவா...என்று அவளை அழைத்துச் சென்றவர் செல்லச் செல்லவே அவளிடம் சில அறிவுரைகளை வழங்கினார்.

இங்க பாரு வேதா நீ ஒன்னும் சின்ன பொண்ணு கிடையாது உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு உனக்கும் சில பொறுப்புகள் இருக்கு இப்படி மாறன் தனியா போறதை வேடிக்கை பார்த்துட்டு இருக்க கூடாது அவன் எங்க போனாலும் கூடவே போகனும் புரியுதா ஒவ்வொரு தடவையும் நான் வந்து உனக்கு சொல்லிக்கிட்டு இருக்க மாட்டேன் என்று குரலில் சற்று கடுமையை காட்டியிருந்தார்….


பயந்த வேதா சரி என்பது போல் தலையாட்ட... அவளின் அந்த சுபாவம் கனகாவிற்கு மிகவும் பிடித்தது...சற்று புன்னகைத்தவர்
ஆம்பளைக இப்படித்தான் பொறுப்பில்லாம நம்மளை கண்டுக்காம போவாங்க நாம தான் அவங்கள கெட்டியா புடிச்சுக்கனும்...ம்ம்...புரியுதுல்ல என்று வேதாவைப் பார்த்து கேட்டவர் கண்களால் மாறனை தேடினார்.


மாறல் கடைசியாக இருந்த ஒரு டேபிளில் யாருடைய கவனத்தையும் ஈர்க்காதவாறு சாதாரணமாக உணவருந்திக் கொண்டிருக்க எப்படியும் மணமகள் வருவாள் என எதிர்பார்த்து பரிமாறும் ஆட்கள் காத்திருக்க அவனின் இருபக்கத்திலும் இருக்கைகள் காலியாக இருந்தது…

நேராக அவனிடத்தில் வந்த கனகா வேதாவை மாறனின் வலது பக்கத்தில் அருகில் அமர வைத்தார்.

வேதா அமர்ந்ததை கண்டு கொள்ளாதவன் போல மாறன் சாப்பிட்டு கொண்டிருக்க எரிச்சல் அடைந்த கனகா மாறனின் இடதுபக்கத்தில் வந்து அமர்ந்தவர் அவனின் காதருகில் கோபமாக பற்களை கடித்துக்கொண்டு கோபமாக பேசினார்.


என்ன மாறா இது கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாம வேதாவை அப்படியே விட்டுட்டு வந்து இங்க சாப்பிட்டிட்டு இருக்க…
வரும்போது அவளை கூட்டிட்டு வரணும்ங்கற அறிவு கூட உனக்கு இல்லல….

வந்திருக்கிற சொந்தகாரங்க எல்லாரும் நம்மள பத்தி தான் பேசிட்டு இருக்காங்க
கேட்டவங்க கிட்ட எல்லாம் சாப்பிட்டதுக்கு அப்புறம் போட்டோ எடுத்துக்கலாம்னு சொல்லி சமாளிச்சிட்டு வந்துருக்கேன் இங்க வந்தா நீ யாரோ கல்யாணத்துக்கு வந்தது போல சாப்பிட்டிட்டு இருக்க… என்று பொரிந்து தள்ளினார்.


அம்மா ப்ளீஸ் தயவுசெஞ்சு என்னை கத்த வைக்காதீங்க... என்ன சொன்னீங்க அவ கழுத்துல தாலி கட்ட சொன்னிங்க..கட்டியாச்சி... இதுக்கு மேலே என்னாலே வேற எதுவும் செய்ய முடியாது என்று தாய்க்கு மட்டும் கேட்கும்படி தெளிவாகக் கூற அதிர்ச்சியில் கனகா வெற்றிமாறனை கண்சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

அதற்குள்ளாகவே கனகாவிற்கும் வேதாவிற்கும் இலை போட்டு பரிமாற முகத்தை இயல்பாக வைத்துக்கொண்ட வெற்றிமாறன் தாயைப் பார்த்து முதல்ல சாப்பிடுங்க வயிறு நிறைஞ்சா கோபம் தானா குறையும் என்று கூறியதோடு நிறுத்திக் கொள்ளாதவன் அங்கு பரிமாறிக் கொண்டிருந்த ஒருவரை அழைத்து கேரட் அல்வா எடுத்துட்டு வந்து இரண்டு பேருக்குமே வைங்க என்று கூறினான்.


வேதாவிற்கு தாயும் மகனும் அப்படி என்ன குசுகுசுவென பேசிக் கொள்கிறார்கள் என்று அறிந்து கொள்ளும் ஆவலில் இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருக்க வேதாவை பார்த்த வெற்றிமாறன் கேரட் அல்வா ரொம்ப நல்லா செஞ்சிருக்காங்க டேஸ்ட் பண்ணி பாரு என்று அவளின் பக்கமாக இலையை நகர்த்தி வைக்க இதற்கு மேல் அவனிடம் என்ன பேசுவது என்று யோசித்த வேதா எதுவும் பேசாமல் இலையை பார்த்து உண்ண ஆரம்பித்தாள்.

ஆனால் கனகா வெற்றிமாறனை முறைத்துக்கொண்டே இலையை நகர்த்தி வைத்துவிட்டு எழுந்தவர் முன்புறம் உறவினர்கள் குழுமி இருந்த இடத்தை நோக்கிச் சென்றார்.


அவங்களை சமாளிக்க வேண்டுமே இல்லையென்றால் இவர்கள் சென்னை செல்லும் முன்பு இங்கு நடக்கும் கூத்து அனைத்துமே மற்ற உறவினர்களுக்கு தெரிந்து விடும்.


மாறனின் இலையை பார்த்துக்கொண்டே வேதவல்லி வேகமாக உணடு கொண்டிருக்க நேர்மாறாக மாறனோ அவனது இலையை மட்டும் பார்த்தபடி பாயாசத்தில் அப்பளத்தை நொறுக்கிப் போட்டு சாப்பிட்டு கொண்டிருந்தான்.

பிறகு பொறுமையாக இலையை முடியவன் எழுந்து கை கழுவும் இடத்தை நோக்கி நடந்து செல்ல
சாப்பிட்டுக்கொண்டிருந்த வேதாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை சாப்பிட சாப்பிடவே அப்படியே விட்டுவிட்டு அவனின் பின்னே ஓடத் தொடங்கினாள்.

செல்லவிலலை என்றால் மாமியார் வந்து தன்னை திட்டி விடுவார்களோ என்று பயந்து கொண்டு…


அவள் பின்னால் வருவதை தெரிந்தும் கூட கண்டுகொள்ளாதவன் போல மாறன் கை கழுவிக் கொண்டு மேடையை நோக்கி நகர வேதாவும் அவனின் வேகத்திற்கு ஈடு கொடுத்தபடி அவனின் அருகில் நடந்து வந்தாள்.


சற்று அவளை திரும்பிப் பார்த்தவன் எதுவும் பேசாமல் மேடையில் சென்று அவனின் மாலையை எடுத்துப் போட்டுக்கொள்ளவும் அவசரமாக அவளின் மாலையை எடுத்து போட்டபடி அவன் அருகில் நின்றாள்.


அதன் பிறகு உறவினர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் வந்து புகைப்படம் எடுத்தும் பரிசுப் பொருட்களை கொடுத்துக் கொண்டிருக்க அரை மணி நேரம் வரை பொறுமையாக நின்றவன் அதன் பிறகு கை கடிகாரத்தை பார்த்தபடி முகத்தில் சலிப்பைக் காட்டினான்.


வேதா விற்கு அவனின் அருகில் நிற்பது முள் மேல் நிற்பது போல் இருந்தது காலையில் எல்லாம் எப்போதடா இவனை திருமணம் செய்து கொள்வோம் என ஏங்கி கிடந்தாள். ஆனால் இப்பொழுது அவளின் நிலைமை தலைகீழ் ஏனடா இவனைத் திருமணம் செய்து கொண்டோம் என்று பரிதவித்தாள்.

அவளின் பெற்றோர்கள் பெண்ணை திருமணம் செய்து கொடுத்தாகிவிட்டது என்ற சந்தோஷத்தில் இவளின் பக்கம் கூட திரும்பிப் பார்க்கவில்லை.

தம்பியும் தங்கையும் அவரவர் நண்பர்களுடன் ஜாலியாக ஆடிப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.


மாறனின் குடும்ப உறுப்பினர்களோ மேடையின் பக்கம் திரும்பி கூட பார்ப்பதில்லை.


மாறனோ ஏதோ ஒன்று தனது அருகில் நிற்பது போல நினைத்துக்கொண்டு வேதாவைப் பார்த்து அவ்வப்போது அருவருப்பான பார்வை ஒன்றை பார்த்து வைக்கிறான்.


திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே அவனின் செயல்களை சகித்துக் கொள்ள முடியாதவளால் எப்படி காலம் முழுவதும் அவனுடன் ஒன்றி இசைந்து வாழ முடியும்.


நினைக்க நினைக்க தொண்டை அடைத்து விழிகள் நனைய ஆரம்பித்தது இதற்காகவா இத்தனை ஆண்டுகாலம் ஏங்கிக் கிடந்தோம்.

ஒருவேளை அவனுக்குத் தன்னை பிடிக்கவில்லையோ ஊரார் பேசுவது போல் தான் மிகவும் குண்டாக பார்ப்பதற்கு சுமாராக இருப்பதினால் தான் அவன் வேண்டா விருப்பாக தன்னை திருமணம் செய்துகொண்டு அதை செயல் வழியாக நடத்திக் கொண்டிருக்கிறானோ என மௌனமாக கரைந்து கொண்டிருந்தாள்.


மாறனும் வேதாவும் பல்வேறு மன சஞ்சலங்களில் உழன்று கொண்டிருக்க புகைப்படக்காரர் கர்ம சிரத்தையாக அதையும் பதிவு செய்து கொண்டிருந்தார்.


இருவருமே முகத்தில் பலவித நவரசங்களை காண்பித்தபடி யோசனையாக இருக்க எவ்வளவு நேரம்தான் அதையே புகைப்படம் எடுப்பவரும் ஓளிநாடாவாக பதிபவரும் சேமிப்பது என அவர்களுக்கே சற்று சலிப்பு தட்டியது.

ஒருவழியாக உறவினர்கள் அனைவருமே மணமக்களை வாழ்த்தி விட்டுச் சென்றிருக்க புதுமண தம்பதியரை தவிர வேறு யாரும் இல்லாததால் மேடை காலியாக இருந்தது.


புகைப்படக்கலைஞர் இருவரையும் ஜோடியாக நிற்கவைத்து பலவிதமான அபிநயங்கள் கூறி அது போல அவர்களை நிக்க வைக்க முயன்றார்...அவர் சொல்வதை கேட்ட வேதா சங்கோஜத்துடன் நெளிந்தாள்.

ஆனால் மாறன் முற்றிலும் மறுத்துவிட்டான் எடுத்தவரை போதும் இனி மேற்கொண்டு ஒரு புகைப்படத்திற்கு கூட தன்னால் நிற்க முடியாது என்று அவர்களிடம் கடுமையாகப் பேசியவன் எதை பற்றியும் யோசிக்காமல் மாலையை கழட்டி வீசியபடி மேடையை விட்டு கீழே இறங்கினான்.

புகைப்படம் எடுப்பவர்களுக்கு மட்டுமல்ல வேதாவிற்கும் மிகப்பெரிய அதிர்ச்சி.

ஜோடியாக ஒரு புகைப்படம் தான் எடுக்க வேண்டும் என்றார்கள் அதற்கு ஏன் இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம்.


எதிர்காலத்தில் தங்களின் பிள்ளைகளுக்கு பேரப்பிள்ளைகளுக்கு தாங்கள் இருவரும் தனியாக திருமணத்தின் போது எடுத்தது என எதை காண்பிப்பான் இவன் .


ஒருவேளை அவனுக்கு எதிர்காலத்தில் தன்னுடன் இருக்கவே பிடிக்கவில்லையோ அதனால் தான் இப்படி நடந்து கொள்கிறானோ என்று நினைத்தவளுக்கு மேலும் குழப்பம் உண்டாயிற்று.


காலையில் இருந்த மாறன் நடந்து கொள்ளும் விதத்தை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தவள் பயத்தோடு கலவரமும் சேர்ந்து கொள்ள அப்படியே தளர்ந்து அங்கிருந்த ஸ்டூலில் அமர்ந்தாள்.


மாறன் வேகமாக கீழே இறங்கி சென்றதைக் கண்ட கனகாவும் அவரது கணவரும் வேகமாக மாறனிடம் வந்தார்கள்.


என்ன மாறா இது எல்லா விஷயத்திலும் குழந்தை மாதிரி மறுபடியும் மறுபடியும் இப்படியே பண்ணிட்டு இருக்கற பாக்கறவங்க என்ன நினைப்பாங்க வேதாவோட அம்மா அப்பா இப்பவே பயங்கரமான குழப்பத்தில் இருக்காங்க பொண்ணை இவனோடு அனுப்பி வைக்கலாமா இல்ல வேணாமானு…

சாப்பிடப் போகும் போதும் அவளை கூட்டிட்டு போகாமல் தனியா போயிட்ட இப்போ ஒரு போட்டோ எடுக்க சொன்னதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ற என்னதான் உன் மனசுல நினைச்சுகிட்டு இருக்க எங்களை எல்லார் முன்னாடியும் தலைகுனிய வைக்கணும்னு நினைச்சுக்கிட்டே தான் நீ வந்தியா என்று சற்று கண் கலங்கியபடி பேசினார்.


அம்மா போதும் நிறுத்துங்க உங்களோட ட்ராமா பார்த்து பார்த்து எனக்கு சலிப்பு வந்தாச்சு கடைசியா உங்களோட ஆசைப்படி பிடிக்கவே இல்லனா கூட அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டி மனைவியாக்கியாச்சு.


இதுக்கு மேல என்ன பண்ணனும்னு நீங்க வந்து எனக்கு டியூஷன் எடுக்க வேண்டாம் என்னோட வாழ்க்கையை வாழ எனக்கு தெரியும் தயவு செஞ்சு இனிமே நீங்க என்னோட வாழ்க்கைல தலையிடாதீங்க.


நான் இப்போ உடனே சென்னை போகணும் முடிஞ்சா உங்க மருமகளை என்னோடு அனுப்பி வைங்க அப்படி இல்லன்னா பத்திரமா அவ இந்த ஊரிலேயே அவங்க அம்மா அப்பா வீட்ல இருக்கட்டும் உங்களுக்கு பத்து நிமிஷம் தான் டைம் அதுக்குள்ள என்ன முடிவுனு உடனே எனக்கு சொல்லுங்க என்று கூறியபடி வேகமாக மண்டபத்திலிருந்து மணமகனின் அறைக்குள் சென்றான்.


செல்லும் மகனை அதிர்ச்சியுடன் கனகா பார்த்துக் கொண்டிருக்க
மேடையில் அமர்ந்தபடி இதை கவனித்த வேதா ஏதோ சரியில்லை என தோன்ற மாமியாரை நோக்கி வந்தாள்.

சற்றுத் தூரத்தில் இருந்து தாய் மகனின் சம்பாஷணை கவனித்துக்கொண்டிருந்த வேதாவின் பெற்றோர்கள் கனகாவை நோக்கி வர…

பெண் வீட்டாரிடம் என்ன பதில் கூறுவது என்று கனகா யோசிக்கத் தொடங்கி இருந்தார் .


இன்னும் சடங்குகள் முழுதாக முடியவில்லை மதிய வேளை உணவு கூட உண்ணவில்லை ஆனால் அதற்குள் மகன் மருமகளை அழைத்துக் கொண்டு சென்னை செல்கிறேன் என்று கூறுகிறான் இதை வேதாவின் பெற்றோர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்…




எப்படியும் இரண்டு மூன்று நாட்கள் தங்கியிருந்து விட்டு தான் செல்வோம் என்று கூறியிருக்கிறார்கள் அதற்கான ஏற்பாடுகளை வேதாவின் பெற்றோர்களும் செய்திருக்கிறார்கள் அப்படி இருக்கும் போது உடனடியாக மகன் செல்கிறான் என்று கூறும்பொழுது அவர்கள் தன்னையும் தங்கள் குடும்பத்தை பற்றி என்ன நினைப்பார்கள்.


முதலில் வேதா செல்ல வேண்டுமே…காலையிலிருந்தே மாறனின் நடவடிக்கைகளை கவனித்த வேதா பயந்திருப்பது கனகாவிற்கு நன்றாகவே தெரியும்.


இப்பொழுது உடனடியாக அவனுடன் செல் என்று கூறினாள் அவள் அதை எப்படி எடுத்துக் கொள்வாள்…
ஏற்கனவே பயந்து நடுங்கிக் கொண்டு இருக்கிறாள் சொல்ல மாட்டேன் என்று கூறிவிட்டாள் மகளின் திருமணத்திற்காக தான் பட்ட அத்தனை கஷ்டங்களும் வீணாகிவிடுமே...என்று பயந்தபடி அவர்களை எதிர்கொள்ள கனகா தயாரானார்.

தொடரும்...
 
Top