கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நந்தினி - சிறுகதை

Rajasree Murali

Moderator
Staff member
நந்தினி வேலை நேரம் முடிந்து தான் போட்டுக்கொண்டிருந்த கொரோனா பாதுகாப்பு உடைகளை களைந்து தன்னுடைய வழக்கமான சுடிதாருக்கு மாறி மருத்துவமனையை விட்டு வெளியே வந்தாள். கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆயிற்று வெளி உலகத்தை பார்த்து. வழக்கத்தை விட அதிக அளவில் கொரோனா பாதித்த நோயாளிகள் வந்த வண்ணமிருந்தனர். செவிலியர்கள் பற்றாக்குறை. அதனால் எட்டு மணி நேர வேலை இன்னும் அதிகமானது. வீட்டிற்குக்கூட போக முடியவில்லை. பார்க்கிங் ஏரியாவில் இருந்த தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் அமர்ந்தவள் சட்டென தன் மொபைல் போனில் அழைப்பு வரவே லேசான கலவரத்துடன் பேசலாமா வேண்டாமா என்று யோசித்தாள். விடாமல் அடித்துகொண்டேஇருக்கவே கைகள் உதறலுடன் எடுத்து பேசினாள். ஒரே வினாடி தான் அந்த பக்கத்திலிருந்து வந்த செய்தி அவளை நிலைகுலைய வைத்தது. தடுமாறிய அவள் வண்டியை விட்டு இறங்கி சுவற்றில் சாய்ந்தபடி வாய்விட்டு அழ ஆரம்பித்தாள். செக்யூரிட்டி ஓடி வந்து என்ன ஆச்சும்மா என்று பதறியபடியே கேட்க தன்னை சமாளித்துக்கொண்டு ஒன்றுமில்லை நான் கிளம்பறேன் என்றவள் தடுமாற்றத்துடன் வண்டியில் உட்கார்ந்து அழுதபடியே வேகமாக ஓட்டினாள். ஹெல்மெட் போட்டிருந்ததால் அவள் அழுவது தெரியவில்லை.

மருத்துவமனையிலிருந்து தள்ளி இருந்தது அவள் தங்கி இருந்த பிரமாண்டமான அபார்ட்மெண்ட். சாலை காலியாக இருந்ததால் சீக்கிரமாகவே வந்து சேர்ந்தாள். வாசலிலேயே அவளை வரவேற்க அபார்ட்மெண்டை சேர்ந்த இருபது பேர் முககவசம் அணிந்து கையில் ஆரத்தி தட்டுடனும், கைகளை தட்டியபடியும் அவளை வரவேற்க தனி மனித இடைவெளியுடன் காத்திருந்தனர். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. நந்தினி நந்தினி என்று கோஷம் வேறு போட்டனர். அதில் அவளின் நெருங்கிய தோழி நர்மதா ஏய் என்னடி முழிக்கறே. ஒரு வாரமா ஹாஸ்பிடல்லயே தங்கி இருந்து சேவை செய்து இருக்கே அதுக்குத்தாண்டி இதெல்லாம் என்றாள். தன்னுடைய துக்கத்தை மறைத்தபடியே சிரித்து எல்லோரின் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டே லிப்டில் ஏறி ஐந்தாவது மாடி வருவதற்குள் தனிமையில் மீண்டும் கதறி அழுதாள்.

வீட்டின் உள்ளே நுழைத்தவள் கணவன் வினோத்தை பார்த்தவுடன் இது வரை அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்து சிதறி அவன் மேல் சாய்ந்தவாறு உட்கார்ந்தாள். அழுகை சத்தம் கேட்டு தூங்கிக்கொண்டிருந்த அவளின் ஐந்து வயது மகள் பிரியா கண்களை கசக்கியபடியே அம்மா அழுவதையும், அப்பா அவளை சமாதானப்படுத்துவதையும் ஒன்றும் புரியாமல் பார்த்தபடியே ஹாய் அம்மா வந்தாச்சு என்று கட்டிக்கொள்ள ஓடி வந்தாள். சட்டென நந்தினி, இரு குட்டிம்மா அம்மா குளிச்சிட்டு வந்துடறேன் என்று அழுகையை மறைத்தபடியே குளியலறை சென்று ஷவரை திறந்து நின்றவள் தனக்கு நினைவு தெரிந்த வயதிலிருந்து மூன்று மாதம் முன்பு டெல்லிக்கு ரயிலேற்றி கையை ஆடியது வரை தன் தாயின் நினைவுகள் மளமளவென மனக்கண் முன்னே ஓட, அடக்க முடியாமல் சத்தம் போட்டு அழுதபடியே தன் தாயின் முகந்தை ஒரு தரம் பார்க்க முடியாமல் போனதற்கு காரணமான கொரோனாவை ஆத்திரம் தீர சபித்தும் திட்டியும் தீர்த்தாள்.
 

Sethu

New member
நல்ல கதை, நேரில் நடந்தது போன்ற எழுத்தாற்றல். கொரனாவினால் பெற்றோர்களின் கடைசி நிமிடங்களில் அருகில் இருக்க முடியா பல பேர்களை அறிவேன். அவர்களின் துயரம் விவரிக்க இயலாதது. தொடர்ந்து எழுதவும் அம்மா.

அன்புடன்
சேது மாதவன்
 
Top