அத்தியாயம் 4
அப்பா ஒருபக்கமும் பெரியக்கா ஒருபக்கமுமாகத் விசாரிக்கத் திரிந்ததில் அண்ணாவும் 'தவளைப்பாய்ச்சல்' என்ற ஆனையிறவுச் சண்டைக்குப் போயுள்ளது நிச்சயமாகிற்று!
எங்கள் வீடோ கதி கலங்கிப்போனது! சாவி கொடுத்த பொம்மைகளானோம் நாம். சுவாசித்தோம், தாகம் தீர்த்துக்கொண்டோம், கிடைப்பதைக் கொறித்தோம். இருந்தும் இதிலெதையுமே உணர்ந்து செய்தோமில்லை.
நரக வேதனை என்பது இதுதானோ என்றுணர்ந்த வண்ணமே மணித்துளிகள் கடந்து போயின! அதைவிட ஒரு வேதனையோ, மனவுளைச்சலோ இருக்க முடியாதென்றே நினைத்தோம்.
வியாழன், வெள்ளி, சனி என்று அந்தக் கலக்கம் அதிகரித்துக் கொண்டே போனதேயொழிய சற்றும் குறையவில்லை. இருந்தும், எங்கள் ஒவ்வொருவரின் மனவாழத்திலும் அண்ணா எப்படியும் நல்லபடி வந்துவிடுவான் என்ற நம்பிக்கையிருந்தது.
கண்களில், கருத்தில் பட்ட கடவுளர் எல்லோருக்கும் இறைஞ்சல்கள் சளைக்காது அனுப்பினோம்; தகுதிக்கும் மீறிய நேர்த்திகள் வைத்தோம்.
சனிக்கிழமை மாலை தீசன் அண்ணாவும் அவரின் மனைவி ராசாத்தி அக்காவும் வந்திருந்தார்கள். அவர்கள் புங்குடுதீவிலிருந்து அமைதிப்படையின் அட்டூழியங்களுக்கு அஞ்சி,'சேத்து வச்ச சொத்துப் பத்துப் போனாலும் பரவாயில்ல, உயிரையும் மானத்தையுமேனும் காப்பாற்றுவம்' என்ற நோக்கில் அடித்துப் பிடித்துக்கொண்டு இடம் பெயர்ந்து வந்து எங்கள் வீட்டுக்கருகில் சிலமாதங்கள் இருந்துவிட்டு, இப்போது பாண்டியந்தாழ்வில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் எங்களுக்கும் குறுகியகாலப் பழக்கமேயென்றாலும் அது நெருக்கமான நட்பாகியிருந்தது.
அந்தத் தீசன் அண்ணாவின் ஒன்றுவிட்ட தம்பியும் இயக்க உறுப்பினர்தான்; பலவருடங்களாக இருப்பவர். பெரிய பொறுப்பாளர் என்றெல்லாம் சொல்வார்கள். அவரும் இந்தச் சண்டைக்குச் சென்றுள்ளதாகச் சொன்னார்கள். அந்த அண்ணாவுக்கு நேரடி உரித்தென்றால் ஒரு தங்கை மட்டும் தான். தாய் தந்தை இறந்துவிட்டார்கள். அந்த அக்காவை எங்களுக்கும் மிக நன்றாகவே தெரியும். அடிக்கடித் தீசன் அண்ணா வீட்டிலும் வந்து நிற்பார். தன் ஒரே சொந்தம் எந்த உயிர்ப்பங்கமும் இன்றி வந்துவிடவேண்டும் என்ற கலக்கத்தில் அந்த அக்கா இருப்பதாக தீசன் அண்ணாவின் மனைவி சொல்லிக் கலங்கினார். யார் தேறுதல் சொல்லவியலும்?
ஒத்த மனநிலையில் உள்ளோர் கலக்கத்தோடு கதைத்துக் கொண்டோம். ஒருவர் ஒருவருக்கு ஆறுதலும் தான். அம்மாவோ, எதையுமே கருத்தில் எடுக்கவில்லை; அழுதுகொண்டே இருந்தார்.
அதோடு, 'இந்தச் சண்டையில பெடியளுக்குத் தோல்வியாமே; சரியான இழப்புமாம்.' அப்படி இப்படி அடுத்தடுத்த நாளே பரவலாகக் கதைக்கவும் தொடங்கியிருந்தார்கள். நாங்கள் அந்த ரீதியில் எல்லாம் நினைத்தும் பார்க்கவில்லை. எங்கள் வீட்டுயிர் அங்கு சென்றிருக்கென்று உறுதியாகத் தெரிகையில் சும்மாவேனும் எதிர்மறையாக எண்ணிவிட முடியுமா என்ன?
"இந்தச் சனத்துக்கு ஒண்டு எண்டா ஒன்பது எண்டு கதைக்கிறதே வேலையாப் போச்சு!" என்று, கடக்க நினைத்துக் கழிந்தன மணித்துளிகள்.
அடுத்தநாள் ஞாயிறு...பொழுது மிகப் பாரமாக விடிந்தது போலிருந்தது. தொடர்ந்து மூன்று நாட்கள் சுமந்த வேதனையும் மனக்குழப்பமும் காரணமாகவும் இருக்கலாமே!
பல்லுத் துலக்குவது கூடக் கடினமாக இருந்தது; அவ்வளவு சோர்வு; காய்ச்சல் காரர் போலுணர்ந்தேன் நான்.
அதை அம்மாவிடமோ அக்காக்களிடமோ சொல்லவும் முடியவில்லை. அவர்களும் அப்படித்தான் இருந்தார்கள்.
வழமையாகக் காலையில் அடுப்பை மூட்டித் தேனீர் போடுவது அம்மாதான். கேற்றிலை அடுப்புச் சாம்பல் தொட்ட தேங்காய்த் தும்பால் நன்றாக துலக்கிக் கழுவித் தண்ணீர் கொதிக்க வைப்பார். சிலவேளைகளில் நல்ல விறகும் இராது. ஈர விறகு, சுள்ளி, தேங்காய் மட்டை என்று வைத்து, அப்பாவுக்கு நாலு ஏச்சுப் பேச்சும் கொடுத்துப் புறுபுறுத்தபடி அம்மா தேனீர் ஊற்றுவதைப் பார்க்கையில் பலவேளைகளில் சிரிப்பாக இருக்கும். அப்பாவே அதைக் கண்டுகொள்ளவதில்லை.
இந்த மூன்று நாட்களாக அம்மா தான் குசினிப் பக்கம் போவதே இல்லையே!
முகம் கழுவிய கையோடு குசினியை எட்டிப் பார்த்தேன். அடுப்பே பற்ற வைக்கவில்லை. வெளியே வந்தால் அப்பாவின் சைக்கிளைக் காணவில்லை. வெளியில் சென்றுவிட்டார் போலும். அம்மாவும் அக்காக்களும் முற்றத்தில் நின்றபடி பக்கத்து வீட்டு ஆட்களோடு இந்தச் சண்டையைப் பற்றித்தான் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
பெரியக்காவின் காதில் குட்டி ரேடியோ! உள்ளங்கையினுள் அடக்கிவிடலாம்; யாரோ வவுனியாவுக்குப் போய்வருப்பவர்களிடம் சொல்லி வைத்து 500 ரூபாய்க்கு வாங்கியது. அதுவும் பெரியக்காவிற்குப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பெர்சரி காசில் அப்பா வாங்கிக் கொடுத்திருந்தார். இரு சின்ன பேட்டரிகளில் இயங்கும். எனக்குப் பாட்டுக்கு கேட்க ஆசையாக இருக்கும் . அக்கா தரமாட்டாள். பாட்டரி கிடைப்பது அரிதென்பதால் முக்கியச் செய்திகளுக்கு மட்டுமே அதைப் போடுவாள்.
நான் திரும்பவும் சமையல் அறைக்குள் வந்தேன். நாக்கெல்லாம் என்னவோ போலிருந்தது. தேநீர் குடித்தால் நன்றாக இருக்கும் போலிருக்கவே கேற்றிலை எடுத்தேன்.
'மினுக்க வேணுமோ! பச்... நல்லாத்தான் கிடக்கு!' சும்மா அலம்பிப் போட்டுத் தண்ணியை நிறைத்துக்கொண்டு வந்து அடுப்பில் வைத்தேன்.
அடுப்பில் ஒருநாளுமின்றிச் சாம்பல் நிறைந்து கிடந்தது. நின்றுகொண்டே சமைக்கும் வகையிலான அந்தச் சீமெந்து மேடையில் இரு அடுப்புகள் இருந்தன. எப்போதுமே நல்ல சுத்தமாக இருக்கும். மேலே ஒரு மூலையில் சின்ன உப்புப் பானை; பக்கத்தில் ஒரு போத்தலில் உப்புப் போட்டு தண்ணி விட்டிருக்கும்; மறுபக்கம் திருகாணியில் புட்டுப் பானை,இவ்வளவும் தான்.
இன்றோ, இரண்டு அடுப்பிலிருந்தும் வழிக்கப்பட்ட சாம்பல் முன்னால் ஒதுக்கிக் கிடந்தது. மற்றைய அடுப்பில் ஒரு மண்சட்டி; அதனுள் அகப்பை; திறந்து பார்த்தால் பருப்புக்கறி; மிளகாய்த்தூள் போட்டு வச்ச பருப்புக்கு கறி அப்படியே இருந்தது. சற்றுத் தள்ளி சோற்றுப்பானை ; கறுப்பரிசிச் சோறு தண்ணியும் ஊற்றாததில் பிசுபிசுத்த மணம் வந்தது.
நேற்றுக் காலையிலேயே சின்னக்கா சமைத்திருந்தாள். யாரும் சாப்பிடவில்லை. கண்கள் நிறைந்தன. ஒரு பருக்கையையும் வீச மாட்டார் அம்மா. இன்று?