காகித கப்பல்கள்
சித்ராவின் வாழ்கை தலைகீழாக மாறிவிட்டது. மூன்று வருஷ மண வாழ்க்கையில் அவளுக்கு கிடைத்த பரிசு உதாசீனம் தான். மகன் பாபுவுக்கா அவள் தன்மானத்தை விட்டு தன் வீட்டுக்கே வேலைக்காரியாக வருகிறாள். அதுக்கும் ஒரு பெரிய முட்ட்ருமுல்லி வந்துவிடுமோ? படித்துப் பாருங்கள். சித்ராவோடு பயணியுங்கள் தோழிகளே.
சித்ராவுக்கு நடக்கப் பிடிக்கும். அதுவும் காலை நேர நடை திவ்யம். மனசுக்கு இதமான புதிய காற்று. வழியில் அவள் தாண்டிப் போகும் பிள்ளையார் கோவிலில் ஈரக் கூந்தல் மாமிகள் கையில் புஷ்பக் கூடையுடன் வருவது பார்க்க ரம்மியமாக இருக்கும்.
“சித்ரா...எப்படி இருக்கே?” ஆச்சி தேவயானி கேட்டதும் திடுக்கிட்டு திரும்பினாள் சித்ரா. தெரிந்தவர்கள் பார்த்துவிட்டால் தர்ம சங்கடம் தான். துருவித் துருவி கேள்விகள் கேட்பார்களே.
“நல்லாயிருக்கேன் ஆச்சி. நீங்க எப்படி இருக்கீங்க? உங்க பிள்ளைக்கு வரன் பார்த்திட்டிருந்தீங்களே அமைந்ததா?”
“அது கிடக்கட்டும். உன் புருஷன் உன்னை சேர்த்துக்கிட்டானா?”
ஆச்சி ஆவலோடு கேட்டாள். அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. வெறுமனே புன்னகைத்தாள்.
“அது சரி உன் மாமியாக்காரி விடுவாளா என்ன? ரிமோட் கண்ட்ரோல் மாதிரி அங்கே சுவிட்ச் போட்டா இங்கே ஆடறான். நீ விட்டுக் கொடுக்காதே. வீணை வச்சிட்டிருக்கும் சரஸ்வதி அவனுக்கு வேண்டாமாம். காசு கொட்டும் லக்ஷ்மி தான் வேண்டுமாம். பயித்தியக்காரன்...” விட்டால் ஆச்சி புதிய புதிய உவமைகள் சொல்லி சித்ராவுக்கு இரங்கல் பா பாடிவிடுவாள் போலிருக்கிறது.
“ஆச்சி...உங்க கண் சிவந்திருக்கே என்னாச்சு?” என்று கேட்டு சிந்தனையை திசை திருப்பினாள். ஆச்சிக்கு வாயெல்லாம் பல்.
“அது தான் சித்ராங்கறது. எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் என்னைப் பத்தி கேக்றே பாரு....உன் குணத்துக்கு இப்படி வரவேண்டாம். விதி யாரை விட்டது? என்னமோ தெரியலைடியம்மா கண்ணிலே உறுத்தலா இருக்கு. லச்சுமியோட தாய் பாலை எடுத்து கண்ணில் விட்டேன். இப்ப கொஞ்சம் தேவலை.” லச்சுமி அவரது மகள். பிரசவித்து மூன்று மாதம் ஆகிறது. பெண் குழந்தை அப்படியே ஆச்சியை உரித்து வைத்திருக்கிறது. ஆச்சிக்கு ஏக பெருமை.
“ரொம்ப சந்தோஷம் ஆச்சி. நான் இப்படியே வாக்கிங் போயிட்டு வரேன்.”
கழண்டு கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.
கோவிலருகே பூக்காரி மல்லிகப் பூ விற்றுக் கொண்டிருந்தாள். நேற்றைய பூ தான். வாங்கி தலையில் வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள். மெல்லிய காற்றுக்கும் பூவாசனைக்கும் மனம் எங்கோ சென்றது. ராகவனுக்கு மல்லிகப் பூ என்றால் உயிர். திருமணம் ஆன புதிதில் பந்து பந்தாக மல்லிகைப் பூ வாங்கி வருவான்.
“என்ன இது இவ்வளவு பூ?. தலையில் வச்சால் வைக்கப் போர் மாதிரி
இருக்கும். இரண்டு முழம் போதாதா? அதுவே ஜாஸ்தி.”
அவன் வைத்து விடுவான். வைக்கத் தெரியாமல் வைக்க பூ விழுந்துவிடும். விடமாட்டான். எப்படியோ வைத்துவிட்டு ரசித்துப் பார்ப்பான். அது எல்லாம் ஒரு நிலாக் காலம் ஆகிவிட்டது. இப்பொழுது அவள் அவனுக்கு சமைத்துப் போடும் வேலைக்காரி. தினமும் காலை வந்து அவன் அலுவலகம் போவதற்குள் சமைத்து கொடுத்து, வீட்டை சுத்தம் செய்து, அவன் பான்ட் ஷர்ட்டை வாஷிங் மிஷினில் துவைத்து காயப் போட்டு, காய்ந்ததை இஸ்திரி போட்டு என்று வேலைக்காரிக்குரிய வேலையினை பார்ப்பாள். அவன் அதிகாரம் தூள் பறக்கும். சலிப்பு வேறே!
“என்ன தினம் இட்லியும் சட்னியும் தானா? இதுக்கு பேசாமே ஹோட்டலில் வாங்கி சப்பிட்டுக்கலாமே. நீ வந்து தொலைக்கணுமா இதுக்கு? ” வீட்டை விட்டு துரத்திவிட்டு ஏகப்பட்ட கண்டிஷன் போட்டு அவளை படாத பாடு படுத்தும் அவனை தூக்கிப் போட்டு விட முடியும்...ஆனால் பாபு? அவனுக்காக பொறுத்துக் கொண்டிருக்கிறாள். பாபுவுக்கு நாலு வயது தான். இவர்களின் சண்டையை அவனால் எப்படி புரிந்து கொள்ள முடியும்? ஆனால் ஏதோ சரியில்லை என்று மட்டும் அவன் சின்ன மனசுக்குப் புரிந்தது.
“அம்மா...என்னை விட்டுப் போகாதேமா. பயமா இருக்கு. அப்பா சிடு சிடுன்னு இருக்கார். எரிஞ்சி எரிஞ்சி விழறார்.”
சித்ரா கண்ணில் நீர் சேகரமாகும். ஆனாலும் அதை காட்டிக் கொள்ளாமல் மகனை அனைத்துக் கொள்வாள்.
“எல்லாம் சரியாயிடும் செல்லம். கொஞ்சம் பொறுத்துக்கோ.”
மார்க்கெட் வரை நடந்து வந்தாகி விட்டது. காய்கறி வாங்கிப் போய் விடலாம். இந்த வாரம் காய்கறிக்கு என்று அவளிடம் இரண்டு நூறு ரூபாக்களை கொடுத்திருந்தான். காசை எண்ணி எண்ணி பரர்த்து தான் வாங்குவாள். அவனுக்கு பீன்ஸ், காலிப்ளவர், காரட் தான் பிடிக்கும். விலை கூடுதலான காய்கறி வாங்க வேண்டும், ஆனால் செலவு ஆகக் கூடாது.
“ஒரு பொம்பளைக்கு காய் வாங்க தெரிய வேண்டாம்? அவ்வளவு ரூபாயையும் செலவு பண்ணிட்டியே? குடித்தனம் பண்ணத் தெரியலை. படித்திருந்தும் ஒரு வேலை பார்க்கத் துப்பில்லை. இந்த லட்சணத்தில் உன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நான் உன்னை ஒதுக்கி வைத்தது தான் பெரிய குத்தம்னு சண்டைக்கு வராங்க.”
அவள் இந்த வசவு கேட்டு சிரித்தாள். அவன் கடுமையாகப் பார்த்தான்.
“எதுக்கு சிரிக்குறே? சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்...நான் சிரித்துக் கொண்டே அழுறேன்னு தத்துவ ஞானி ஆயிட்டியா?”
“நான் எதுக்கு அழணும்? நீங்க தான் அழணும். போனாப் போகுதுன்னு உங்களுக்கு சேவகம் செய்றேன். ஒரு அனாதைக்கு மனசு இரங்க மாட்டோமா? அப்படித்தான் நினச்சிட்டு செய்றேன். நான் ஒரு நாள் வராவிட்டால் வயத்த காயப் போட்டுக்கிட்டு ஒடுவீங்க. இதிலே திமிர் வேற! எங்கப்பா அம்மாவா உங்க கிட்டே சண்டைக்கு வந்தாங்க? நீங்க தான் அவங்க கிட்டே சண்டை போட்டு உங்க பொண்ணை வீட்டை விட்டு போகச் சொல்லுங்க எனக்குப் பிடிக்கலை, அப்படின்னு தையத் தக்கான்னு ஆடினீங்க. அவங்க என்ன சொல்வாங்க? ஆமாடாப்பா நீ சொல்றது நூத்துக்கு நூறு உண்மை அவளை துரத்தி விடுன்னு சொல்வாங்களா? தாலி கட்டி மூணு வருஷம் குடித்தனம் பண்ணிட்டு இப்ப போய் பிடிக்கலன்னா என்ன அர்த்தம்னு கேக்கமாட்டங்களா?”
“உனக்கு வாய் ரொம்ப அதிகமாகிடுச்சு. எல்லாம் நான் கொடுக்கிற இடம். நீ என்ன எனக்கு சமைச்சு போடவா வரே? உன் மகனைப் பார்க்க வரே. பெரிய தியாகி மாதிரி பேசறதிலே ஒன்னும் குறைச்சல் இல்லை.”
“நான் தியாகியா இல்லையான்னு இப்ப பட்டிமன்றம் நடத்த வேண்டாம்
என் மகனை என்கிட்டே விட்டிடுங்க நான் போயிடறேன். நீங்க யாரை வேணா கல்யாணம் கட்டிக்கிட்டு புள்ளையை பெத்துக்கோங்க இல்லை பிள்ளையை பெத்துக்கிட்டு கல்யாணம் கட்டிக்கோங்க. எனக்கென்ன?”
இப்படித்தான் அவர்கள் உரையாடல் இப்பொழுதெல்லாம் நிகழ்கிறது.
பிஞ்சு கத்தரிக்காயை பொறுக்கி எடுத்துக் கொண்டு அந்தப் பெண்ணிடம் பேரம் பேசி அறை கிலோ வாங்கினாள் சித்ரா. பிஞ்சு புடலங்கை பிரெஷ் ஆக இருந்தது. அவனுக்கு புடலங்காய் கறி என்றால் ரொம்பப் பிடிக்கும். இப்படி பார்த்து பார்த்து காய்கறிகள் வாங்கிக் கொண்டு சித்ரா கட்டைப் பையை சுமந்து கொண்டு நடந்தாள். அட...தேங்காய் வாங்க மறந்துவிட்டதே! தேங்காய் என்னமோ தங்கம் விலை விக்கிறது. ஒரு சின்ன தேங்காய் முப்பத்து ரூபாய். கையில் நாப்பது ரூபாய் மீதம் இருந்தது. ஒரு தேங்காயும் எலுமிச்சம் பழமும் வாங்கியதும் பணமெல்லாம் காலி. கத்தப் போகிறான். இங்கே வந்து காய் வாங்கினால் தானே தெரியும் அவள் எவ்வளவு பிரம்ம பிரயத்தனப் பட்டு காய் வாங்குகிறாள் என்று!. அவனுக்கு ஒன்றும் தெரியாது. குடித்தனம் நடத்திய மூன்று வருடமும் கால் மேல் கால் போட்டுக் கொண்டு பேப்பர் வாசிப்பது ஒன்று தான் அவனுக்கு தெரிந்த ஒரே வேலை. வலது கையில் சுடச் சுட காப்பி. இடது கையில் பேப்பர்.
“ஏன் அக்கா இப்படி நாப்பது வருஷம் முந்திய மனைவி மாதிரி நடந்துக்கிறே? தினம் தினம் போய் சமைச்சு போடறியே உனக்கு வெக்கமா இல்லை? மானம் இல்லை? ரோஷம் இல்லை? நானா இருந்தா அவனை தலை மூழ்கிட்டு வந்திருப்பேன்.” தங்கை சுஜிதா காட்டமாகக் கேட்பாள். இளம் வயது துள்ளுகிறாள். அவளுக்கு என்ன தெரியும் இவள் கவலை? பாபு இல்லாவிட்டால் அவள் எப்பொழுதோ சரிதான் போடா என்று சொல்லியிருப்பாள். பொதி சுமக்கும் கழுதை மாதிரி திட்டுக்களை சுமக்க யாரால் முடியும்?
“தூக்கிப் போட ரொம்ப நேரம் ஆகாது சுஜி. பாபு பத்தி யோசித்துப் பார்க்க வேண்டாமா? நான் அங்கு போறதே குழந்தைக்காகத் தான். சரி போறது போறோம் அவருக்கு உணவு தயாரித்து...”
“உன்னையெல்லாம் திருத்த முடியாது அக்கா. அவராம் அவர்...அவனுக்கு அந்த தகுதி ஏது?” அவளும் பெண்ணியம் பேசியவள் தான். நடை முறைக்கு சாத்தியமா? அவசரப்பட வேண்டாமே. ஒரு வருஷம் டைம் இருக்கு. அதுக்குள் இவர் புத்தி மாறாதா என்ற நப்பாசை தான் அவளை வழி நடத்திச் செல்கிறது.
“என்னை நீ திருத்த வேண்டாம் சுஜி. உனக்கு ஒரே ஒரு அட்வைஸ் பண்றேன். நல்ல படித்து கை நிறைய சம்பாதிக்கிற வழியைப் பார். நானும் நாலு காசு சம்பாதிச்சிருந்தா நானே வக்கீலைப் பார்த்து விவாகரத்து வாங்கிட்டு என் மகனோடு போயிருப்பேன்.”
“படிச்சாலும் படிக்காட்டியும் துணிச்சல் வேணும் அக்கா. உனக்கு அடிமையா இருக்கறதிலே அவமானம் தெரியலை.”
“ஒ கே. இது என் வாழ்க்கை. எனக்கு எது சரின்னு படுதோ அதைத் தான் நான் செய்ய முடியும். இப்ப நான் பொருளாதார ரீதியா பலகீனமா இருக்கறதாலே தானே ஏறி மிதிக்கிறாங்க. கோர்டுக்குப் போனால் நீ மகனை வளர்க்க முடியாது. நல்ல கல்வி கொடுக்க முடியாது. அதனாலே பிள்ளை அப்பாகிட்டே தான் இருக்கணும்னு சொல்லிட்டா? அப்புறம் அவர் என் மகனை பார்க்கவிடாம பண்ணிடுவார். அதான் பொறுமையா இருக்கேன். மேலும் உனக்கு கூடிய சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பாங்க. அக்கா டிவோர்சின்னு தெரிஞ்சா உன்னை பெண் கேட்டு வர தயங்குவாங்க. நாலையும் யோசிக்கணும் சுஜி.”
காய்கறி பையுடன் வீட்டுக்கு வந்தாள் சித்ரா. நன்றாக விடிந்திருந்தது. வீட்டை திறந்து கொண்டு உள்ளே போனாள். பாபு அவள் வருவதை கதவு திறக்கும் சத்தம் கேட்டு புரிந்து கொண்டு “அம்மா...இங்கே சீக்கிரம் வா...” என்றான். அவன் குரலில் பதற்றம் இருந்தது. அழுகையும் கலந்திருந்தது. என்னாச்சு? குழந்தைக்கு ஜுரமா?
“என்னாடா கண்ணா?” பதறிப் போய் அவள் அவன் படுத்திருந்த அறைக்குள் போனாள். அவன் முகம் சிவ்வென்றிருந்தது. படுக்கையில் அவன் காலைக் கடன்களை முடித்திருந்தான். அவன் முகம் வாடி
வெட்கம் வந்து சுண்டி இருந்தது. பயத்துடன் பார்த்தான்..
“ச்சோ...பரவாயில்லை...கண்ணாவுக்கு உடம்பு சரியில்லையா?”
பாபு பேந்த பேந்த விழித்தான். அவள் சகலத்தையும் மாற்றி அவனுக்கு ஹீட்டர் போட்டு வெண்ணியில் குளிக்க பண்ணி உட்கார வைத்தாள்.
“இரு கண்ணா...அம்மா உனக்கு ஹார்லிக்ஸ் கலந்து தரேன்.?” அடுப்படிக்கு ஓடினாள். பத்தே நிமிஷத்தில் சூடான இதமான பானத்துடன் வந்தாள். பாபு ஆவலோடு குடித்தான். அப்புறம் தான் அவனுக்கு தெம்பு வந்தது. “அம்மா..நான் உன் கூடவே வரேன்மா. இங்கே இருக்கப் பிடிக்கலை.” அம்மா மடியில் முகம் புதைத்தான். அவன் கண்ணீரை அவள் பார்த்துவிடக் கூடாது என்று மறைத்தான். விஷயம் இது தான். அவனுக்கு பாத்ரூம் போகணும். இருட்டாக இருந்தது. லைட் போட எழுந்து கொள்ள பயம். அப்பாவை கூப்பிட்டான். “எதுக்குடா கத்தி ஆர்ப்பாட்டம் பண்றே? உன் அம்மாக்காரி வாக்கிங் போயிருக்கா. வந்ததும் அவ கிட்டே உன் பிரலாபத்தை வச்சுக்கோ. என்னை தூங்க விடு.” பாபுவால் எவ்வளவு நேரம் தான் தாக்கு பிடிக்க முடியும்? படுக்கையிலேயே அவன் போனது அவனுக்கே அவமானமாக இருந்தது. மூன்று வயதில் தோன்றாத அவமானம் நாலு வயதில் வந்தது வியப்பில்லை தான். தட்டு தடுமாறி அவன் சித்ராவிடம் விஷயத்தை சொன்னபோது அவள் உள்ளம் கொதித்தது. ஏதேதோ காரணம் சொல்லி அவள் இந்த பந்தத்துக்குள் இருந்து கொண்டிருக்கிறாள். அவனாகப் பார்த்து “சரி உன் பிள்ளையை நீ வைத்துக் கொள்” என்று சொல்வான் என்று எதிர்பார்த்தாள். அது இன்று வரை நடக்கவில்லை. ஒரு வருஷம் ஓடிவிட்டது. இன்று அவனிடம் பேசிவிட வேண்டியது தான். மகனை பார்த்துக் கொள்ள முடியாதவனுக்கு எதுக்கு பிள்ளை? அவன் எழுந்து வருவதற்கு காத்திருந்தாள். அதற்குள் பிள்ளையின் ஆடைகள் உடமைகள் எல்லாவற்றையும் சூட்கேசில் அடுக்கினாள். அவனிடம் நாக்கை பிடுங்கிக் கொள்கிற மாதிரி சொல்லிவிட்டு பிள்ளையை கூட்டிக் கொண்டு கிளம்ப வேண்டியது தான். மணி ஏழைத் தாண்டியது. அவன் இன்னமும் எழுந்து கொள்ள வில்லை. இவ்வளவு நேரமா தூங்கறான்? குட்டிப் போட்ட பூனை மாதிரி அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள். அவளுள் எழுந்த கோபத் தீ அடங்குவதாக இல்லை. சுஜி சொன்னது உண்மை தான். உன்னை திருத்த முடியாது என்றாளே....திருந்திவிட்டேன் சுஜி. எனக்கு புத்தி வந்துவிட்டது. மகன் என்ற பாசமில்லாதவருக்கு பிள்ளை எதுக்கு?
பொங்கி எழுந்துவிட்டாள் சித்ரா. மெல்ல அவன் படுத்திருந்த அறையை
திறந்து பார்த்தாள். ஒன்றும் தெரியவில்லை. ஜன்னல் திரை சீலைகள் இருட்டை ஏற்படுத்தியிருந்தது. லைட்டை போட்டாள். அங்கே அவள் கண்ட காட்சி அவளை உறைய வைத்தது. கட்டிலில் ராகவன் கத்தி குத்துப்பட்டு கிடந்தான். நிறைய ரத்தம் உறைந்து போயிருந்தது. உயிர் இருக்கிறதா என்று தெரியவில்லை. அருகே போவதற்கும் அவளுக்கு பயமாக இருந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர்களிடையே நடந்துகொண்டிருக்கும் சண்டை எல்லோருக்கும் தெரியும். அவளைத் தானே சந்தேகப்படுவார்கள். அப்புறம் அவள் மகனின் கதி? சந்தேகத்தின் பெயரில் இவளை போலிஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிப் போய்விட்டால்? முதலில் ராகவனை காப்பாற்றவேண்டும். ஆம்புலன்சுக்கு போன் செய்தாள்.
மனதை திடப்படுத்திக் கொண்டு அவள் போலீசுக்கும் போன் செய்தாள். அறை மணிக்குள் அந்த வளாகம் பரபரப்படைந்தது. போலிஸ் வண்டி,. தொப்பி போட்ட காக்கி சட்டைகள், தெரு ஜனங்கள் என்று எல்லோரும் குழுமிவிட்டார்கள். அம்புலன்ஸ் வந்தது. ராகவனை ஸ்ட்ரேச்சரில் எடுத்து போட்டுக் கொண்டது. அவளும் கூட போவதாக சொன்னாள். இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தடுத்துவிட்டான்.
“அம்மா...உங்களை விசாரணை பண்ணனும்.” பாபு அம்மாவை ஒட்டி நின்று கொண்டான். அவன் பிஞ்சு உடல் நடுங்கியது. நிறைய கேள்வி கேட்டார்கள். அவள் பதிலில் அவர்களுக்கு திருப்தி இல்லை. என்னவோ மறைக்கிறாள் என்று அவர்கள் நினைப்பதை இவள் ஸூசகமாக புரிந்து கொண்டாள். என்ன இது புது சோதனை என்று அவள் நொந்து கொண்டிருந்த சமயம் அவளின் மாமியார் புயல் போல் உள்ளே வந்தாள்.
“இன்ஸ்பெக்டர் இவளை அரெஸ்ட் பண்ணுங்க. இவள் தான் என் மகனை குத்தியிருக்கணும். ‘ஐயோ...பாதகத்தி என் மகனை கொல்ல பார்த்தியே? அவன் குத்துயிரும் குலையுயிருமாக இருக்கானே. பிழைப்பானோ மாட்டானோ.” அவள் ஒப்பாரி கண்டு சித்ரா பயந்து போனாள். அவள் உடல் வெட வெடவென்று நடுங்கியது.
கப்பல் மிதக்கும்
Last edited by a moderator: