தந்தைக்கொரு பாடல்
தந்தையின் அன்பு என்றும்
அழகான ஓடை போல்
சலசலப்பில்லாமல்
அமைதியாக ஓடும் நீர்ப்பெருக்கு!
தாயன்பு போல்
தடையில்லாமல் கரைபுரண்டு
ஓடும் காட்டாறல்ல!
கீழ் நோக்கி என்றும் பாயும்
சீரான ஒரு நதிப்போக்கு!
வாரியணைத்து உச்சிமுகர்ந்து
கட்டித் தழுவத் தெரிவதில்லை
தந்தை மனதிற்கு என்றுமே!
மனதிற்குள் பூட்டி வைத்து
மருகித் தவிக்கும் பாசம்!
வெளியே காட்டத் தெரியாமல்
உள்ளுக்குள் பூட்டி வைக்கும் அன்பு!
பெருமிதம் மட்டும் கண்களில்
அவ்வப்போது எட்டிப் பார்க்கும்!
கண்டிப்புப் போர்வைக்குள்
கனிவை ஒளித்து வைத்துத்
தாம் பெற்ற பிள்ளைகள்
வாழ்வில் முன்னேறி சிறக்க
என்றும் வழி வகுப்பார்!
வெற்றிப் படியில் ஏற்றிவிட
ஓயாத உழைப்பு குறைவதில்லை!
பண்பிலும் படிப்பிலும் என்றும்
தன்னை விட சிறக்க வைப்பார்!
தான் ஈட்டும் பணமெல்லாம்
தனக்கென்று செலவழியாமல்
தாரத்துக்கும் தம் குழந்தைகட்கும்
கேட்டதெல்லாம் முடிந்த வரை
தர எண்ணும் கற்பக விருட்சம்!
அவர் முகத்தில் மகிழ்ச்சி காண
இவர் உழைக்கத் தயங்கியதில்லை!
வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி
சேமிக்கத் தவறுவதில்லை!
கடுஞ்சொற்களில் ஒளிந்திருக்கும்
அவையத்து முந்தியிருக்க
வைக்கும் அளவிலா அவா!
சிற்பியும் சிற்பத்தை உளிகொண்டு
செதுக்குவது போல்!
பாராட்டுக்களை மனதிற்குள்
தாழ் போட்டு அடைத்து
வெறும் தலையாட்டல் மட்டும்
அளவாகவே தரும் மனது!
தனயன் தலையெடுத்துக்
கைநிறையக் காசு கொணர்ந்தாலும்
கைநீட்டி வாங்காமல் ஒதுங்கிடுவார்!
தான் சேமித்த பணம் தனிலே
தம் செலவும் குடும்பச் செலவும்
தயங்காமல் செய்திடுவார்!
தனக்கென வாழாமல் தன் மனைவி
தன் குழந்தையென வாழ்ந்தே
ஒதுங்கி நின்றவர்!
தாரத்தை இழந்து நின்று
தனிமரமாய் வாழ்ந்தாலும்
தன் கடமை தானே செய்து
மருமகளுக்கும் உதவிடுவார்!
வாய்க்கு ருசியான உணவு கூட
வேண்டுமென விழையமாட்டார்!
நாவடக்கிப் புலனடக்கி
மௌனமாய் இருந்திடுவார்!
வேண்டாத தலையீடு இடமாட்டார்!
குழந்தைகளைப் பள்ளிக்கோ
பல்வேறு கலை கற்பதற்கோ
கொண்டு விட்டுக் கூட்டிவரும்
எல்லாப் பணிகளையும்
இன்முகத்துடன் ஆற்றிடுவார்!
நித்தமொரு கதை சொல்லிப்
பொறுமையுடன் துயிலவைக்கும்
தேவதையும் இவரே தான்!
வீட்டின் காவலரும் இவர்தான்!
எத்தனை பணியாற்றினாலும்
மனதென்னவோ மிகவும் மென்மை!
மோப்பக் குழையும் அனிச்சமலர்!
இவர் முதுமையிலே தளரும் போது
கேட்கும் முன்னே பசியாற்றித்
தேவைகளைத் தீர்த்து வைத்து
அன்புமொழி பேசிடுங்கள்
தங்கக் குழந்தைகளே! செல்வங்களே!
தந்தையெனும் தெய்வத்தைப்
புறக்கணித்துத் தனிமையிலே
வாட விட்டு விடாதீர்கள்!
இதுவொரு தாயின் வேண்டுகோள்!
புவனா,
06/09/2020.