கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்றும் என் நெஞ்சில்...முன்னோட்டம்

Jeyakumar S

Member
அத்தியாயம் 18


விடுமுறை தீர்ந்தது. அவர் திருச்சிக்குப் புறப்பட்டார். நானும் அவருடன் மதுரை வரை பயணித்தேன். அவர், எனக்கு மட்டுமே என்று, நிச்சயம் ஆன பின்பு, பயம் என்னை விட்டுப் பறந்து போனது. பத்து நாட்களாக அவர்கள் வீட்டில் தங்கியிருந்த பொழுது, எனக்குக் கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. அனைத்தையும் அருகிருந்த அவரோடு அசைப்போட்டுப் பயணித்தது அருமையான நினைவுகளே.

மதுரை வந்த நான், மறுநாள் என் பெற்றோரைப் பார்த்து, எங்கள் திருமணத்திற்குச் சம்மதம் பெற்றுவர ஊருக்குச் சென்றேன்.

நான் தம்பியிடம், விஜய் வீட்டிற்குச் சென்றதையும், அவர்கள் வீட்டில் நடந்தவைகளையும், ஸ்கூட்டரில் சென்று பல இடங்களை சுற்றி பார்த்ததையும், நிச்சயதார்த்தம் நடந்த விவரத்தையும் கூறி மோதிரத்தை அவனிடம் காட்டிக் கொண்டிருந்தேன். அவனுக்கோ அப்பாவைக் குறித்தப் பயம் அகலவில்லை.

என் வீட்டில் எனக்கு மாப்பிள்ளை தேடும் படலம் தொடங்கியிருந்தது. பி.ஹெச்டி முடித்ததும், திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில், நல்ல வரனாகத் தேடிக் கொண்டிருந்தார்கள், என் பெற்றோர்கள்.

ஒரு நாள், என் பெற்றோர் என்னிடம், எங்கள் ஜாதியைச் சேர்ந்த, ஐபிஎஸ் ஆஃபிசர் வரன் குறித்த விவரங்களைத் தெரிவித்தனர். நல்ல வரன், வசதியான இடம், காவல்துறையில் உயர்ந்த பதவி , திருமணத்திற்குப்பின், அவர் பணிபுரியும் ஊரிலேயே, எனக்கு கல்லூரி உதவி பேராசிரியைப் பதவி பெற்றுத் தருவது, நல்ல குடும்பம், என அவரைக் குறித்த எத்தனையோ நல்ல விஷயங்களைக் கூறி, நல்ல வரன் என்று, எனக்கு எடுத்துச் சொன்ன போதிலும், நான் அந்த வரனுக்குச் சம்மதம் கொடுக்க மறுத்துவிட்டேன்.

எனக்கு யாரையாவது பிடித்திருக்கிறதா? நான் யாரையாவது காதலிக்கிறேனா போன்ற விவரங்களை, என் பெற்றோர் கேட்டனர். காதலை எதிர்ப்பவர் என் அப்பா என்பதைத் தெரிந்திருந்தும், எனக்குக் கிடைத்த நல்லதொரு வாய்ப்பினை நான் தவற விடவில்லை.

நான் விஜயைக் காதலிக்கும் விஷயத்தையும், கல்யாணம் செய்து கொள்ளுவதென்றால், அவரைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்து கொள்ளமாட்டேன், என்றும் திட்டவட்டமாய் கூறினேன்.

நான் சொன்னவைகளைக் கேட்டதும் அம்மா, “அடி சண்டாளி! இதுக்காடி உன்னைக் கஷ்டப்பட்டுப் படிக்க வச்சோம்”, என்று திட்டியதோடு என்னை அடிக்கவும் ஆரம்பித்து விட்டார். தம்பிதான் இடையில் புகுந்து தடுத்தான். அம்மாவிடமும் அப்பாவிடமும், வயதுக்கு வந்த என்னைக் கை நீட்டி அடிப்பதுச் சரியில்லை, என்று கூறி எனக்கு ஆதரவாகப் பேசினான். அதற்கு அவனுக்கும் திட்டு விழுந்தது. நான் நிதானத்தை இழந்து விடவில்லை.

அம்மா, அப்பா சம்மதம் இல்லாமல் அவரும் என்னைத் திருமணம் செய்து கொள்ளமாட்டார் என்றதும், ”நீ காதலிக்கிற பயலக் கட்டிக்க, நாங்க ஒருநாளும் சம்மதிக்க மாட்டோம். எங்க உயிரே போனாலும், இதுக்கு நாங்க சம்மதிப்போம்னு மட்டும் நினைக்காத... அதையும் மீறி, அவன் கூட ஓடிப் போனன்னா, அடுத்த நிமிஷமே உன்னைப் பெத்தப் பாவத்துக்காகக் தூக்கில தொங்கிருவோம்... அத மட்டும் ஞாபகம் வைச்சிக்கோ”, என்று கோபத்திலே கூச்சலிட்டார், அம்மா.

அவரைத் திருமணம் செய்ய அம்மாவும் அப்பாவும் சம்மதிக்கவில்லையென்றால், நானும் திருமணம் செய்யாமல், கன்னியாகவே வாழ்ந்துவிடுவேன் என்றும் திட்டவட்டமாய் கூறினேன்.

என்னுடைய வார்த்தைகளைக் கேட்டதும் அப்பாவுக்குக் கோபம் தலைக்கு ஏறியது.

அம்மாவிடம், “உன் மக முதல்ல... கன்னி கழியாமத்தான் இருக்காளான்னு கேளும்மா”, என்ற எரிச்சலுடன் கூறிய அப்பாவின் வார்த்தைகள், என் நெஞ்சை ஈட்டிக் கொண்டு குத்தியது போன்றிருந்தது. உயிரோடு என்னை நெருப்பில் தூக்கி வீசியதைப்போன்று உணர்ந்தேன். என் கற்பைச் சந்தேகப் பட்டதும், நான் பொறுமையை இழந்தேன்.

நானும் ஆத்திரத்தில், “நான் இன்னும் கன்னி கழியாமத்தான் இருக்கேன்மா... அப்பாக்கிட்ட சொல்லி வை... இதுநாள் வரை அவரு, என்னைத் தீண்டுனது கூடக் கிடையாது. யாருடைய கட்டுப்பாடும் இல்லாத இடத்துல, என்னை எவ்வளவு கண்ணியமா பாத்துக்கிட்டவரு அவரும்மா... ஒரு சினிமாவுக்குக் கூட என்னைக் கூப்பிட்டுட்டுப் போனது கிடையாது... தெரியுமா?... வேற ஒருத்தன் கிட்ட மட்டும் நான் மாட்டியிருந்தா... இந்நேரம், நீங்க சொன்ன, கற்ப இழந்து கெட்டழிஞ்சு போயிருப்பேன். அவரு ஒரு உண்மையான கிறிஸ்டியன், அதனால தப்புனேன்”, என்று அவரைப் பற்றிய நல்ல பண்புகளை எடுத்துக் கூறினேன்.

“ஓ! அவன் கிறிஸ்டியனா? நான் செத்தாலும், ஒரு கிறிஸ்டியனுக்கு உன்னைக் கட்டிக் கொடுக்கச் சம்மதிக்க மாட்டேன். எனக்கு என் ஜாதி, ஜனம், மதம் இதுதான் முக்கியம். எங்க விருப்பம் இல்லாம, அந்த வேற ஜாதிப்பயலைக் கட்டுணனா, அடுத்த நிமிஷமே தூக்குப் போட்டுச் செத்துருவன்”, என்று என்னை எச்சரித்தார், என் அப்பா.

“எப்பா! நானும் உங்க மக தான். எனக்கும் வீராப்பு உண்டு. நீங்க அவரைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிக்கலன்னா, அந்த சாமி மேலச் சத்தியமா... சாமி மேல எதுக்கு, உங்க மேலச் சத்தியமா சொல்றேன், நான் கன்னியாவே காலத்தக் கழிச்சிருவேனே தவிர, அவருக்கூட ஒருநாளும் ஓடிப்போக மாட்டேன். அதை அவரும் ஏத்துக்க மாட்டாரு”, என்று வீர வசனங்களைப் பேசி வைத்தேன்.

“உன் அப்பன் நான் இப்ப சொல்றேன்... கேட்டுக்கோ... அந்த சாமிச் சத்தியமா... உயிரே போனாலும், அந்த வேற ஜாதிப் பயலுக்கு, உன்னைக் கட்டிக்குடுக்க மாட்டேன். எனக்கு, உன்னவிட என் ஜாதி ஜனம்தான் ஒசத்தி... ஒரு கிறிஸ்தவ பயலப் பாத்துட்டு வந்துருக்கா…”, என்று எரிச்சலில் கொக்கரித்தார், அப்பா.

“அப்பா!... உங்க சம்மதம் இல்லாம, அவரைக் கல்யாணம் பண்ணவும் மாட்டேன்... அவருக்கூட ஓடிப்போய்... வாழவும் மாட்டேன்... கல்யாணம் ஆகலையேன்னு, ஏக்கத்துல... நான் சாகவும் மாட்டேன். உயிரோட இருந்து, உங்க மக கற்பு உள்ளவ... மானமுள்ளவன்னு, ஊரெல்லாம் பேசும்படியா வாழ்ந்து காட்டுறேன்“, என்று சவால் விட்டுப் பேசினேன்.

“நீ எப்படினாலும் வாழ்ந்துட்டுப் போ. எங்கன்னாலும் வாழ்ந்துக்கோ. எனக்கு மானம் மரியாத தான் முக்கியம். பொட்டப்புள்ளய வளத்து, வேறஜாதிப் பயலுக்குக் கட்டிக்குடுத்துட்டேன்ன, கெட்டப் பேரு மட்டும் எனக்கு வந்துரக்கூடாது... அதுக்கப் பிறகு நான் ஊர் தலைவனா இருந்து எதுக்கு?... நான் உயிர் வாழ்ந்து தான் எதுக்கு... “, என்று வீர முழக்கமிட்டார், அப்பா.

“நல்லது கெட்டதுக்கு, உங்க ஜாதிஜனம் தான் வந்து நிக்க போகுது... யாராவது சுகக்கேடு வந்து ஆஸ்பத்திரியில படுத்தா, உங்க மானமும் மரியாதையும் தான் காப்பாத்தப் போகுது... குடிக்கக் கஞ்சி தண்ணியல்லன்னா, உங்க மதம் தான் வந்து பசிக்குச் சோறு போடும்... நீங்களும் உங்க ஜாதியும்... ஜனமும்... மானமும்... மரியாதையும்… உங்களுக்குன்னு ஒரு கஷ்டம் வந்தா... நானும் தம்பியும்தான் வந்து நிக்கணும்...”, என்று உண்மை நிலையை எடுத்துரைத்தேன்.

“நீ என்ன வேணும்னாலும் சொல்லு, நான் உயிரோட இருக்கதுவர, இந்த கல்யாணம் நடக்காது... நடக்கவும் விடமாட்டன்.... எத்தனை காதலைக் கலைச்சிருப்பேன்... எத்தனை கல்யாணத்த நிறுத்தியிருப்பேன்... இதுல என் வீட்டுக் கல்யாணத்த நிறுத்தலன்னா, மீசை வச்சிட்டுத் திரியிறதுல என்ன ப்ரயோஜனம்”, என்று வீராப்புப் பேசினார்.

“நீங்க உயிரோட இருக்கணும்... மீசை வச்சிட்டு வீராப்பா திரியணும்... நான் கல்யாணம் பண்ணாம... கன்னி கழியாம வாழுறத, நெனச்சி நெனச்சி நித்தமும் அழணும்”, என்று சாபம் நிறைந்த வார்த்தைகள் என் வாயிலிருந்து விழுந்தன.

வீட்டில் சமாதனம் இல்லாமல் நாட்களைக் கழிக்க, என்னால் முடியவில்லை. பல்கலைக்கழகத்தில் பணியுள்ளது என்று கூறி, மதுரை திரும்பி விட்டேன்.

என்னுடைய முனைவர் பட்டமளிப்பு விழா மதுரையில் நடந்தது. அப்பா அம்மா தம்பியும் வந்திருந்தனர். விஜயும் வந்திருந்தார். என் பெற்றோரை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அப்பா அவரை முகம் கொடுத்துப் பார்க்கவில்லை. என்றாலும், விஜய் அவர்களை விழாவின் போது நன்றாகக் கவனித்துக் கொண்டார்.

தம்பிக்கு அவரைப் பார்த்ததும் பிடித்துப் போயிற்று. ‘மாமா... மாமா’, என்று அழைத்துக் கொண்டு, அவர் பின்னாடியே சுற்றியதைப் பார்த்து எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு அவர் ஒரு கேமரா வாங்கி வந்து பரிசளித்தார். முதல் முறையாக அவருடன் ஊருக்குச் சென்றிருந்த பொழுது, இயற்கை காட்சிகளைப் படம் பிடித்துப் பாதுகாக்க ஒரு கேமரா வேண்டும் என்று, அன்று கேட்டதை நினைவில் கொண்டு, அதை வாங்கி வந்திருந்தார், என்பதைப் புரிந்து கொண்டேன். அந்த கேமராவில் நான் எடுத்த முதல் புகைப்படம் அவருடையதுதான். அப்பா அம்மா தம்பி மற்றும் அன்றைய பட்டமளிப்பு நிகழ்வுகள் அனைத்தையும் படம் பிடித்தார்.

தம்பி, என்னையும் அவரையும் சேர்ந்தாற் போல் நிற்க வைத்துப் பல கோணங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டான். ஒருவேளை, அவர் என்னை ஏமாற்றி விட்டு, வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய சம்மதித்து விட்டால், அந்த திருமணத்தை நிறுத்துவதற்கு, இந்த புகைப்படங்கள் உதவியாக இருக்குமே, என்ற நோக்கத்தில்தான் அவன் செயல்பட்டான், என்பது எங்களுக்குப் புரிந்திருந்தது.

விழா முடிந்து, பிரியும் முன்பு என் முன்னிலையில், தன் தாய் மரணத்தருவாயில் இருப்பதாகவும், மரணத்திற்கு முன்பு, என் பெற்றோர் சம்மதித்தால், என்னை மணம் செய்து கொள்வதாக, என் அப்பாவிடமும், அம்மாவிடமும், மனம் உருக வேண்டினார். என் தந்தை அவர் கோரிக்கையை அப்பொழுதே மறுத்துவிட்டார். என் தந்தையின் மறுப்புரையைக் கேட்டப் பின்னும், மனந்தளராமல், என் பெற்றோரின் அனுமதி கிடைக்கும் வரை ஆண்டுகள் பல ஆனாலும், எனக்காகக் காலமெல்லாம் காத்திருப்பதாக, உறுதிப்பட கூறினார்.

ஆராய்ச்சி மாணவியாய் இருக்கையிலே, அவ்வப்போது வகுப்புகளை எடுத்துக் கொண்டிருந்த எனக்கு, பல்கலைக் கழகத்தின், எங்கள் துறையில் உதவி பேராசிரியர் பணி கிடைத்தது. மாதந்தோறும் சம்பளம் வாங்கியதும் பெற்றோருக்கு ஒரு பங்கை கொடுக்க வேண்டும், என்பது அவரின் அன்பான வேண்டுகோள். அவரது வேண்டுகோளுக்கு இணங்க, ஒவ்வொரு மாதமும் நான் ஊருக்குச் சென்று, அம்மா அப்பா, தம்பியைப் பார்த்துவிட்டு, பணம் கொடுத்து வருவதை வாடிக்கையாக்கி கொண்டேன்.
 

Jeyakumar S

Member
அத்தியாயம் 19



விஜயின் அம்மா, மருந்துகளின் உதவியினால் வாழ்ந்து கொண்டிருந்தார். மாதங்கள் உருண்டோடின.

ஒருநாள், அம்மாவின் உடல்நிலை மோசமான செய்தி அறிந்து, டாக்ஸி எடுத்து வந்தவர், மதுரையில் என்னையும் ஏற்றிக் கொண்டார். ஊர் சென்றடைந்தோம். வழிநெடுகிலும், அம்மா அவர் மீதுக் கொண்டுள்ள அன்பை நினைத்தும், அம்மாவைக் குறித்தத் தன் நினைவுகளையும், கண்ணீரினூடே சொல்லி கொண்டே வந்தார்.

அம்மாவின் மரணத்துக்குமுன், தங்களுக்குத் திருமணம் ஆகாதது, அம்மாவுக்கு மிகப்பெரிய மனக்குறை. அம்மாவுக்கு எங்கள் குழந்தைகளைக் கொஞ்சவேண்டும் என்ற தீராத ஏக்கம். அப்பாவையும் தம்பி தங்கையையும் விஜய் நன்றாகக் கவனித்து கொள்வார் என்ற அதீத நம்பிக்கை, அம்மாவுக்கு உண்டு. ஆனால் அவரைக் கவனித்து கொள்ள யாருமில்லை, என்ற மன வருத்தத்தினால்தான் அவருக்கு ஒரு திருமணத்தை நடத்தி முடித்துவிட வேண்டும், என்ற அவரின் தணியாத ஆசை. அது என் பெற்றோரின் பிடிவாதத்தால், பொய்த்துப் போனது.

நாங்கள் வீட்டிற்கு வந்தடைந்த செய்திக் கேட்டு, அம்மாவின் முகத்தில் தெளிவு ஏற்பட்டது. படுக்கையில் கிடந்த அம்மாவின் அருகில் சென்று, அம்மாவைக் கட்டிப்பிடித்து, அவர் அழுததைப் பார்த்த அனைவருக்கும், கண்களில் நீர் திரண்டது. அம்மாவின் அன்பை நினைத்து நானும் அழுது கொண்டு நின்றேன். அவரை ஆறுதல் படுத்திய அம்மா, என்னைக் கண்களால் தேடினார். அவர் எண்ணத்தை அறிந்து நானும் அவர்கள் அருகில் சென்றேன்.

எங்கள் வரவுக்காகக் காத்திருந்ததைப் போல், எங்களைப் பார்த்ததும் அவர் கையை, என் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டு, “அவனைப் பாத்துக்கோம்மா... அவன் ஒரு பச்சப்புள்ள... அவனைக் கை விட்டுறாத... தம்பி தங்கச்சிய அவன் பாத்துக்குவான்... உங்க மாமாவ தனியா விட்டுட்டுப் போறேன், அவரையும் நீ தாம்மா பாத்துக்கணும்... மூத்தவன் வளந்துருக்கான் விவரம் கெடையாதும்மா... அவன் குடும்பத்தை மட்டுமில்ல மொத்த குடும்பத்தையும் நீ தாம்மா... பாத்துக்குவையாம்மா...”, என்று தன் கடைசி ஆசையை என்னிடம் கோரினார்.

“நீங்க கவல படாதங்க அத்தை... நானும் அவரும் சேர்ந்து குடும்பத்தப் பாத்துக்குவோம் அத்தை... எங்களுக்கு கல்யாணம் ஆகலன்னா கூட...”, என்று வார்த்தைகள் வெளி வராமல் விம்மினேன்.

“அழாதம்மா... உங்கப்பா உங்க கல்யாணத்துக்குச் சம்மதிக்கலைன்னு எனக்கு தெரியும்... ஆனா ஒருநாள் அவரு சம்மதிப்பாரும்மா... அது வரை காத்திரு... உன்னுடைய நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதா தான்மா நடக்கும்“ , என்று ஆசிக்கூறினார்.

அழுது கொண்டிருந்த மகனை அழைத்து, “அவ என்னைக்கும் என் மருமகதான்ப்பா... அவளைக் கை விட்டுறாத... அவ குடும்பத்தையும் நம்ம குடும்பத்தப் போலப் பார்த்துக்கணும்... அவங்க உன் கல்யாணத்துக்குச் சம்மதிக்கலனா கூட, அவங்க குடும்பத்த நீ பொறுப்பு எடுத்துக்கணும்... உனக்கு எல்லாமே தெரியும். இருந்தாலும், அம்மா சொன்னா நீ தட்டமாட்டலாப்பா… அதான்...”, என்று அவரை முத்தமிட்டார்.

பின்னர் எல்லோரையும் தனித்தனியே அழைத்து முத்தம் கொடுத்து, ஆசிர்வதித்து, அப்பாவை எங்கள் கையில் தந்துவிட்டுப் புன்னகையுடன் கண்ணை மூடினார். அத்தையின் ஆசையை நிறைவேற்ற முடியலையே, என்ற மன உறுத்தல் என் மனதுக்குள்ளே புதைந்துக் கொண்டது.

இறுதி சடங்குகள் அனைத்தும் முடிந்தன. தங்கைக்கு மேலும் ஓராண்டு படிக்க வேண்டி இருப்பதனால், அண்ணனுடன் தங்கியிருப்பதென்றும், அதுவரை அப்பாவும் அண்ணனுடன் தங்குவது என்றும், தம்பியை திருச்சிக்கு அவர் அழைத்து சென்று வேலைக்கான தேர்வுகளுக்குப் பயிற்சிக் கொடுக்க ஏற்பாடு செய்வதாகவும் முடிவு எடுக்கப்பட்டது.

தம்பியை அழைத்துச் சென்ற விஜய், அவனை நல்லதொரு பயிற்சி வகுப்பில் சேர்த்துப் பயற்சி அளித்தார். தமிழ்நாடு தேர்வாணயம் நடத்திய முதல் குரூப் தேர்வில் வெற்றிப் பெற்று தமிழக அரசின் உயர் பதவியில் பணி புரிந்து வருகிறான்.

ஆண்டுகள் ஓடின. ஆனால், என் அப்பாவிடமிருந்து அனுகூலமான வார்த்தைகள் எதுவுமில்லை. அவர் தங்கை படித்து முடித்ததும் வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த நல்ல வரன் வந்தது. அவளுக்கும் பிடித்திருந்ததால், திருமணம் நடந்தது. நாங்கள் முன்னின்று நடத்தினோம். தற்பொழுது அவள் வெளிநாட்டில்.

தம்பிக்கும் வசதியான இடத்திலிருந்து நல்ல வது கிடைத்தது. அவனுக்கும் திருமணத்தை நடத்தி விட்டோம்.

எங்களுடைய திருமணத்திற்கு என் பெற்றோர் சம்மதம் அளிக்காததால், எனக்கு திருமணம் வேண்டாமென்று பிடிவாதமாக இருந்து விட்டேன்.

திருமணம் எனக்கு வேண்டாம் என்று நான் கூறிவிட்டதனால்,

என் தம்பிக்குப் பெண் பார்த்துத் திருமணத்திற்கு, நாள் குறித்தனர்.

பெண் வீட்டார் என்னைக் குறித்து கேட்டப் பொழுது, என் பெற்றோருக்கு எந்த சங்கேதமும் வராதபடி, பெண் வீட்டாரிடத்தில், எனக்குத் திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் இல்லை என்று நான் கூறி விட்டேன்.

ஆனால், என் பெற்றோரிடம், தம்பி திருமணத்திற்கு என்னுடன் அவரும் வருவார், அவருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுப்பதாயிருந்தால் மட்டுமே, திருமணத்திற்கு வருவேன், அவரும் அவருடைய கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், அவருக்கு ஏதாவது மரியாதை குறைவு ஏற்பட்டால், அந்த நிமிஷமே, அவரையும் அழைத்துக்கொண்டு வெளியேறிவிடுவேன் என்பதையும், உறுதிப்படக் கூறிவிட்டேன். அதற்கு அப்பா சம்மதிக்கவில்லை. தம்பியும் அம்மாவும் ஒரு வழியாக அப்பாவிடம் பேசி அனுமதிப் பெற்றனர்.

தம்பியின் திருமணத்தில், ‘அக்காவின் கணவருக்குரிய’ அனைத்து மரியாதையையும் தம்பி, அவருக்குக் கொடுத்தான். திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் யாரையும் அவருக்குத் தெரியாது. ஆனால் அவரை யாரென்று தெரியப்படுத்தியதில், எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

விஜயின் அம்மா அவரிடம் கடைசியாகக் கேட்டுக் கொண்டதைப் போன்று, எங்கள் வீட்டுத் திருமணத்தை, அவரே முன்னின்று நடத்தினார். நானும் அவரும் பொறுப்பெடுத்துத் திருமணத்தை நடத்தியதைக் கவனித்த அனைவருக்கும், எனக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டதோ என்று சந்தேகம் ஏற்பட்டது, என்பதுதான் உண்மை.

மாப்பிள்ளைத் தோழனாக அக்காவின் கணவர் நிற்க வேண்டும் அல்லது அம்மா உடன் பிறந்த சகோதரன் மகன், அதாவது மாமா மகன் அல்லது அப்பாவின் உடன் பிறந்த தங்கை மகன், அத்தை மகன் தான் நிற்க வேண்டும். தம்பி, என்னவரை அழைத்து மாப்பிள்ளை தோழனாக நிறுத்தினான். அதில் சிறு சிறு சலசலப்பு நிகழ்ந்தது. அவன் எதையும் கண்டு கொள்ளவில்லை. அவர்களின் சந்தேகத்தைப் போக்க, அப்பா பட்டக் கஷ்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, சிரிப்புத்தான் வந்தது. தம்பியின் திருமண வைபவம் நினைத்ததை விட சிறப்புடன் நடந்தேறியது. எல்லா வைபவங்களிலும், தம்பி அவரை முன்னிலை படுத்தியது மட்டுமல்ல, எல்லோர் முன்னிலையிலும் ‘மாமா’ என்றே அழைத்தான். அவருக்கு உரிய மரியாதையைத் தம்பி கொடுத்ததினால், திருமண வைபவம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது, என்பதுதான் உண்மை.
 

Jeyakumar S

Member
அத்தியாயம் 20



நான் திருமணம் ஆகாமல் கன்னியாகக் காலம் கழிப்பதைக் காணப் பொறுக்காத என் தந்தையார், மனதுக்குள் கண்ணீர் வடித்தார். கன்னி மகள், நான் சொன்னதைப் போன்று, என்னைப் பார்த்துப் பார்த்துக் கண்ணீர் விடுவதை, நானும் அறிவேன். அப்பா மன நோயால் அவதிப்பட்டு, உடல் உருகி மெலிந்துவிட்டார்.

ஒருநாள் வீட்டிலிருந்து, தொலைப்பேசி அழைப்பு வந்தது. என்னையும், அவரையும், என் அப்பா பார்க்க விரும்புகிறார் என்று. நானும், அவரை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றேன். அப்பாவின் நிலை கண்டு மனம் பொறுக்கவில்லை. ஓடிச்சென்று கட்டிலில், மெலிந்து கிடந்த அப்பாவைக் கட்டிப்பிடித்து அழுதேன். அவரும் அழுதார்.

“தம்பி வரலையாம்மா...”, என்று அன்போடுக் கேட்டார், அப்பா.

“வந்திருக்காருப்பா... அவரையும் அழைச்சிட்டு வந்திருக்கிறேன்”, என்று கூறி, அவரை அழைத்து அப்பாவிடம் கொண்டு வந்தேன். அவரைக் கண்டதும், அப்பா எழுந்து உட்கார முயற்சித்தார். அப்பாவை எழுந்து கொள்ள வேண்டாம், அப்படியே படுத்துக் கொள்ளும்படி விஜய் வேண்டி கொள்ள, அப்பாவும் அப்படியே படுத்துக் கொண்டார்.அப்பாவின் நிலை கண்டு அவர் கண்களிலும் கண்ணீர் வழிந்தோடியது.

“தம்பி! உங்களுக்கும் என் மகளுக்கும், நான் பெரிய துரோகம் பண்ணிட்டேன்”, என்று கண்கள் கலங்கினார், அப்பா.

“துரோகம் என்ற பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க அய்யா... ஒரு நல்ல அப்பா, என்ன செய்வாரோ அதைத்தானே நீங்களும் செய்தீங்க... நம்ம என்ன திட்டம் போட்டாலும், கடவுள் சித்தம் மட்டுமே நடக்கும் அய்யா... இதில துரோகம் எங்கே இருந்து வந்தது.”, என்று விஜய் பதில் உரைத்தார்.

“தம்பி என் மக, தெரிஞ்சி சொன்னாளோ, தெரியாமச் சொன்னாளோ... தெரியலை... ‘நான் கன்னி கழியாம சுத்துவதப் பார்த்துப் பார்த்துக் கண்ணீர் விட்டு அழுவீங்கன்னு’ சொன்னா... அது உண்ம தம்பி... அவ சொன்னது அப்படியே நடந்திருச்சு”, என்று அப்பா கண்ணீர் விட்டார்.

“அழாதங்க அய்யா... அவ தெரியாமச் சொல்லியிருப்பா... அவளை மன்னிச்சிருங்க...”, என்று ஆறுதல் வார்த்தைகளைக் கூறினார், விஜய்.

“இல்ல தம்பி... உங்களையும், ரொம்ப தப்பா நினைச்சிட்டேன். நாங்க, உங்க கல்யாணத்துக்குச் சம்மதிக்கலைன்னா, நீங்க வேறக் கல்யாணம் பண்ணிக்குவீங்க... அதைச் சொல்லி, மகளுக்கு வேறக் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு, திட்டம் போட்டேன். என் திட்டம் எல்லாம், உங்க உண்மையான காதல்ல தவிடுபொடியாயிடுச்சு... அவளும் என் கிட்ட உங்களைப் பத்திச் சொன்னா... நாங்க சம்மதிக்கலன்னா, நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணாம, அப்படியே வாழ்ந்துட்டுப் போயிருவோம்னு சொன்னா... அதை நான் நம்பலை... என் நம்பிக்கைய பொய்யாக்கிட்டீங்க... தம்பி...

நான் செய்த துரோகத்துக்குப் பிராயசித்தம் செய்யணும்... சொன்னா செய்வீங்களா...”, என்று மன பாரத்தோடு, அவர் கைகளைப் பிடித்துக் கேட்டார், அப்பா.

“சொல்லுங்கய்யா... நீங்க எதைச் சொன்னாலும், உங்க மக கிட்டக் கலந்தாலோசிட்டுச் செய்கிறேன்”, என்று அவர் கூறிய பதிலைக் கேட்டு, எனக்கு முக்கியத்துவம் கொடுக்கிற, விஜய் மீது அன்பு மேலும் கூடியது.

“தம்பி... நான் கண்ணடைக்கதுக்கு முன்னாடி, உங்க கல்யாணத்தப் பார்க்க, எனக்கு ஆசையா இருக்கு... நீங்க என் மகளைக் கட்டிக்க, எனக்கு மனபூர்வ சம்மதம்”, என்று கண் கலங்க அவரிடம் வேண்டினார்.

அப்பாவின் வேண்டுதலைக் கேட்ட நான், “அது என்னப்பா… இவ்வளவு நாளும் இல்லாம... , இப்ப உங்களுக்கு, எங்க மேலப் பாசம் பொங்குது”, என்று அப்பாவை, இடை மறித்தேன்.

“இல்லம்மா... ரொம்ப காலமா, என் மனச உறுத்திக்கிட்டு இருக்கிற ஒரு விஷயம்மா... இது. உன் தம்பி கல்யாணத்திலேயே பார்த்தேம்மா... என்னைய ஒரு வேலயும் செய்யவிடாமா, எல்லாத்தையும் அவரே இழுத்துப் போட்டுச் செய்தாரும்மா... வந்தவங்க எல்லாரும், அவரைப் பத்தித்தான் கேட்டாங்க”, என்று தன் உள்ளத்தைத் திறந்தார், அப்பா.

“என்ன கேட்டாங்கப்பா?”

“உனக்குக் கல்யாணம் ஆயிடிச்சா? உன்னைக் கட்டிக்கிட்ட மாப்பிள்ளையான்னு கேட்டாங்கம்மா”

“நீங்க என்னப்பா சொன்னீங்க?”

“நான் என்ன சொல்லி என்ன பயன். ஒருபயலும் நம்பல... உன்னுடைய கணவன்னுதான் எல்லாரும் நினைச்சாங்க...”

“தம்பி கல்யாணத்துல அவங்க முழு பொறுப்பெடுத்து ஏன் செய்தாங்கன்னு தெரியுமா?”

“தெரியாதும்மா”, என்றார் எதிர்பார்ப்புடன்.

“அவுங்கம்மா, கண்ண மூடுறதுக்கு முன்னாடி, எங்களை வீட்டுக்கு வரசொல்லி, ஆசிர்வதிச்சாங்க. அப்ப, அவருட்ட, ‘மருமக வீட்டுல உன் கல்யாணத்துக்குச் சம்மதிக்கலனா கூட, அவ குடும்பத்தையும், நம்ம குடும்பமா நினைச்சி, அவங்க வீட்டு விஷயத்திலும் இருக்கணும்’ னு சொன்னத தான், அவங்க செய்தாங்க...? அவங்க குடும்பம் என்னைய, அவருடைய மனைவியாகத்தான் பார்க்கிறாங்க. அவங்க அம்மா சொன்னதுக்கும் மேலாக, தம்பி கல்யாணத்திலச் செய்தாரு”, என்றேன் நான் ஆதங்கத்தில்.

“மகராசிம்மா, அவங்க அம்மா...”

“நீங்க சொன்னாலும் சொல்லாட்டாலும் அவங்க மகராசித்தான்... என்னை, என்றைக்குப் பார்த்தாங்களோ, அன்றைக்கே என்ன மருமகளா ஏத்துக்கிட்டாங்க... அவங்க குடும்பமே என்ன இவங்க மனைவியாத்தான் பார்க்குறாங்க..”

“நான் பெரிய தப்பு பண்ணிட்டம்மா... இவங்க, நல்ல மனசைப் புரியாம... ஜாதி, மதம் அது இதுன்னு வரட்டு கௌரம் என் கண்ணை மறைச்சிடுச்சும்மா...”, என்று கண்ணீர் வடித்தார்.

அப்பாவின் கண்களில் சொரிந்த கண்ணீர், அவரது குற்ற உணர்வை வெளிக்காட்டியது.

“இப்ப அழுது எதுக்குப்பா...”

“இப்ப ஒண்ணும் கெட்டுப் போகலம்மா... நான் கண்ண மூடதுக்கு முன்னாடி உங்க கல்யாணத்தை நடத்தி வச்சிருகம்மா... நான் செய்த பாவங்களுக்கெல்லாம் பரிகாரமாக இருக்கட்டும்...“, என்று அப்பா மனம் வருந்தினார்.

“அப்பா... இது உங்களுக்கே நியாயமாயிருக்கா...”

“என்னம்மா சொல்ற...”

“ஞாபகமிருக்காப்பா... என்னுடைய டாக்டரேட் கான்வோக்கேஷன் அன்னைக்கு, அவரு உங்ககிட்ட வந்து, அவங்க அம்மா கண்ண மூடுறதுக்கு முன்னாடி, எங்க கல்யாணத்தைப் பார்க்க ஆசப்படுறாங்க… சம்மதம் மட்டும் குடுத்தா போதும்னு கேட்டாரா?”, என்று பழைய நிகழ்வை ஞாபகப்படுத்தினேன்.

“ஆமாம்மா... ஞாபகம் இருக்கு... அதை நான் மறக்கலம்மா”, என்று மன வேதனையோடு கூறினார், அப்பா.

“அதுக்கு நீங்க முடியாதுன்னு அவருடைய முகத்துக்கு நேரா சொன்னீங்களே! அவருடைய மனசு என்ன பாடுபட்டிருக்கும்... என்னை, சின்சியரா ஆறுவருஷமா லவ் பண்ணிட்டு இருந்த சமயம் அது... அப்பவே அவரு பேங்க் ஆஃபிசர்... நாங்க இரண்டு பேரும் நெனச்சிருந்தா... உங்க சம்மதமில்லாம கல்யாணம் பண்ணியிருக்கலாம்... ஆனா பண்ணல... ஏன் தெரியுமா?”, என்ற என் கேள்விக்கு மௌனம் சாதித்தார், அப்பா. நானே தொடர்ந்தேன்.

“உங்களுக்கு அவங்க குடுத்த மரியாதை அது... அவங்க அம்மா இறப்பதற்கு முன்னாடி, அம்மாவின் ஆசைய நிறைவேற்ற, நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு, நான் எத்தனை தடவ இவங்க கிட்ட சொன்னேன்... தெரியுமா?... உங்களுக்கு எங்க தெரிய போகுது?... அவ்வளவு வற்புறுத்தியும் உங்க சம்மதமில்லாம, கல்யாணம் பண்ணமாட்டேன்னு இவருதான் பிடிவாதமா இருந்துட்டாரு... “

“நான் தப்பு பண்ணிட்டேன்... என்ன மன்னிச்சிரும்மா... அன்றைய சூழ்நிலையில அப்படி நடந்துக்கிட்டேம்மா... தப்புதான்...”, என்று கூறிய அப்பாவின் கண்களில் கண்ணீர் உருண்டோடியது.

அப்பாவின் கண்களிலிருந்து கண்ணீர் வருவதை, இதுவரை நான் கண்டதில்லை. அப்பாவைப் பெற்றப் பாட்டியும், தாத்தாவும் இறந்த பொழுது கூடக் கண்ணீர் விடாதவர், கண்ணீர் சொரிவதைப் பார்த்து, எனக்கும் கண்ணீர் திரண்டது.

“அய்யா... தப்பு, மன்னிப்பு அது இதெல்லாம்... எதுக்கு… எல்லாமே முடிஞ்சு போச்சு... இனி அதை நினச்சி என்ன ப்ரயோஜனம்... நடந்து முடிஞ்சது இனி திரும்ப வரவா போகுது... இனி நடப்பதைப் பற்றிப் பேசுவோம்“, என்று அப்பாவை அவர் சமாதானப்படுத்தினார்.

“தம்பி நான் இப்ப முழு மனசோடச் சம்மதிக்கிறேன்... ஒரு நல்ல நாள்ல, எம் மகள நீங்க கல்யாணம் பண்ணிக்காங்க. அவ கழுத்தில நீங்க தாலிக் கட்டுறதப் பார்த்துட்டு, நான் சந்தோஷமா, கண்ண மூடிருவேன், தம்பி”, என்று அவரை வேண்டினார், அப்பா.

“இல்லப்பா... என்னை நீங்க தப்பா நினைச்சாலும் பரவாயில்லை... நான் ஒண்ணு கேக்கிறேன்... அன்னைக்கு உங்க ஜாதி, ஜனம்தான் முக்கியம்... மானம் மரியாதைதான் பெருசு... வேற ஜாதிப் பயலுக்குக் கட்டிக்குடுக்க மாட்டேன்... கட்டையில உயிரு இருக்கது வர இந்த கல்யாணத்துக்குச் சம்மதிக்க மாட்டேன்னு... நிறைய வீர வசனங்களெல்லாம் பேசினீங்க... இப்ப என்னாச்சு...”, என்று என் மனதில் பதுங்கியிருந்தவைகளை ஒவ்வொன்றாகக் கேட்க ஆரம்பித்தேன்.

இது போன்ற வாய்ப்பு இனி மேல் கிடைக்காதல்லவா. அதனால் எல்லாவற்றையும் கேட்டுவிடுவது என்று தீர்மானித்திருந்தேன்.

“உன் வைராக்கியத்துக்கு முன்னாடி நான் தோத்துட்டேம்மா”, என்று மனம் வருந்த கூறினார், அப்பா

“இல்லப்பா... நான் உங்க சொந்த ரத்தம் ஆனதனால, உங்க கொள்கை, பிடிவாதம், கௌரவம் எல்லாத்தையும் காத்துல பறக்க விட்டுட்டீங்க...”, என்று குத்தலாகக் கூறினேன்.

நான் அப்பாவுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த அவர், “எம்மா!... அப்பா கிட்ட அப்படியெல்லாம் பேசதம்மா… அவரு சொல்றதக் கொஞ்சம் கேளு... பெரியவங்க கிட்ட எதிர்த்துப் பேசுறதுச் சரியில்ல...”, என்று எனக்கு அறிவுரை கூறினார்.

“இல்ல தம்பி... அவளைத் தடுக்காதங்க... அவ பேசட்டும்... இத்தனை வருஷமா அவ மனசுக்குள்ள அடக்கி வைச்சிருக்கிற எல்லாத்தையும் கேட்கட்டும்...”, என்று அப்பா அவரைச் சமாதானப்படுத்தினார்.

“இப்ப உங்க மன சாட்சிக் குத்துது... உங்க ஜாதி வெறியினால, எத்தன அன்பான உள்ளங்களைப் பிரிச்சிருக்கீங்க?... மத வெறியினால, எத்தன ஓல குடிசைங்க எறிஞ்சிருக்கு... உங்க மான மரியாதை, வரட்டுக் கௌரவத்தினால, எத்தன பேரு தற்கொல பண்ணியிருக்காங்க... எத்தன அன்பான உள்ளங்கள் அழிஞ்சு போயிருக்கு... எத்தன பேருக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, மகிழ்ச்சியோடு வாழ வேண்டியவங்க, மாண்டு போயிருக்காங்க... அவங்கல்லாம் அடுத்தவங்க வீட்டுப் புள்ளைங்க தானே... உங்க புள்ள செத்து விடக் கூடாது... உங்க மக மட்டும் காதலிச்சவன கல்யாணம் பண்ணிக்கிட்டுச் சந்தோஷமா வாழணும்... என்ன பெருந்தன்மைப்பா உங்களுக்கு“, என்று சீறினேன்.

“நான் இனி எந்த தப்பும் பண்ண மாட்டேம்மா... , நீ சொன்னதெல்லாம் சரிதான்மா... என் வரட்டுக் கௌரவம்தான்மா எல்லாத்துக்கும் காரணம்... எல்லாத்தையும் மன்னிசிட்டு, தம்பிய கல்யாணம் பண்ணிக்காமா... நீங்க சந்தோஷமா வாழுறதப் பார்த்துட்டு நிம்மதியா கண்ண மூடிருவேன்மா”, என்று தன் மன ஏங்கலை வெளிப்படுத்தினார்.

“இல்லப்பா... எங்க அத்தை என்ன கல்யாண கோலத்துல பார்க்க ஆசப்பட்டாங்க... அவங்க பார்க்காத எங்க கல்யாண கோலத்த… இனி யாரும் பாக்கக்கூடாதுன்னு... அவங்க கண்ண மூடுண அடுத்த நிமிஷமே முடிவெடுத்துட்டேன்பா. இந்த விஷயத்த, இவங்க கிட்ட கூட நான் சொல்லல... இதுதான்பா என்னுடைய முடிவு... காதலிச்சா கல்யாணம் பண்ணிக்கணும்னு இல்லப்பா... கல்யாணத்துல ஆணும் பெண்ணும் சந்தோஷமா இருக்கிறது மட்டுமில்லப்பா! அதையும் தாண்டி எத்தனையோ இருக்குதுப்பா“, என்று விஜயைப் பார்த்துக் கொண்டே கூறினேன். கல்லூரி நாட்களில், அவர், காதலையும் கல்யாணத்தையும், காமத்தையும் குறித்துப் பேசியவைகள், என் மனதுக்குள் மறைந்து கிடந்தது. அதைத்தான் விஜய்க்கும் நினைவு படுத்தினேன். அவர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார்.

“அப்படி சொல்லாதம்மா... என்னுடைய கடைசி ஆசம்மா இது... தயவுசெய்து, என்னுடைய ஆசைய நிறைவேத்திரும்மா”, என்று கண்ணீரோடுக் கெஞ்சினார்.

“அப்பா என் முடிவில எந்த மாற்றமும் இல்லப்பா... அவரையோ அவருடையக் குணத்தையோ அவங்க குடும்பத்தையோ பத்திக் கொஞ்சங்கூடப் பார்க்காம... அவன் கிறிஸ்தவன், வேற ஜாதிக்காரன்ன ஒரே காரணத்துக்காக, எவ்வளவு கீழ்தரமா பேசினீங்க... இவரைப் போல... நீங்க வலை போட்டுத் தேடுனா கூட, நல்ல மாப்பிள்ள கிடைக்காது. அவரை என்னைக்கு விரும்ப ஆரம்பிச்சனோ, அன்றையில இருந்து ரொம்ப மாறிட்டேன். என்ன பதினைஞ்சு வருஷமா காதலிக்கிறாரு... ஆனா ஒரு நாள் கூட என்ன காமத்தோடுத் தொட்டதுக் கிடையாது. நான்கூடத் தவறான ஆசையில அவரைத் தொட்டுருக்கேன். ஆனா ஒருநாள் கூட என்னைத் தப்பாக்கூடப் பார்த்தது இல்லை... அவங்க கிட்டக் கேட்காம..., கலந்தாலோசிக்காம இந்த முடிவ எடுத்ததுத் தப்புதான். என்னை அவரு நல்ல புரிஞ்சு வச்சிருக்காரு. கண்டிப்பா என் விருப்பத்துக்கு மாறாக எதுவும் செய்ய மாட்டாருன்னு எனக்குத் தெரியும்”, என்று கூறிய என் கைகளைப் பிடித்துக் கொண்டு, “அம்மா! அப்படி தவறான முடிவை எடுத்துறாதம்மா! நீ சொன்னதெல்லாம் உண்மைதான்மா. தம்பி நல்லவருதாம்மா... அவரைப் போல ஒருத்தர் எனக்கு மருமகனா கிடைக்க, நான் தவம் செய்யணும்மா... என்னை தண்டிக்கிறேன்னு நினைச்சு... அந்த நல்ல மனச தண்டிச்சிறாதம்மா! நான் என் மனச, மாத்திக்கிட்டதைப் போல தயவுசெய்து, உன் முடிவையும் மாத்திக்கோம்மா... “, என்று கண்களில் கண்ணீர் வழிந்தோட, என் கைகளைப் பிடித்துக் கொண்ட, அப்பாவைப் பார்க்க, என் மனம் வருந்தியது. எங்கே என் முடிவை மாற்றிவிடுவேனோ என்ற பயம் என்னைத் தொற்றிக் கொண்டது. விஜய் என்னைப் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.

“அப்பா! என்னைத் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். எக்காரணத்தைக் கொண்டும் என் முடிவை மாற்றிக் கொள்ள மாட்டேன்பா!... எங்க அத்தைப் பார்க்காத, எங்க திருமணத்தை, வேற யாரும் பார்த்துச் சந்தோஷப்பட வேண்டாம், என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினேன். நாங்க ரெண்டு பேரும் கணவன் மனைவியாத்தான் வாழ்ந்துட்டு இருக்கோம்... இருப்போம்...

உடலாலல்ல!... உள்ளத்தால்.!!..”, என்ற என் முடிவைக் கூறியப் பொழுது, வேதனையில் என் கண்களில், கண்ணீர் நிறைந்து, கன்னங்களில் வழிந்தோடியது.

தன் அம்மாவிடம், அவள் கொண்டுள்ள அன்பைக் கண்ட, விஜயின் கண்களிலும், நீர் நிறைந்து நின்றது. என் முடிவை முழு மனதுடன் ஏற்றுக்கொண்ட, விஜய், என் தோளைப் பற்றி, என் கண்களிலிருந்து வழிந்தோடிய கண்ணீரைத் துடைத்துவிட்டார்.

காமம் இல்லாத காதல்,

ஜாதி மதம் தடுத்தாலும்

காலம் கடந்தும் வாழும்...


காதல் வாழ்க!






- ஜெயக்குமார் சுந்தரம்

 
Top