Jeyakumar S
Member
அத்தியாயம் 8
கடிதங்களில் எங்கள் காதல் வளர்ந்து கொண்டிருந்தது. மாதம் ஒன்று உருண்டோடி விட்டது. எங்கள் நினைவுகளில் ஃபேர்வல் பார்ட்டி அன்று நடைபெற்ற, நிகழ்வுகள் நீங்கா இடம் பிடித்து விட்டது.
அவருடைய ஒரு கடிதம் நல்லதொரு செய்தியைச் சுமந்து வந்தது. அவருக்கு வங்கியில் பணி கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சித் தரும் செய்தி அது. எனக்குள் ஆனந்தம் தலை விரித்து ஆடியது. அவருக்கு வேலைக் கிடைத்துவிட்டால், ‘எங்கள் ஊரிலுள்ள எங்கள் குல தெய்வ கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்வேன்’, என்று வேண்டுதல் செய்திருந்தேன். அதன்படி குளித்துப் பயபக்தியுடன், தம்பியை அழைத்துக் கொண்டு, குல கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து திரும்பினேன்.
முதுகலைப்படிப்பை முடித்துவிட்டு, தேர்வு முடிவுக்காகக் காத்திருந்த நாட்களில், தம்பியிடம் மட்டும் விஜயைப் பற்றிக் கோடு ஒன்றைப் போட்டு வைத்திருந்தேன். அவனும் பள்ளி இறுதி தேர்வு முடிவிற்காகக் காத்திருந்த வேளை. அவனுக்கு என் மேல் அன்பு அதிகம். சிறியவன் என்றாலும், எனக்காக எதையும் செய்வான்.
எனக்கும் தம்பிக்கும் ஐந்து ஆண்டுகள் இடைவெளி. அவன் பிறந்த நாளிலிருந்து என் கைககளில் தவழ்ந்தவன். அவனுடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும், நான் கூடவே இருந்தவள். அழுகின்ற பொழுது, அள்ளி எடுத்து, விளையாட்டுக் காட்டுவதும், நடக்க ஆரம்பித்த போதுக் கரம் பிடித்து நடத்தியதும், குளிப்பிப்பது, பள்ளிக்கு அழைத்துச் செல்வது, பாடம் சொல்லிக் கொடுத்தது எல்லாம் நான்தானே. அவன் குறும்பு செய்துவிட்டால், அப்பா அம்மாவிடமிருந்து கிடைக்கும் அடிகளிலிருந்து, அவனைப் பாதுகாப்பதும், பள்ளியில் அவன் நடத்தும் குறும்புகளை, வீட்டிற்கு மறைப்பதும், நான்தானே. அம்மா அவனைப் பெற்றாள் என்றால், அவனை வளர்த்தது நான்தான். சிறுவனாய் இருக்கையில், என் பாவாடையைப் பிடித்துக் கொண்டே நடப்பான். கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்புப் படிக்க மதுரைக்குச் சென்ற அன்று, ‘போக வேண்டாம்’ என்று அவன் அழுது கதறியது, இன்றும் என் நினைவில் நிற்கிறது.
வீட்டிற்கு மூத்தவள் பெண் மகள் என்றால், இளையவர்களுக்கு அவள் அம்மாதானே!
விஜயின் புகைப்படத்தைத் தம்பியிடம் காட்டினேன். அவனுக்கும் விஜயைப் பிடித்துவிட்டது. ஆனால் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவன் என்பதால், ஊர் தலைவரான அப்பா, எங்கள் திருமணத்திற்குச் சம்மதிக்க மாட்டாரே, என்ற எண்ணம் தம்பியிடம் இருந்தது.
அம்மா ஒரு வெகுளி, பாவம். அம்மா எங்களுக்கு எல்லாவற்றிலும் துணை நிற்பார். என்றாலும், அப்பா ஒரு முறை முறைத்தால், அத்துடன் அம்மாவின் கொட்டம் அடங்கிவிடும்.
அப்பாவோ, பல கலப்புத் திருமணங்களைக் கலைத்து விட்டவர். காதல் திருமணங்களுக்கு வேட்டு வைத்தவர். அதனால், அடி, வெட்டு , கொலையெல்லாம் எங்கள் ஊர்களில் நடந்திருக்கிறது. பல தற்கொலைகள் இவருடைய நடவடிக்கைகளினால் நடந்தேறியிருக்கிறது. ஜாதிச் சண்டைகள் பலவற்றிற்கும், முன்னிலை வகித்தவர். அவர் எப்படி அக்காவின் திருமணத்திற்கு அனுமதியளிப்பார், என்ற கவலை, தம்பியைத் தொற்றிக் கொண்டது.
“அக்கா... நான் சொலறதைத் தப்பா நினைச்சிக்காத... நீ அப்பாவுக்குத் தெரியாம, மாமாவ கல்யாணம் பண்ணிக்கோ... அப்பாவுக்குத் தெரிஞ்சா கல்யாணமும் நடக்காது... உன்னைக் கொன்னும் போட்டுருவாரு... அவருக்கு ஜாதிவிட்டு வேற ஜாதியில கல்யாணம் பண்ணுறது... மதம் மாறி கல்யாணம் பண்றதெல்லாம் பிடிக்காதுக்கா... அதனால அப்பாவுக்குத் தெரியாம அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, எங்கேயாவது சந்தோஷமா இருக்கா...”, என்று மன வேதனையில் அழத் தொடங்கிவிட்டான்.
“தம்பி! நீ அழாத... விஜய நீ மாமான்னு சொன்னதே எனக்கு எத்தனை சந்தோஷமா இருக்குத் தெரியுமா... அப்பாவைப் பத்தி எனக்கும் தெரியும்பா... அம்மா அப்பா, சம்மதம் இல்லன்னா அவரும் என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டாருப்பா”, என்று அவனை ஆறுதல் படுத்தினேன். நான் கூறியதை அவன் சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லை.
“உன்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டாருன்னா, எதுக்கு உன்னைக் காதலிச்சாரு...”, என்று கோபத்துடன் கேட்டான்.
சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளையல்லவா! அக்கா ஏமாற்றப்பட்டு விடுவாளோ, என்ற ஆதங்கத்தில், வெளிவந்தது அவன் வார்த்தைகள்.
“தம்பி! நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட... அவரு என்னைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன்னு சத்தியம் பண்ணி கொடுத்திருக்காரு... அம்மா அப்பா சம்மதிக்கலன்னா அவரு என்னையும் கல்யாணம் பண்ணமாட்டாரு... வேற யாரையும் கல்யாணம் பண்ணவுமாட்டாரு... கல்யாணம் பண்ணாமப் பிரம்மச்சரியா இருந்துருவாரு...”, என்று அவனுக்கு விளக்கிக் கூறினேன்.
“அப்படிப்பட்ட நல்லவரை, நீ எதுக்கு லவ் பண்ணுன... உனக்குதான் அப்பாவப் பத்தி தெரியுமே!...”, என ஆதங்கப்பட்டான், தம்பி.
அம்மா வரும் காலடி ஓசைக் கேட்டுப் பேச்சை மாற்றினோம்.
தம்பி சொன்னவைகள் அனைத்தும் உண்மையே. இவை அனைத்தும் எனக்கும் தெரியும். என்றாலும், விஜய் மீது காதல் வந்த காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. குற்ற உணர்வு என்னை ஆட்கொண்டது. என்றாலும், காதலிக்க ஆரம்பித்தாகி விட்டது. இதற்கு ஒரு கரை கண்டுவிடுவது என்று முடிவெடுத்திருந்தேன்.
இதைத்தான் காதலுக்கு கண் இல்லை என்பார்களோ!
விஜய், திருச்சியில் வங்கி பணியில் இணைந்து, மாதம் ஒன்றைக் கடந்துவிட்டது. எங்களுடைய தேர்வு முடிவுகளும் வெளிவந்தன. நாங்கள் இருவரும் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருந்தோம். மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள மதுரைக்கு அவர் வந்தார். நானும் அவரைச் சந்திக்க, அந்நாளில் அங்கிருந்தேன். நண்பர்கள் பலர் வந்திருந்தனர். அவர்களையும், பேராசியர்களையும் சந்தித்துவிட்டு, நண்பர்களுடன் அங்கிருந்து, நகரை நோக்கி புறப்பட்டோம். அவர் வங்கி வேலையில் இணைந்து விட்டதை அறிந்து அனைவருக்கும் மகிழ்ச்சி.
அன்று நண்பர்களுடன், ஹோட்டலில் மதிய உணவு உண்டோம். அவருக்கு வங்கி வேலை கிடைத்ததற்கான விருந்து, அது. அனைவரின் வற்புறுத்ததலின் பேரில் சினிமாவிற்குச் சென்றோம். எங்கள் காதலை அறிந்த நண்பர்கள், எனக்கருகில் அவருக்கு இருக்கைக் கொடுத்திருந்தனர்.
அன்று ஒருநாள், என் தோழி கமலாவுடன் சினிமாவிற்குச் சென்றபோழுது, கற்பனையில் நான் கண்ட கனவுகளை, இன்று நிறைவேற்றிக் கொண்டேன். அவரும் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. நண்பர்களும் எங்களைக் கண்டு கொள்ளவில்லை. மாலையில், காஃபிக்குப் பின்னர், நண்பர்கள் அனைவரும் விடைப்பெற்றுச் சென்றனர். நானும் அவரும் காலாற நடத்தோம். எதை எதையோ பேசினோம். இரவு சிற்றுண்டியை முடித்தப் பின்னர் என்னை ஊருக்குப் பேருந்தில் அனுப்பிய பின், அவரும் திருச்சிக்குத் திரும்பினார்.
நானும் பல்கலைக்கழகத்தில் என்னுடைய துறையில் எம்.ஃபில் பட்டப்படிப்பில், இணைந்து படிப்பைத் தொடர்ந்தேன். விஜய் தனக்கு நேரம் கிடைக்கும் பொழுது, மாதத்தில் ஒருமுறையாவது மதுரை வந்து, என்னைப் பார்த்து அளவளாவிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மதுரைக்கும் திருச்சிக்கும் மூன்று மணி நேர பயணம். காலையில் புறப்பட்டு வந்தால் மாலையில் திரும்பி விடுவார்.
இதற்கிடையில், என்னைப் பெண் கேட்டுப் பல வரன்கள் வீட்டை அணுகினர். நான் என்னுடைய முனைவர் பட்டப்படிப்பை முடித்தப் பின்னரே திருமணம் செய்து கொள்வேன், என்று பிடிவாதமாக இருந்ததனால், என் திருமணப்பேச்சுத் தள்ளி போய் கொண்டிருந்தது.