கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்றும் என் நெஞ்சில்...முன்னோட்டம்

Jeyakumar S

Member
அத்தியாயம் 3



பல்கலைக்கழக வளாகம், பல நூறு ஏக்கர் நிலத்தில் அமைந்திருந்தது. ஒவ்வொரு துறைக்கும், ஒவ்வொரு கட்டடம் என்ற வகையில் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தன. மதுரை புறநகர் பகுதியில் அமைந்திருந்தது, பல்கலைக்கழக வளாகம். முதுகலைப் பட்டப்படிப்பும், முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சிக் கூடங்களும், நூலக வசதிகளும் அங்கு இடம் பெற்றிருந்ததன.

அத்துடன் பேராசிரியர்களுக்கான குடியிருப்பு வசதிகளும் இடம் பெற்றிருந்தன. அதற்கு அடுத்ததாக அமைந்திருந்தது, பல்கலைக்கழக மாணவியர் விடுதி. பல்கலைக்கழகத்தின் மறுமுனையில் ஆண்கள் விடுதி. விடுதிகளுக்குப் பொறுப்பாளர்களாகப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், யாரும் விடுதிகளுக்கு வருவதில்லை. ஏனென்றால், அனைவரும் முதுகலை மற்றும் முனைவர் பட்டத்திற்காகப் படிப்பவர்கள். அனைவரும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வர், என்ற நல்ல எண்ணத்தில்தான்.

பெற்றோரின் கட்டுப்பாடும், பேராசிரியரின் கட்டுப்பாடும் இல்லாத மாணவ மாணவிகளில் சிலர், காதல் வயப்பட்டுக் கட்டுப்பாடின்றி நடந்து கொள்வதுமுண்டு.

ஒவ்வொரு கட்டிடங்களையும் இணைக்க, தார் சாலைகள் அமைக்கப்பட்டிருந்தது. நியான் விளக்குக் கம்பங்களும், குழல் விளக்குக் கம்பங்களும் சாலையின் இருபக்கமும் அமைந்திருந்தன. இரவில் பல்கலைக்கழக வளாகம், விளக்கு வெளிச்சத்தில், கண்களுக்கு அழகாகக் காட்சியளிக்கும்.

மரங்கள் செழித்து வளர்ந்து நின்றன. செடிகளும் கொடிகளும் நடப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவைகளைப் பராமரிக்கத் தோட்டக்காரர்களும் உண்டு.

பல்கலைக்கழக மாணவர்கள், நூலகத்தை நல்ல முறையில் பயன்படுத்துவதுண்டு. மற்ற கல்லூரிகளிலிருந்தும் மாணவ மாணவிகள், நூலகத்திற்கு வருவதுண்டு.

ஒருநாள், நூலகத்தில் விஜயைச் சந்தித்தோம். பல விஷயங்களைப் பேசிக் கொண்டே, மாணவியர் விடுதியை நோக்கி நடந்தோம். சாலையின் இருபக்கங்களிலும், செழித்து வளர்ந்திருந்த மரங்களின் அடியில், காதல் ஜோடிகள் அமர்ந்து, காதல் லீலைகளை நடத்திக் கொண்டிருந்தனர்.

காதலர்கள் சிலர், விளக்குக் கம்பங்களின் அடியில் அமர்ந்து, பேசிக் கொண்டிருந்தனர். சிலர் மரங்களின் அடியில், ஒருவர் மடியில் ஒருவர் தலைசாய்த்துக் காதலைப் பரிமாறிக் கொண்டிருந்தனர். சிலரோ இருள் நிறைந்த இடங்களில் அமர்ந்து, காமலீலைகளை நடத்திக் கொண்டிருந்தனர்.

காதலுக்குக் கண் இல்லை என்பார்கள். அதன் பொருளோ, காதல் ஜாதி, மதம், மொழி, ஏற்றத் தாழ்வு, பணக்காரன் ஏழை எதையும் பார்ப்பதில்லை என்பதுவே.

ஆனால் இவர்களோ தம்மைச் சுற்றி இருபவர்களெல்லாம், குருடர்கள் என்று நினைத்துக் கொண்டு, மற்றவர்கள் நம்மைப் பார்ப்பார்களே, என்ற எந்தவித வெட்கமும், கூச்சமும் இன்றி, அவர்கள் நடத்திக் கொண்டிருந்த லீலைகள், அருவருப்பை ஏற்படுத்தியது.

இரவு நேரத்தில், மாணவியர் விடுதிப் பக்கம் சென்றிராத அவனுக்கு, அந்த காட்சிகள் ஆச்சரியத்தை அளித்ததில் ஆச்சரியமில்லை. அவைகளைக் காணச் சகிக்காத விஜய், “இதோ இங்க காதலிச்சிட்டு இருக்காங்களே... இவங்களைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?”, என்று ஆங்காங்கே அமர்ந்திருந்த காதல் ஜோடிகளைச் சுட்டிக்காட்டி, எங்களிடம் கேட்டான்.

நாங்கள் பதில் எதுவும் கூறாமல், ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டோம். இது நாங்கள் தினமும் பார்க்கின்ற கூத்துகள்தானே! எங்கள் மௌனத்தைக் கண்ட விஜய், தொடர்ந்தான்.

“இதுதான் காதல்னு நினைச்சிக் கிட்டுக் கண்டதையும் பண்ணிக்கிட்டு இருக்காங்க... இதுவா காதல்... இது காதல் இல்ல... காமம்”, என்று தன் மன வேதனையை எங்களிடம் முறையிட்டான், விஜய்.

அவனுடைய மனதின் எண்ணங்களை வார்த்தைகளில் கேட்ட தோழி, “அதெப்படி சொல்லுவீங்க... இவங்க பண்றது காமம்னு... சினிமாவில காதலை, இப்படித்தானே காட்டுறாங்க... அதத்தான் இவங்களும் செய்றாங்க”, என்று காதல் ஜோடிகளுக்கு வக்காலத்து வாங்கினாள், கமலா.

காதல் ஜோடிகளுக்குச் சார்பாகப் பேசிய கமலாவின் கூற்றை ஏற்றுக் கொள்ளாத விஜய், “இவங்களைப் பார்த்தா உங்களுக்குப் புரியலையா?... ஒருத்தருக்க மடியில் ஒருத்தர் படுத்துக்கிட்டு... கட்டிப் புடிச்சிக்கிட்டு... முத்தம் கொடுத்துக்கிட்டு... ச்சே.... இதுவா காதல்... போகிற வருகிற அத்தனைப் பேரும், நம்ம பாப்பாங்கன்ன வெட்கம் கூட இல்லாம, தப்புப் பண்ணிட்டு இருக்காங்க... சினிமாதான் வாழ்க்கைன்னு பலரும் நினைச்சிட்டு இருக்காங்க... சினிமாவில, காதல் முடிஞ்சு கல்யாணம் ஆனதும், ‘சுபம்’னு எழுதிக் காட்டிப் படத்த முடிச்சுருவாங்க, சினிமாக்காரங்க. அதுக்குப் பிறகு நடக்கிறக் குடும்ப வாழ்க்கையைப் படத்தில காட்ட மாட்டாங்க...” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினான், விஜய்.

“காதலிக்கிறதுல என்ன தப்பு இருக்கு?... காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்ட, எத்தனையோ பேருச் சந்தோஷமா வாழுறாங்க”, என்று அவனை வெறுப்பேற்றக் கேட்டாள், கமலா.

“தப்பு இல்லையா... நீங்களும் இதுக்கு ஆதரவா?... இதுல எத்தனைப் பேரு கல்யாணம் பண்ணுவாங்கன்னு நினைக்கிறீங்க?... ஒருவரும் கல்யாணம் பண்ணமாட்டாங்க. கல்யாணம் ஆகல்லன்னா... அந்த பெண்ணின் நிலை என்னவாகும்? இவனை நினைச்சுக்கிட்டு இன்னொருத்தன் கூட வாழணும்… அந்த வாழ்க்கை எப்படி இருக்கும்?”, என்று நடைமுறை உண்மையைக் கூறிக் கேட்டான் விஜய்.

“காதலிச்சா கல்யாணம் பண்ணிக்கணும், இல்லன்னா காதலிக்கக் கூடாதா?”, என்று அவன் உள்ளக்கிட்டக்கையை அறிந்து கொள்ள கேட்டு வைத்தேன்.

“கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு தெரிஞ்சிருந்தா... காதலிக்கவே கூடாது, என்பது என்னுடைய கருத்து. கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு தெரிஞ்சிருந்தா எதுக்குக் காதலிக்கணும்?. உடல் இன்பத்துக்காகவா? அதுக்குப் பேருதான் காமம். இதோ இங்க லீலைகளை நடத்திட்டு இருக்காங்களே! அதுதான். எத்தனை பெற்றோர்கள் இவங்க கல்யாணத்துக்குப் பச்சைக் கொடி காட்டுவாங்க?”, என்று காதலைக் குறித்த அவன் கருத்துக்களைக் கூறினான்.

“பெற்றோர் சம்மதம் இல்லண்ணா கல்யாணம் பண்ண கூடாதா?”, என்று கேட்டு வைத்தாள் தோழி.

“கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. என்னைப் பொறுத்தவரை… ஒருவேளை, ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம், அவளுடையப் பெற்றோர் எங்கள் திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லையெனில், நான் வேறு திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்பது உறுதி “, என்றான்.

“உங்களைக் காதலித்தவள் பெற்றோரின் விருப்பத்தையும் கட்டாயத்தையும்... தட்ட முடியாமல் வேறு திருமணம் செய்து கொண்டால்…“, என்று கேட்டாள் கமலா.

“அது அவளுடைய விருப்பம்... அவள் முடிவில் நான் தலையிட மாட்டேன்… அதனாலதான் முதல்ல சொன்னேன், பெற்றோர் சம்மதிக்கலன்னா காதலிக்கக் கூடாது”, என்று அவன் தன் மனதைத் திறந்து கூறினான்.

“ஜாதி மதத்துக்குக் கட்டுப்பட்டப் பெற்றோர் எப்படி காதலுக்குச் சம்மதிப்பாங்க?”, என்று கேட்டு வைத்தேன்.

என்னுடைய பெற்றோர்கள், குறிப்பாக என்னுடைய அப்பா, கலப்பு திருமணத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்பது எனக்குத் தெரியும்.

“குழந்தைகளை நேசிக்கிற எந்த பெற்றோரும் குழந்தைகளின் எதிர்காலம் நல்ல அமையணுங்கிறதுக்காகச் சம்மதிப்பாங்க.” , என்று கூறினான், விஜய்.

“எனக்கு அதில் உடன்பாடு இல்லை“, என்று என் நிலையை உணர்ந்த நான், அவனிடம் வாதம் புரிந்தேன்.

“எந்த பெற்றோரும் காதலை உடனே ஏற்றுக் கொள்ளமாட்டாங்க. ஏன் ... காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டப் பெற்றோர் கூடச் சம்மதிக்க மாட்டாங்க... போரடணும்... காதலுக்கு வெற்றிக் கிடைக்கிற வரைப் போராடணும். வெட்டி கொன்னுருவன்னு சொல்லுவாங்க... நீ அவனைக் கெட்டுனா… நாங்க செத்துருவோம்னு சொல்லுவாங்க... கல்யாணம் நடக்காமலிருக்க எல்லா அடவுகளையும் கடப்புடிப்பாங்க... அசந்த்ர கூடாது... காதலிச்சவனைத் தவிர எவனையும் கட்டமாட்டன்னு பிடித்தப்பிடியில நிலைச்சி நிக்கணும். ‘ஓடிப்போகமாட்டேன்... கல்யாணம் நடந்தா, உங்க சம்மதத்தோடத்தான் நடக்கும்’ போன்ற விவரங்களைப் பெற்றோரிடம்... தெளிவா சொல்லிறணும்....”, என்று அவன் நடைமுறை வாழ்க்கையை எடுத்துச் சொன்னான்.

“சம்மதம் சொல்லிருவாங்கன்னு எனக்குச் தோணல... பெற்றோர், அவங்க விருப்பம் நிறைவேறணும்னுதான் நினைப்பாங்க... ஜாதி மதம் எல்லாம் கல்யாணத்தில முக்கிய பங்கு வகிக்கும்தானே?”, என்றாள் கமலா.

“நீங்க சொல்றது உண்மைதான்... உங்க நிலைபாட்டில் உறுதியா இருந்தா... கண்டிப்பாக ஒரு நாள் கல்யாணம் நடக்கும். ஏன்னா... ‘பெத்தமனம் பித்து’. தன்னுடைய பிள்ளைங்க, வாழா வெட்டியா இருப்பதப் பார்த்துச் சந்தோஷப்பட மாட்டாங்க... கண்டிப்பா ஒருநாள் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லுவாங்க...”என்று விளக்கினான்.

“அவங்க கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்றவரை காத்திருந்தா... நமக்கு வயசாகிடும்... அதுக்குப் பிறகு கல்யாணம் பண்ணி என்ன ப்ரயோஜனம்”, என்றாள் தோழி.

“கல்யாணம்னா... காமம் மட்டும்தான்னு நினைக்காதீங்க... கல்யாணத்தில காமமும் உண்டு. அது ஒரு குறிப்பிட்ட வயசு வரைதான்... ஆனால் அது மட்டும்தான் கல்யாணம்னு நினைக்கிறது தவறு. காமத்தையும் தாண்டி பல விஷயங்கள் கல்யாணத்தில இருக்குது, என்று அவன் கல்யாணத்தையும், காதலையும், காமத்தையும் பற்றிப் பெரிய உரையே நடத்திவிட்டான்.

நாங்கள் எதுவும் பேசாததைக் கவனித்த விஜய், எங்கள் முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு மீண்டும் தொடர்ந்தான்.

“நம்ம ஃப்ரண்ட்ஸிப், டிஃபரண்டா இருக்கணும்.”, என்று பொருள் பொதிய கூறினான்.

அதைக் கேட்ட கமலா, “டிஃபரண்டவா... எப்படி?”, என்று கேட்டாள்.

“எக்காரணத்தைக் கொண்டும் இருட்டுல நின்னு பேசுறது, மரத்துக்கடியில மறைஞ்சிருந்து பேசுறது, இதெல்லாம் கூடாது.”, என்று கூறினான்.

நானும் தோழியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.

“குறிப்பா... என்னால உங்களுக்கு எந்த கெட்டப் பேரும் வந்திடக் கூடாது என்பதில எனக்குப் பிடிவாதம் உண்டு”, என்று தன் மனதை எங்களுக்குத் திறந்து காட்டினான்.

“நீங்க ரொம்ப மெச்சூர்டா பேசுறீங்க.... ஆனா நடைமுறைக்கு ஓத்து வருமா என்பது கேள்வி குறியே”, என்றாள் தோழி.

“நீங்க அகிலன் எழுதிய ‘சித்திரப்பாவை’ என்ற நாவலைப் படிச்சிருக்கீங்களா?”, என்று கேட்டான்.

(எதுக்குடா சித்திரப்பாவை நாவலைப் பத்திக் கேக்கிறான் என்று நானும் தோழியும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்)

“இல்லை”, என்று ஒருசேர கூறினோம்.

“அதுல அழகான ஒரு வாசகம் ஒன்று கதை முழுவதும் வந்து கொண்டிருக்கும் ’அழகாக வாழக் கற்றுக்கொள், முடிந்தால் வாழ்க்கையை அழகுபடுத்து, இல்லை அதை அசிங்கப்படுத்தாமலாவது இரு’ என்று”.

“உண்மையிலே அழகான வாக்கியம்.”, என்றோம்

“நேரம் கெடைச்சா படிச்சிப் பாருங்க. ஞானபீடம் பரிசு பெற்றக் கதை... என்னால வாழ்க்கையை அழகு படுத்த முடியுதோ இல்லையோ... நான் வாழ்க்கையை அசிங்கப்படுத்த விரும்பல... மத்தவங்களும் என்னால அசிங்கப்படக்கூடாது.”, என்று தன் கருத்தைக் கூறினான்.

அவன் நல்ல மனது எங்களுக்கு நிறைய விஷயங்களை வெளிப்படுத்தியது. அவன் மீது, என் அன்பு பெருகியது. அவனையே காதலிக்க வேண்டும். என் பெற்றோர் சம்மதம் கிடைக்கும்வரை காத்திருக்க வேண்டும், என்று என் மனதுக்குள் உறுதி எடுத்துக் கொண்டேன்.

“உங்ககிட்ட இருந்து நிறைய கத்துக்கணும்.”, என்றேன்

எங்கள் மனதிலிருந்து, மரியாதை மிக்க வார்த்தைகள் வெளிப்பட்டன.

ஹாஸ்டல் நெருங்கியது. அவன் விடைப்பெற்றுக் கொண்டான். ஹாஸ்டலில், எங்கள் பேச்சு

அனைத்தும் அவனைச் சுற்றியே இருந்தது. அவனதுப் பேச்சுகள் ஒவ்வொன்றையும் விமர்சனம் செய்தோம். அவன் மீது எங்களுக்கு மரியாதைக் கூடியது. நாட்கள் உருண்டோடியன.
 

Jeyakumar S

Member
அத்தியாயம் 4



ஃபஸ்ட் செமஸ்டர் பரிட்சைக்கான அட்டவணை வெளியானது. பரிட்சை நோய் எங்களையும் தொற்றிக் கொண்டது. அதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டோம். அவன் இளங்கலைப் பட்டப்படிப்பில் மேத்ஸ் பாடம், நானோ எக்கனாமிக்ஸ். நாங்கள் படிப்பதோ, மேதமேட்டிகல் எக்கனாமிக்ஸ். பொருளாதாரத்தைக் கணிதவியலில் படிக்கும் முதுகலைப் பட்டப்படிப்பு. எங்கள் நட்பு வலுப்பெற இதுவும் ஒரு காரணி. கணிதத்தை அவனிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன், என்னிடத்திலிருந்து பொருளாதாரத்தை, அவன் கற்றுக்கொண்டான். இருவரும் கணிதவியல் பொருளாதாரத்தில் மட்டுமல்ல, நட்பிலும் வளர்ந்தோம்.

ஓராண்டு ஓடிவிட்டது. ‘அவன்’ என்பது ‘அவராக’ மாறியது. ‘நீங்கள்’ என்று, எங்களை அழைத்த விளி ‘நீ’ யாக மருவியது. ஓராண்டில் அவரையும் அவர் குடும்பத்தைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டோம். எங்களைப் பற்றிய விவரங்களையும் அவரிடம் கூறிவிட்டோம். அவரிடம் கொண்ட நட்பு, நாளடைவில் காதலாக என் உள்ளில் உருவெடுத்தது. என்னுள் ஏற்பட்ட மாற்றத்தை, என் தோழி நாடிப்பிடித்துப் பார்த்து விட்டாள். நாட்கள் ஓடின.

இரண்டாம் பருவ தேர்வும் (Second Semester Exam) முடிந்தது. மறுநாள் மேட்னிஷோ பார்த்துவிட்டு மாலையில் வீட்டுக்குப் பயணப்படுவது என்று நானும் தோழியும் திட்டம் போட்டிருந்தோம். ஆனால், எங்கள் திட்டத்திற்கு, அவர் திட்டமாய் மறுத்துவிட்டார்.

“என்னடி இவரு, இப்படி பண்ணிப்புட்டாரு... அம்பது நாள் லீவுல அசப்போட்டுட்டு இருக்கலாமேன்னு சினிமாவுக்கு கூப்பிட்டா... “, என்று என்னுடைய ஏமாற்றத்தை தோழியிடம் வெளிப்படுத்தினேன்.

அதைக் கேட்ட தோழி, “இது சரிப்பட்டு வராதுடி… எதுக்கெடுத்தாலும் உங்க பேருக் கெட்டுட கூடாதுன்னுட்டு...”, என்று கமலா தன் வெறுப்பை வெளிப்படுத்தினாள்.

என்னவர் மீது, தோழி வெறுப்பை உமிழ்ந்ததை, என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. “அவரு சொன்னதுல என்னடி தப்பு... நம்ம பேருக் கெட்டுட கூடாதுன்னு, அவரு நெனக்கதுல என்ன தப்பிருக்கு... சினிமாவுக்குக் கூப்பிட்டதும் வந்துட்டு... படம் ஓடும்போதுத் தன்னுடைய லீலைகளைக் காட்டுற, எத்தனை பேரைப் பத்தி எவ்வளவு கேட்டுருப்போம்... அவரு நல்லவருடி...”, என்று என்னவருக்காகப் பரிந்து பேசினேன். தோழியும் அதைப் புரிந்து கொண்டாள்.

நான் அவருக்கு ஆதரவாகப் பேசியதும், என்னைத் திரும்பிப் பார்த்த தோழி, “ஆமா....இந்த மனுஷன்ட எப்படி உன் காதலச் சொல்ல போற...”, என்று ஏளனத்தோடு வினவினாள் கமலா.

“அதுதான்டி எனக்கும் புரியல..”, என்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தினேன்.

சிறிது நேரம் யோசனைச் செய்த தோழி, “ஒண்ணு செய்... லீவுல அவருக்கு ஒரு லெட்டர் எழுதி போட்டுரு. அதில அவரு மனசு ஏத்துக்கிற மாதிரி நல்ல யோசிச்சு எழுது...”, என்று ஆலோசனை ஒன்றை வழங்கினாள். நல்ல ஆலோசனையாகவே எனக்கும் தெரிந்தது.

எனக்குக் காதல் கடிதம் எழுதிப் பழக்கமில்லை. எனவே தோழியின் உதவியை நாடுனேன். “டீ... நீயே எனக்கு ஒரு கடிதம் எழுதிதாடி” , என்று தோழியிடம் சினுங்கினேன்.

(தோழிக்கு காதல் கடிதம் எழுத தெரியுமான்னு கேக்காதீங்க. அவளுக்கும் காதல் கடிதம் எழுத தெரியாது. அவள், பேச்சுப் போட்டிக்கெல்லாம் போகிறவ... அதனால வார்த்தையில் ஜாலம் காட்டுவாள். அதனாலத்தான் அவளிடம் சினுங்கினேன்)

“நானே லெட்டர் எழுதி… நானே அவர லவ் பண்ணட்டுமா...”, என்று என்னைக் கேலிச் செய்தாள், தோழி.

“நீ லெட்டர் எழுது... நானே லவ் பண்ணிக்கிறேன்... சரியா...”, என்று தோழியைக் கட்டிப் பிடித்துக் கொண்டேன்.

“என்னடி ரொமேன்ஸா... போறப் போக்குச் சரியில்லையே...”, என்று கண்ணடித்தாள், தோழி.

“அதெல்லாம் விடு. லெட்டர் எழுதி தா செல்லம்!” , என்று கொஞ்சினேன்.

“ஓவரா பண்ணாத. எனக்கு லவ் லெட்டர் எழுதிப் பழக்கமா, என்ன... சரி ட்ரை பண்ணுவோம்... நான் சொல்றேன் நீ எழுது ....” , என்று தோழி உத்தரவிட்டாள்.

அவள் சொல்ல நான் எழுத ஆரம்பித்தேன். இருவரும் சேர்ந்து காதல் கடிதம் ஒன்றை எழுத ஆரம்பித்தோம். (முன்ன பின்ன அனுபவம் இருந்தா தானே வார்த்தைகள் ஓடிவரும்)

அன்று இரவு முழுவதும் பல தாள்களில் எழுதி எழுதி கிழித்து எறிந்த பின்னர், இறுதியில் இருவருக்கும் பிடித்த வண்ணம் கடிதம் உருவெடுத்தது.

மறுநாள் மதியம் உணவிற்கு பின்னர், அவர் தன்னுடைய ஊருக்குப் புறப்பட்டார். அவருடைய வீட்டிற்குக் கொடுத்தனுப்ப, தின் பண்டங்கள் வாங்கி வைத்திருந்தேன். பேருந்து புறப்படுவதற்கு முன் அந்த பையை அவரிடம் கொடுத்தேன். அதனுள், முந்தைய நாள் எழுதி தயாராக்கிய, கடிதத்தை வைத்திருந்தேன். பேருந்து புறப்பட்டதும் கடிதம் குறித்த விவரத்தைக் கூறினேன். பதிலை எதிர்ப்பார்த்திருப்பதைக் கூறி, உடனே பதில் எழுத கேட்டுக் கொண்டேன்.

நானும் தோழியும் சினிமாவிற்குச் சென்றோம்.

நாங்கள் திரையரங்கிற்குள் நுழையும் போது, விளம்பர அறிவிப்புகள், விளம்பர குறும்படங்கள் அனைத்தும் முடிந்து, திரைப்படம் துவக்க காட்சி ஓடிக் கொண்டிருந்தது. இருவரும் நுழைவு சீட்டில் குறிக்கப்பிடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தோம். வார நாட்கள் ஆனதனால், கூட்டம் அதிகம் இல்லை.

என் மனம் சினிமாவில் ஈடுபடவில்லை, அவரைச் சுற்றியே ஓடியது. தோழித் திரைப்படத்தை, ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். என் மனம் என்னவோ சலனத்திலே ஊசலாடிக் கொண்டிருந்தது.

விஜி கடிதத்தைப் படித்திருப்பாரா? என்னைப்பற்றி என்ன நினைப்பார்? தவறு செய்து விட்டோமோ? எங்கள் காதலை என் பெற்றோர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், என்பது எனக்குத் தெரியுமே. அப்படி இருக்க, எதற்காக அவரைக் காதலிக்க வேண்டும். ஒருவேளை, விஜி கூறியதைப்போல் என் பிடிவாதத்தைக் கண்டு, என் வீட்டார், கலப்புத் திருமணத்திற்குச் சம்மதித்து விட்டால்!... சம்மதிக்கா விட்டால், என்னால் அவரும் திருமணம் ஆகாமல் பிரம்மச்சாரி ஆகிவிடுவாரோ? அவர் வாழ்க்கையும் பாழாகி விடுமோ? அவர் வீட்டில் என்னை ஏற்றுக் கொள்வார்களா? அவரோ கிறிஸ்தவ மதம், நானோ இந்து மதம். அவருடைய பெற்றோர் எங்கள் திருமணத்திற்கு எப்படி சம்மதிப்பார்கள்?

என் மனதுக்குள்ளே மிகப் பெரிய போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அந்த கடிதத்தை அவரிடம் கொடுக்காமல் இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் திடீரென உருவெடுத்தது. தப்புப் பண்ணிவிட்டதைப் போன்றதோர் உணர்வு, என்னைத் தாக்கிக் கொண்டிருந்தது.

திரைப்படத்தை ரசிக்காமல், விஜி பற்றிய சிந்தனையில் சஞ்சலம் கொண்டிருந்த என்னைக் கவனித்தத் தோழி, ” என்னடி ஒரு மாதிரி இருக்க... கண்ணெல்லாம் சிவந்திருக்கு... அழுதையா” என்று கேட்கும் முன்னர், கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. கமலா என்னைத் தன் தோள் மீதுச் சாய்த்துக் கொண்டு, “என்னடி... என்ன ஆச்சு” என்று பதட்டத்துடன் கேட்டாள்.

நான் அவள் தோளில் சாய்ந்த வண்ணம், குலுங்கி குலுங்கி அழுதுவிட்டேன். அவள் என் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, ”அழாத... என்னன்னு விஷயத்தச் சொல்லு...“ என்று ஆசுவாசப் படுத்தினாள்.

“தெளிவா இருக்கிற குளத்துல கல்ல விட்டு, எறிஞ்சிட்டேனோன்னு வருத்தமா இருக்குடி”, என்று என் மனதில் உள்ளதைக் கூறினேன்.

“எனக்கு ஒண்ணும் புரியல... என்ன சொல்ற...”, என்று கேட்டாள் தோழி.

“நல்ல நண்பனா இருந்த விஜிக்கு, லவ் லெட்டர் கொடுத்ததச் சொல்றேன். அவரு என்னைப் பத்தி என்ன நினைப்பாரு. இந்த கல்யாணம் நடக்காதுன்னு தெரிஞ்ச பிறகும், எதுக்காக அவரைச் சங்கடப் படுத்த அந்த கடிதம் கொடுத்தேன்னு, நினைச்சா மனசு வேதனை அடையுதுடி...”, என்று என் மன வேதனையைத் தோழியிடம் கூறினேன்.

“இதுக்கா அழுத... விஜய் ரொம்ப மெச்சூர்ட் மேன்... அவருக்கு அந்த லெட்டர எப்படி எடுத்துக்கணும்னு தெரியும்டி... கவலப்படாத... கண்ணைத் தொட... விஜய் உன் லவ் லெட்டர ரசிச்சுப் படிச்சிட்டிருப்பாரு...”, என்று என்னை ஆறுதல் படித்தினாள், தோழி.

தோழியின் வார்த்தைகள் எனக்கு மிகுந்த ஆறுதலை அளித்தது.

தோழிக் கூறியதைப் போன்று, பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விஜி, ராஜாத்தி கொடுத்த லெட்டரை எடுத்துப் படித்தான். அவள் உள்ளத்தை அந்த கடிதத்தில் ஊற்றெடுத்துப் பாய்ச்சி இருந்தாள். அவள் தந்தையைக்

குறித்தும் எழுதியிருந்தாள். அவர் இந்த திருமணத்திற்குச்

சம்மதிக்க மாட்டார் என்பதை அறிந்திருந்தும், என்னை யாருக்கும், விட்டுக் கொடுக்க மனம் இல்லை என்பதையும், என்னையல்லாமல் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்வதில்லை என்பதையும் உறுதிபட எழுதியிருந்தாள். விஜய்க்கு அவளைப் பிடித்து விட்டது. இத்தனை நாட்களும் நட்புடன் பழகிய அவர்கள் உறவு, ராஜாத்தியின் கடிதத்திற்குப் பின் காதலாக மாறியது. அவள் கடிதத்தைப் பல முறைப் படித்து விட்டான். அவளைத் தானும் காதலிக்கும் விவரத்தை உறுதி செய்து அவளுக்குக் கடிதம் எழுத விஜய் முடிவு செய்து விட்டான். அவன் முடிவு அவன் வாழ்க்கையை எங்கு கொண்டு செல்லுமோ?

மனதுக்குள் பிரச்சனைகள் அலையடிக்க திரைப்படத்திற்குள் முழுமையாக என்னை ஈடுபடுத்த முடியாமல், விஜயை நினைத்துக் கொண்டிருந்தேன். அவரும் சினிமாவிற்கு எங்களுடன் வந்து என்னருகில் அமர்ந்திருந்தால், எப்படி இருந்திருக்கும், என்ற கற்பனையில் மிதந்தேன்.

எனக்கு ஒரு பக்கத்தில் விஜயும் மறுபக்கத்தில் தோழியும் அமர்ந்திருந்தனர். அவர் சினிமாவில் ஆழ்ந்திருந்தார். நான் தோழியைப் பார்த்தேன்.

“என்னடி என்னைப் பாக்குற... பக்கத்துல ஆள வச்சிட்டு என்னைப் பாத்தா என்னடி அர்த்தம்” என்றாள் மௌன சிரிப்பிலே.

“என்னடி செய்ய சொல்ற... அவருதான் சரியான ஜடமாச்சே... சினிமாவுக்கு அழைச்சிட்டு வருவதுக்குள்ளே போதும் போதும்னு ஆச்சு...“, என்றேன் ஆதங்கத்துடன்.

“இரண்டு ஸீட்டுகளுக்கு இடையில் ஒரே ஒரு கைப்பிடிதானே இருக்குது. அவர் கைவைச்சிருக்க இடத்துல உன் கையையும் வை... என்ன செயறாருன்னு பார்ப்போம்...“, என்று என் தோழி சொன்னதைக் கேட்டு அதை முயற்சித்துப் பார்க்க எண்ணினேன்.

திரைப்படத்தை ரசித்துக் கொண்டிருந்த, அவர் கையின் அருகில் என் கையை வைத்தேன். திடீரென, அவர் கை மீது, என் கை படவும், வெடுக்கென்று கையை அப்புறப்படுத்தி, என்னை முறைத்தார்.

பக்கத்திலிருந்த தோழியிடம், “என்னடி நீ சொன்னபடிதானே மெதுவா அவர் கை மேல, கை வைச்சேன், அதுக்கு இப்படி முறைக்கிறாரு”, என்று ஏமாற்றத்துடன் கூறினேன்.

“அப்படித்தான்டி முதல்ல முறைப்பாங்க... பிறகு சரியாகிடும்... பயந்து கையை எடுக்காத... கைய அழுத்திப்பிடி... என்ன ஆகுதுன்னு பாக்கலாம்...”, என்று தைரியம் கொடுத்தாள் தோழி.

“அப்படிங்கிற... சரி... எதாவது ஆச்சின்னா...”, என்று சந்தேகத்துடன் கேட்டேன்.

“ஒண்ணும் ஆகாதுடி...”, என்றாள், தோழி.

சிறிது நேர இடைவெளிக்குப் பின், கைப்பிடி மேல் இருந்த அவர் கையின் மீதுக் கையை வைக்கவும், அவர் தன் கையை எடுக்க எத்தனித்த போது, தோழியின் அறிவுரைப்படி, அவர் கையை அழுத்திப் பிடித்தேன். தோழிச் சொன்னதைப் போன்று அவர் அடங்கிப் போனார். அவர் கைகளை என் கைகளால் அணைத்துக் கொண்டு அவர் தோள் மீது சாய்ந்தேன். என் உடல் அவர் மீதுச் சாய்ந்த போது, அவருக்குள் ஏதோ இனம்புரியாத உணர்ச்சிக் கிளர்ந்தெழுந்ததை, அவர் உடல் அதிர்வில் உணர்ந்தேன். எனக்கும்தான். அந்த மயக்கத்தில் தன் தோழியைப் பார்த்துப் புன்னகைத்தேன்.

“என்னடி... என்ன பண்ற... என் கையைப் பிடிச்சிட்டு, என்ன பண்ற... என்னைப் பாத்துப் பல்லைக் காட்டுற... நீ இந்த உலகத்துல இல்லைப் போலிருக்கு...”, என்று கமலா, என்னை உலுக்கிய போதுதான் தெரிந்தது, நான் அவள் கையை அணைத்துக் கொண்டு, அவள் தோள் மீதுச் சாய்ந்திருந்தேன் என்பது. வெட்கத்தில் நனைந்தேன்.
 

Jeyakumar S

Member
அத்தியாயம் 5



மறுநாள், விடுமுறைக்கு வீடு வந்த சேர்ந்த நான், விஜயின் கடிதத்திற்காகக் காத்துக் கிடந்தேன். தபால்காரர் வந்து போகும் வரை வெளியில் எங்கும் போகாமல், வீட்டுக்குள்ளே அடைந்து கிடந்தேன். ஒருவேளை நான் வெளியில் போகும் சமயம் பார்த்துத் தபால்காரர், விஜயின் கடிதத்தைக் கொண்டுவர, அது அப்பா கையில் கிடைக்க, என் காதல் ஆரம்பம் ஆகுமுன்பே முளையிலேயே கிள்ளி எறியப்பட்டுவிடுமே என்ற பயம்தான்.

(என்னுடைய அப்பா, எங்கள் ஊர் தலைவர். காதலை விரும்பாதவர். சொந்த ஜாதியில் உள்ளவர்களுக்கிடையே காதல் வளர்ந்தாலும், சொந்த ஜாதியினர் மற்ற ஜாதியிலுள்ளவரோடுக் காதலை வளர்த்தாலும், அதை முறித்து விடுவதில் கெட்டிக்காரர். இதனால் ஜாதிப் பிரிவினரிடையே சண்டை, கலகம், வெட்டுக் குத்து, கொலை, தீ வைப்பு அனைத்திற்கும் தலைமை ஏற்று நடத்துபவர். அவருடைய அங்கீகாரம், எங்களது காதலுக்குக் கிடைக்குமா? சம்மதம் திருமணத்திற்கு கிடைக்குமா? பார்க்கலாம்)

முதல் நாள் தபால்காரர் வந்ததும் “கடிதம் இருக்கிறதா?”, என்று கேட்டேன். எனக்கே தெரியும், அன்று கடிதம் வராது என்று. விஜயிடம் இருந்து கடிதம் வர குறைந்த பட்சம் இரண்டு நாட்களாவது ஆகும். என்றாலும், ஒரு ஆர்வத்தில் தபால்காரரிடம் கேட்டு வைத்தேன். அடுத்த மூன்று நாட்களும் அவரிடமிருந்து பதில் கடிதம் வராததால் மனம் ஒடிந்து போனேன். மேல் மாடியில் இருந்த என் அறையில் சென்று முடங்கி கொண்டேன். அழுகை கண்களில் ஊற்றெடுத்தது.

அவர் வீட்டிற்குச் சென்ற மறுநாள் கடிதம் எழுதி தபாலில் வைத்திருந்தால், கூட அதிக பட்சம் நான்கு நாட்களில் கடிதம் வந்து சேர்ந்திருக்க வேண்டும். அவர் சென்று ஐந்து நாட்கள் ஆகிவிட்டன.

என்னைக் காதலிக்க அவருக்கு மனமில்லையா? என் அப்பா குறித்த விவரங்களை அறிந்த அவர், காதல் நிறைவேறாது என்று அறிந்திருப்பார். அதனால் அவருடைய வாழ்க்கை பாழாகிப் போகும் என்பதை உணர்ந்திருப்பார். அதனால் என் காதலை மறுதலித்திருப்பாரோ. நான் அந்த லெட்டரைக் கொடுக்காமல் இருந்திருந்தால் கூட நட்பைத் தொடர்ந்திருக்கலாமே. இப்பொழுது நட்பையும் இழந்து காதலுமின்றி, வருந்த வேண்டிய நிலையிலல்லவா வந்துவிட்டது, என்று கண்ணீர் வடித்தேன்.

எனக்குப் பிடித்த உணவு வகைகளைச் சமைத்துத் தந்த அம்மாவுக்கு, என் வேதனைத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகப் பெயரளவுக்கு உணவை உண்டேன். என் மன வேதனையை யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. என் முக வாட்டத்திற்குக் காரணம் என்னவென்று, பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் என் தம்பி என்னிடம் பலமுறைக் கேட்டுவிட்டான். அவனிடம் எப்படி என் காதல் விவரங்களைச் சொல்வது?. இறுதியாக ஒரு முடிவிற்கு வந்து விட்டேன்.

நான் செய்தது தவறு என்று அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். எனக்கு வேறு வழித் தெரியவில்லை. காலையில் தபால் நிலையம் சென்று, தபால் உறை ஒன்று வாங்கி, எழுதிய கடிதத்தை அதற்குள் வைத்து, அவருடைய வீட்டு முகவரியை எழுதி, தபால் பெட்டியில் சேர்த்துவிட்டுத் திரும்பிவிட்டேன். அவர் இந்த கடிதத்தைப் படித்தால், கண்டிப்பாக என்னைப் புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கை எனக்குள் பிறந்தது.

நண்பகல் வேளையில், “எம்மா! பாப்பா இல்லையா? அவளுக்கு ஒரு லெட்டர் வந்துருக்கு”, என்று தபால்காரர் கூறியது, மாடியில் இருந்த என் காதுகளில் விழுந்தது. மனதில் மகிழ்ச்சிப் பொங்கியது. தட தடவென்று மாடியிலிருந்து ஓடி வந்து, ஆசையோடு கடிதத்தை வாங்கினேன். அனுப்பியவர் பெயர் இல்லை. அவசரமாக உறையைக் கிழித்துப் படித்தேன். அது கமலா எழுதிய கடிதம். என் முகம் வாடியது. வீட்டுக்குள் சென்ற என்னை, மீண்டும் அழைத்து இன்னொரு தபால் உறையைத் தந்தார், தபால்காரர். அதை பிரித்தேன், படித்தேன். ஆயிரம் வாட் பல்ப் முகத்தில் பிரகாசித்தது. விஜயின் கடிதம்.

காலதாமதமாகக் கடிதம் எழுதியமைக்கு வருத்தத்தைத் தெரிவித்திருந்தார். என்னுடைய கடிதத்திற்குரிய பதிலை, ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் என் மனதைப் புரிந்து வைத்திருந்த அவர், என் எதிர்ப்பார்ப்பைக் காலதாமதப் படுத்தியதற்காக மன்னிப்புக் கேட்டு எழுதியிருந்தார். என்னுடைய காதலை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட செய்தியைப் படித்த என் மனம் எத்தனை மகிழ்ச்சி அடைந்திருக்கும் என்பதை எழுத வார்த்தைகள் கிடைக்கவில்லை.

(ஏன் கடிதம் எழுத காலத் தாமதம் ஆனது என்பதை அறிய ஆவலுடன் இருப்பீர்கள். சொல்லி விடுகிறேன்)

ஊர் சென்று சேர்ந்த அன்று, தூங்குவதற்கு முன்பே எனக்குக் கடிதம் எழுதி மேசைக்குள் வைத்து விட்டார். காலையில் பத்து மணிக்குள் தபால் நிலையம் சென்று, தாபால் உறையில் வைத்து அனுப்ப எண்ணியிருந்தார். ஆனால் மறுநாள் காலையில், அவருடைய அம்மாவிற்கு அடிக்கடி வருகின்ற இருதய படபடப்பு (Palpitation) வந்துவிட்டது. உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய சூழ்நிலை. மூன்று நாட்கள் மருத்துவமனைக்கும், வீட்டிற்கும் அலைந்த அலைச்சல் காரணமாக, எழுதி வைத்திருந்த கடிதத்தைத் தபாலில் அனுப்ப முடியவில்லை. அம்மாவை வீட்டிற்கு அழைத்து வந்த பின்னரே, எனக்கு எழுதிய கடிதத்தைத் தபால் செய்ய முடிந்தது, என்ற விவரத்தையும் அத்துடன் எழுதி அனுப்பியிருந்தார்.

அவருடைய சூழ்நிலையை அறியாமல், நான் பட்ட வேதனையை நினைத்துப் பார்த்தால், சிரிப்புத்தான் வருகிறது. இந்த விஷயம் தெரியாமல் அவருக்கு, வருத்தம் தெரிவித்துக் கடிதம் வேறு எழுதி அனுப்பிவிட்டேன். அந்த கடிதம் கிடைத்த உடன் என் மடத்தனத்தை எண்ணி சிரிப்பார்.

எதிர்ப்பார்ப்புகள் அதிகம் இருப்பதால்தான் வேதனைகள் அதிகமாகிறது. எதிர்ப்பார்ப்புகள் இல்லை என்றால் மனதுக்கு மகிழ்ச்சிதான்.

(நான் எழுதிப் போட்ட கடிதத்தைப் படித்துவிட்டுச் சிரித்துச் சிரித்து வயிறு வேதனை எடுத்ததாம் என்றால், நான் எவ்வளவு கேணத்தனமாக அந்த கடிதம் எழுதியிருப்பேன் என்று நினைத்து, எனக்கே சிரிப்பு வந்தது.)

அவர் கடிதத்தில் இருந்து அவருடைய அம்மாவின் உடல்நிலையைத் தெரிந்து கொண்டேன். எங்களுக்குள் கடிதம் எழுதுவது தொடர்ந்தது.

விடுமுறை முடிந்து, என் காதலன் விஜயைப் பார்க்க ஆவலுடன் மீண்டும் பல்கலைக்கழகம் சென்றேன்.

இரண்டாம் ஆண்டு வகுப்புகள் ஆரம்பமாயிற்று. ஐம்பது நாட்கள் விடுமுறைக்குப் பின்னர், மீண்டும் மூவரும் கூடினோம். அவரிடம் நிறைய மாற்றங்களைக் கண்டேன். விடுமுறை நாட்களைக் குறித்தும், வீட்டிலுள்ளோரைக் குறித்தும் அளவளாவினோம்.

பேச்சுக்கு நடுவில், எதிர்பாராத நேரத்தில், தோழியைப் பார்த்து, “இவளுக்கு, லெட்டர எழுத ஐடியா கொடுத்தது நீ தானே? என்று கேட்டார்.

“எந்த லெட்டர?...”, என்று எதுவுமே தெரியாதது போலக் கேட்டாள், தோழி.

“இந்த லெட்டர”, என்று அவர் அந்த கடிதத்தைப் பாக்கட்டிலிருந்து எடுத்துத் தோழியிடம் நீட்டினார். அவள் ஒன்றும் தெரியாததைப் போன்று, கடிதத்தை வாங்கி படித்தாள்.

கடிதத்தைப் படித்து முடித்ததும், ”என்னடீ! இப்படியெல்லாம் வேற நடக்குதா... எனக்கிட்டக் கூட சொல்லல... இப்ப நான் வேண்டாத ஆளா போயிட்டேன்... உனக்கு ஆளு கிடைச்சதும், என்னைக் கழட்டி விட்டுட்டப் பாரு... இப்படி இருப்பன்னு நான் நினைச்சிக்கூடப் பாக்கல...”, என்று கமலா அங்கலாய்த்தாள்.

“எம்மா... தாயி... போதும்மா போதும்... என்ன நடிப்பு .... தத்ரூபமா இருக்கு”, என்று விஜய் அவளைக் கேலிச் செய்தார்.

“நடிப்பா... ஏன்டீ! நானாடி இத எழுதுனேன். சொல்லுடீ... “,என்று என்னிடம் பொய் கோபம் காட்டினாள், என் தோழி.

“அவள்ட்ட எதுக்கும்மா கேட்கிற... அவ சொல்ல வேண்டாம்... நானே சொல்றேன்“, என்ற அவர் பதிலைக் கேட்ட தோழி அவரிடம், “என்ன சொல்லப்போறீங்க?”, என்று எரிந்து விழுவதைப் போன்று பாவனைச் செய்தாள்.

“உனக்குத் தெரியாம இந்த லெட்டர இவ எழுதியிருந்தான்னு வச்சுக்குவோம்... இத உங்கிட்டத் தரும்போது, இவ எப்படி பரபரப்பா இருந்திருக்கணும். எந்த க்ளோஸ் ஃப்ரண்டா இருந்தாலும், தான் எழுதின லவ் லெட்டர, தன்னுடைய ஆளத்தவிர வேற யாரும் படிக்கச் சம்மதிக்க மாட்டாங்க... இவளைப் பாரு...”, என்று அவர் சுட்டிக் காட்டியதும், தோழி தன் தோல்வியை ஒப்புக் கொண்டாள்.

“ச்சே! குட்டு வெளியாயிட்டே... பயங்கரமா சொதப்பிட்டேன் போல இருக்கு... பரவாயில்ல”, என்று சொல்லி சிரித்தாள்.

பேசிக் கொண்டே வகுப்பறையை நெருங்கினோம். தோழி என்னைப் பார்த்து, ஏளன புன்னகையை உதிர்த்து விட்டு, வகுப்புக்குள் சென்றாள்.

எங்கள் காதலும் வளர்ந்தது... மற்றவர்களைப் போல அல்ல... மனதுக்குள்.
 

Jeyakumar S

Member
என்றும் என் நெஞ்சில்

அத்தியாயம் 6

மூன்று பருவங்கள் (Semester) ஓடிவிட்டன. அனைத்து தேர்விலும் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றிப் பெற்றோம்.

வங்கி தேர்வாணையம், அரசு அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் அலுவல் அதிகாரிகள் தேர்வுக்கு விளம்பரம் செய்திருந்தது. அந்த விளம்பரத்தைப் பார்த்த விஜய், அந்த வேலைக்கு, என்னையும் கமலாவையும் விண்ணிப்பிக்க கேட்டுக்கொண்டார். எனக்குக் கல்லூரி ஆசிரியர் பணிதான் பிடித்திருந்தது. எனவே நான் வங்கி தேர்வு எழுத விரும்பவில்லை. கமலாவின் பெற்றோர், வெளிநாட்டில் வசிப்பதனால், அவளும் வங்கி தேர்வு எழுத விரும்பவில்லை. விஜய் மட்டும் வங்கி பணிக்கு விண்ணப்பித்தார்.



தினமும் வகுப்புகள் முடிவடைந்ததும், விஜய் விடுதிக்குச் சென்று குளித்துக் காஃபிக் குடித்துவிட்டு, நூலகத்திற்கு வந்து, வங்கி தேர்வுக்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தார். வங்கித் தேர்வுக்காகக் கடினமாக உழைத்தார். கடின உழைப்புக்கு ஈடு இணை எதுவுமில்லை அல்லவா!.

நாங்கள் தினமும் மாலையில் நூலகத்தில் சந்திப்பது வழக்கமாயிற்று.

ஒருநாள் தோழி என்னுடன் வரவில்லை. நானும் அவரும் மட்டும் ஹாஸ்டலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தோம். ஹாஸ்டல் போய் சேருகின்ற வழி நெடுகிலும், காதல் ஜோடிகள் ஆங்காங்கே அமர்ந்து, சில்மிஷங்களைச் செய்து கொண்டிருந்தன. அவர்கள் ஒவ்வொருவரையும் பார்த்துவிட்டு, அவரையும் பார்த்தேன். அவர் சிரித்துக் கொண்டே, ஒன்றும் பேசாமல் என்னுடன் நடந்தார்.

எனக்கும், அந்த காதல் ஜோடிகளைப் போல் சில்மிஷங்கள் செய்யாவிட்டாலும், தனிமையில் அவருடன் அமர்ந்து, சிறிது நேரம் பேச வேண்டும், சிரித்துப் பழக வேண்டும், என்ற ஆசை உண்டு. ஆனால் அவருக்குத்தான் அது பிடிக்காதே.

ஹாஸ்டல் வரை வந்து என்னை விட்டபின்னர், வந்த வழியே திரும்பினார்.

“ரெண்டு பக்கமும் பாத்துட்டே போங்க... அதுக்கு மட்டுந்தான் உங்களுக்குக் கொடுத்துவச்சிருக்கு”, என்று ஏளனமாகக் கூறினேன். என் ஏளன பேச்சைக் கேட்ட அவர், சிரித்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பினார்.

ஒருநாள்….

எங்களைத் தேடி ஹாஸ்டலுக்கு வந்தவர், “பேங்க் எக்ஸாம் ரிசல்ட் வந்துருக்கு... அதுல நான் பாஸாயிட்டேன்... ரொம்ப சந்தோஷமா இருக்கு ...”, என்று மகிழ்ச்சிப் பொங்க கூறினார்.

“இப்படி சொன்னா எப்படி? ... ட்ரீட் வேணும்”, என்று கேட்டாள் கமலா.

“வேல கெடச்சதும் பெரிய ட்ரீட் தாரேன்... இப்ப சின்ன ட்ரீட் தாரேன்... ?, என்று கூறி எங்களைக் கேன்டீனுக்கு அழைத்துச் சென்று ஸ்வீட், காரம், காஃபி வாங்கி தந்து, தன்னுடைய மகிழ்ச்சியை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். சிறிது நேரம் கேன்டீனிலிருந்து பேசிவிட்டு, ஹாஸ்டலை நோக்கிப் புறப்பட்டோம்.

விஜய்க்கு கடவுள் நம்பிக்கை அதிகமுண்டு. அதனால் எங்களிடம்,

”இன்டர்வியு அடுத்த வாரம். வெற்றிப் பெற நீங்களும் உங்க கடவுளை வேண்டிக்காங்க”, என்று வேண்டுகோள் விடுத்தார்.

“கண்டிப்பாக உங்களுக்காக நாங்களும் எங்க கடவுள வேண்டுவோம்... கவலையே படாதங்க... நீங்க கும்பிடுகிற கடவுள் உங்களை ஒருநாளும் கை விட மாட்டார்... கண்டிப்பாக இன்டர்வியூவில பாஸாயிருவீங்க...”, என்று வாழ்த்துக் கூறினாள், என் தோழி கமலா.

“நம்ம கல்யாணத்துக்கு முதல் ஸ்டெப் ... எனக்கு வேல கிடைக்கணும்”, என்று என்னைப் பார்த்து கூறினார்.

அதைக் கேட்ட கமலா, “என்ன... இவ்வளவு கான்ஃபிடண்டா கல்யாணத்தப் பத்திப் பேசுறீங்க... உங்க அப்பாவும் அம்மாவும், இவளைக் கட்டிக்க சம்மதிப்பாங்களா?... இவ இந்து, நீங்க கிறிஸ்டியன்... எப்படி சம்மதிப்பாங்க?”, என்று கேள்வி எழுப்பினாள்.

“கண்டிப்பா சம்மதிப்பாங்க... எங்க வீட்டுல இதப்பத்தி ஏற்கனவே பேசிட்டேன்...” , என்று எதிர்பாராதக் குண்டு ஒன்றை எடுத்து வீசினார்.

“என்னது... எப்போ... சொல்லவே இல்லையே...” என்று இரண்டு பேரும் ஆச்சரியத்தில் வாயை திறந்து நின்றோம்.

என்னுடைய முதல் கடிதத்திற்கு, அவரிடம் இருந்து பதில் கடிதம் வருவதற்கு முன்னே, அவசரப்பட்டு நான் வேறொரு கடிதத்தை அவருக்கு எழதினேன் அல்லவா, அது அவர் கையில் கிடைக்கவில்லை. என்னிடமிருந்து, மறு கடிதம் வர ஒருவாரம் ஆகும் என்று நினைத்திருந்தார். ஆனால் என்னுடைய கடிதமோ முன்னரே சென்றுவிட, அக்கடிதத்தை அவர் எதிர்பார்த்திராத நேரத்தில், அவர் வீட்டில், தபால்காரர் சேர்த்திருந்தார். அனுப்புனர் முவரியில் என் பெயரைத் தெளிவா எழுதி அனுப்பியிருந்தேன். அவர் வந்ததும் கடிதத்தை அவரிடம் கொடுத்த அவருடைய அம்மா, என்னைக் குறித்த விவரத்தைக் கேட்க, அவர் என்னைக் குறித்த அனைத்தையும் கூறிவிட்டார். அவர் வீட்டிலுள்ளோர் அனைவருக்கும் எங்கள் காதல் விவகாரம் தெரிந்துவிட்டது. எங்கள் காதலுக்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் பச்சைக்கொடி காட்டிய அவர் வீட்டார், அவருக்கு நல்ல வேலை கிடைக்கிறவரை, பொறைமையாக இருக்கும்படி கூறியுள்ளனர். என்னுடைய பெற்றோரின் சம்மதம் கிடைத்தால் மட்டுமே, திருமணம் நடக்கும் என்பதையும் தெளிவாகக் கூறிவிட்டனர்.

(என்னுடைய பெற்றோர் சம்மதம் இல்லாம, இழுத்துட்டு ஓடுறது, ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிறது , இதெல்லாம் கூடாதுன்னு சொல்லிட்டாங்களாம். கல்யாணம் நடந்தா இரண்டு குடும்பத்தினர் சம்மதத்தோடுதான் நடக்கணுமாம். இதை நான் சொல்லலங்க. அவர் எங்களிடம் சொன்னதை, நான் உங்களிடம் சொன்னேன். அவ்வளவுதான். உங்க மைன்ட் வாய்ஸ் எனக்கு கேட்குதுங்க... அப்ப இந்த கல்யாணம் நடந்தது போலத்தான்னு நீங்க நினைக்கிறது எனக்கும் புரியுதுங்க ... எதுக்கும் கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்க)

“உங்க வீட்டில உங்க அப்பா கலப்பு திருமணத்துக்குச் சம்மதிக்க மாட்டாருன்னு எழுதியிருந்த... அதனால நமக்கு கல்யாணம் நடக்கிறது கஷ்டம்தான்னு எனக்குத் தெரியும். ஆனாலும் உன்னுடைய இஷ்டம்தான், எனக்கு முக்கியம். எப்படியும் உங்க அம்மா அப்பா கிட்டச் சம்மதம் வாங்கிருவன்னு நம்புறேன். ஒண்ணு மட்டும் உறுதியா சொல்றேன், உங்க அப்பா அம்மா ஆசிர்வாதம் இருந்தா மட்டுமே, நான் உன்னைக் கல்யாணம் பண்ணுவேன். இத்தனை வருஷமா பெத்து, வளர்த்து இந்த நிலைக்குக் கொண்டு வந்த பெற்றோருக்கு, நாம செய்கிற நன்றி கடன் இதுதானே? அவங்க சம்மதம் கிடைக்கிற வரைக்கும் காத்திருப்போம். என்ன சொல்லுற நீ... ஓகே தானே”, என்று கண்டிப்போடுக் கூறியதைக் கேட்ட எனக்கு, உடல் சிலிர்த்தது. என்ன சொல்வதென்றே, எனக்குத் தெரியவில்லை.

என்றாலும் வேற வழியில்லாமல்,

“ஓகே... எங்க அம்மா, அப்பா சம்மதம் கெடைக்கிற வரைக்கும் உங்களுக்காகக் காத்திருப்பேன்”, என்று சொல்லி வைத்தேன்.

வங்கி அதிகாரிக்கான நேர்முகத் தேர்வு நடந்து முடிந்தது. அதில் சிறப்புற செய்திருப்பதாகக் கூறினார். விஜய், வேலையில் சேருவதற்கான கடிதம் ஓரிரு மாதங்களுக்குள் வரும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்.
 

Jeyakumar S

Member
என்றும் என் நெஞ்சில்

அத்தியாயம் 7
நான்காம் பருவத்தில்( Fourth Semester) வங்கியின் கொள்கைகளும், செயல்பாடுகளும் (Principles and Practice of Banking) என்ற ஒரு பாடம் இடம் பெற்றிருந்தது. அது ஒரு பயிற்சி வகுப்பு. எங்கள் வகுப்பு மாணவர்கள் அனைவரும் வாரம் இரண்டு நாட்கள் வங்கியில் சென்று பயற்சி எடுக்க வேண்டும். அதற்காக எங்கள் துறையினால் சில வங்கிகள் தெரிவு செய்யப்பட்டு, மாணவர்களின் பயிற்சிக்காக அனுமதிப்பெற்று, பட்டியலிடப் பட்டிருந்தன. பட்டியலில் இடம் பெற்றிருந்த வங்கி ஒன்றில் என்னையும் விஜயையும் பயிற்சிக்காக அனுப்பியது எங்கள் துறை நிர்வாகம். வங்கிகளில் மாணவர் வருகை பதிவேடு வைக்கப்பட்டிருக்கும். அதற்கென தனி மதிப்பெண்கள் உண்டு. எனவே அனைவரும் வங்கி பயிற்சி வகுப்பில் தவறாமல் கலந்துக் கொள்வோம். வங்கியின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் நேரடியாகத் தெரிந்து கொள்ள, அது உதவியாக அமைந்தது.

காலை ஒன்பது மணிக்கு, பல்கலைக் கழக வளாகத்திலிருந்து புறப்படும் பேருந்தில் ஏறிச் செல்வோம். இரண்டு மணிக்கு மதுரை பேருந்து நிறுத்தத்தின் அருகிலிருந்து புறப்படும் பல்கலைக்கழக பேருந்தில் ஏறி விடுதிக்குத் திரும்பி விடுவோம். பேருந்தில் பயணிக்கும் போது இருவரும் அருகிருந்து பயணிப்போம். அவரது அருகிருந்து பயணிப்பதில் அத்தனை மகிழ்ச்சி எனக்கு. அந்த இரண்டு நாட்களுக்காகக் காத்திருப்பதுண்டு. தனிமையில் பயணிக்கும் பொழுது பாடங்களைப்பற்றி, எங்கள் குடும்பங்களைப்பற்றி, எதிர்கால கனவுகளைப்பற்றிப் பேசிக்கொள்வோம். நாட்கள் நகர்ந்தன.

நான்காவது பருவத் தேர்வுக்கான பாடங்கள் அனைத்தும் முடிக்கப்பட்டுவிட்டன. இறுதி ஆண்டின் இறுதி நாள் அன்று.

ஃபேர்வெல் பார்ட்டி ஒன்றை நடத்தினோம். அதை ஒரு பெரிய வகுப்பறையில் வைத்து நடத்த ஏற்பாடு செய்திருந்தோம். பேராசிரிய பெருந்தகைகள் அனைவரும் வந்திருந்தனர். பேராசிரியர்கள் அனைவரும் எங்களுக்கு வாழ்த்துரை வழங்கினர். மாணவர்களின் ஆடல் பாடல் பேச்சு என அந்நிகழ்ச்சி சிறப்புற அமைந்திருந்தது. முடிவில் ‘ஹை டீ பார்ட்டி’ ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சிக்குப் பின்னர், மாணவர்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் கைக் குலுக்கி, கட்டிப் பிடித்து விடைபெற்றுக் கொண்டனர். அவர் என்னருகில் வந்து மற்ற மாணவர்களைப் போல எனக்கும் கைக் கொடுத்தார்.

“ஆம்பளப் பசங்களக் கட்டிப் பிடிப்பீங்க… என்னைக் கட்டிப் பிடிக்க மாட்டீங்களா?” என்று அவர் காதருகில் முணு முணுத்தேன்.

“அதுக்கென்ன செய்துருவோம்... என்ன... இப்பவே கட்டிபிடிக்கவா?”, என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.

“அய்யே! கிண்டலா...”, என்று பரிகசித்தேன்

“நீ தானே கட்டிபிடிக்க சொன்ன... அப்புறம் அய்யேங்கிற...”, என்று கிண்டலடித்தார்.

“இங்க வேண்டாம்... வெளிய வச்சுக்கலாம்...”, என் உள்ளத்தில் விதையிட்டுத் துளிர்த்து வளர்ந்திருந்த ஆசையைச் சிரித்துக் கொண்டே, அவரிடம் மெதுவாகக் கூறினேன்.

“உண்மையாவா சொல்ற...”, என்று கண்களை விரித்துக் கேட்டார்.

“ஆமா... உண்மையாகத்தான் கேட்கிறேன்... இந்த ஃபங்ஷன் எல்லாம் முடிஞ்சதுக்கப்புறம்...”, என்ற எனக்கு, ஒரு புன் முறுவலை உதிர்த்துவிட்டு, மற்ற மாணவிகளிடம் விடைபெறச் சென்றுவிட்டார்.

எங்களுடைய பக்குவமான காதல் விவகாரம், வகுப்பில் மாணவர்கள் பலருக்கும் தெரியும். ஏன் ஆசிரியர்களுக்கும் தெரியும். ஆட்டோக்ராஃப் வாங்கும் பொழுது, ஒவ்வொருவரும் எங்கள் காதலுக்கு வாழ்த்துச் சொல்லி திருமணத்திற்கு அழைக்க வேண்டும் என்று எழுதியிருந்தனர்.

கனத்த இதயத்துடன் அனைவரும் விடைப் பெற்றனர்.

நாங்கள் இருவரும் தோளோடு தோள் உரச நடந்தோம். சாலையின் இருபக்கமும் காதல் ஜோடிகள் யாருமின்றி வெறிச்சோடிக் கிடந்தது.

“என்னம்மா... இன்னைக்கி என்ன காதல் ஜோடிகள் ஒண்ணையும் காணோம்...காதலர் ‘பந்த்’தா?”, என்று விசாரித்தார்.

“க்ளாஸெல்லாம் முடிஞ்சாச்சு… பரிச்சை நெருங்குதுல்லா அதனால, தங்கள் லீலைகளுக்குக் கொஞ்சம் லீவுக் கொடுத்துட்டு எல்லாரும் பரிச்சைக்குப் படிச்சிட்டிருப்பாங்க”, என்று கிண்டலோடு விளக்கம் அளித்தேன்.

“ஆமா... பரிச்சை நெருங்கிடுச்சில்ல... நமக்கும் படிக்கணும்… நாளைக்கே ஆரம்பிச்சிறலாமா?”, என்று சீரியஸா என்னைப் பார்த்துக் கேட்டார்.

“சரி நாளைக்கே ஆரம்பிக்கலாம்... அதுக்கு முன்னாடி... நான் உங்க கிட்டக் கேட்டேனே ஒண்ணு... அதை முதல்ல தாங்க... எதையாவது தாறேன்னு சொன்னா அத கண்டிப்பா... எப்படியும் குடுத்துறனும்”, என்று அப்பாவிப் போன்று அவரிடம் சொன்னேன்.

அவருக்கு என்னவென்று புரியவில்லை.

“என்ன கேட்ட... நான் எதைத் தாறேன்னேன்... ஒண்ணும் புரியலையே?”, என்று வெகுளியாய் கேட்டார்

“என்னைக் கட்டிப் பிடிக்கிறேன்னீங்களே...”, என்று கண்களை மூடிக்கொண்டுத் தரையைப் பார்த்துக் கொண்டே கூறினேன்.

“சீரியஸாவா கேக்கிற… நான் என்னைத் தமாஷ் பண்றன்னுலா நினைச்சேன்”, என்று கண்களைச் சுருக்கி என் முகத்தைக் கைகளினால் தூக்கிக் கேட்டார்.

“ஆமா... உண்மையாத்தான் கேட்டேன்... இதுல தமாஷ் எங்க இருக்கு”, என்று கூறி அவர் கையைப் பிடித்து ஒரு மரத்தின் அடியிலிருந்த சிமென்ட் பெஞ்சை நோக்கி இழுத்தேன்.

முரண்டு பிடிப்பார் என்று நினைத்தேன், ஆனால் என்னுடனே, பேசாமல் வந்தார். அவர் கண்களைப் பார்த்தேன். என் கண்களில் தேங்கி நின்ற ஏக்கத்தைக் கண்ட அவர், என்னைத் தன் பக்கமாக இழுத்து, அணைத்து நெற்றியிலே முத்தமிட்டார். அணைக்கையிலே அவர் உடம்பில் ஏற்பட்ட நடுக்கத்தை என்னால் உணர முடிந்தது.

“இப்படி ஒரு மனுஷனா? கரும்பு தின்ன கூலிக் கேப்பாரு போல இருக்கே” என்று நான் நினைத்தாலும், என் நாடி நரம்புகளுக்குள் கோடி மின்னல் பாய்ந்ததுப் போன்றதொரு உணர்வு, எனக்கும் இருந்தது.

“எனக்கு இன்னும் ஒரே ஒரு ஆசை”, என்று அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்துக் கேட்டேன்.

“என்னம்மா... இரண்டு வருஷமா நீ எதையும் கேட்கல... நீ எதைக் கேட்டாலும் தருகிறேன்”, என்று மனம் திறந்து பேசினார்.

“வெக்கமா இருக்கு… தப்பா நெனச்சிக்க மாட்டீங்களே…”, என்று மனதில் ஏற்பட்ட ஒரு விதமான படபடப்புடன் அவரிடம் கூறினேன்.

“உன்னை எப்படி தப்பா நினைப்பேன்... தப்பா நினைக்க மாட்டேன்... நீ கேளு... கண்டிப்பா தருவேன்... சொல்லு”, என்று ஆசையோடு கூறினார்

மனம் ‘திக் திக்’ என அடித்துக் கொள்வது, என் காதுகளில் கேட்டது. ‘கேட்கலாமா, கேட்க வேண்டாமா? கேட்டால், என்னைத் தப்பாக நினைத்துக் கொள்வாரா?’ என்று பல கேள்விகள் என்னுள் எழுந்தது. அவர் என்ன நினைத்தாலும் என்ன என்று மனம் கூற, “ஒரே ஒரு லிப் கிஸ்”, என்று கேட்டுவிட்டுக் கண்ணை மூடிக்கொண்டேன்.

“……………….”

அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. மௌனம் குடிக்கொண்ட அவர் முகத்தை, வெட்கம் நிறைந்த கலவரத்துடன் பார்த்தேன். என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். நாணம் தலைக்கேறத் தலையை கவிழ்த்துக் கொண்டு, “கல்யாணம் பண்ணுனா உங்கள மட்டுந்தான்... வேற யாருக்கும் என் கழுத்த நீட்ட மாட்டேன் இது சத்...” தொடர்ந்து வார்த்தைகள் வரா வண்ணம் அவர் இதழ்களால் என் இதழ்களை மூடினார்.

உண்மையை சொன்னால், இப்பொழுதுதான் என் உடலுக்குள் கோடி மின்னல் சேர்ந்து பாய்ந்ததைப் போன்றதோர் உணர்வு. அது எனக்குப் புதிய அனுபவம். மனதுக்குள் பயம் கலந்த இன்ப உணர்ச்சிகள், உருவாகி உடலெங்கும் பரவியது. அவர் முத்தத்தின் தித்திப்பில் என்னை நான் இழந்தேன். கண்கள் மேல் நோக்கிச் செருகின. இமைகள் மூடின. இன்பத்தில் இருவரும் இறுக கட்டி அணைத்தோம். சில நிமிடங்கள் எங்களை மறந்தோம். திடீரென என் உள்ளுணர்வு என்னை உறுத்தியது. ‘தொட்டுப் பேசுவதே தப்பு என்று சொல்லுகிறவரை, என் இன்பத்திற்காகத் தப்புக்குத் தூண்டிவிட்டேனே’ என்ற எண்ணம் தலை தூக்கியது. என்னிலை அறிந்த நான், இறுக்கி அணைத்திருந்த அவரிடமிருந்து விலக, திமிறினேன். அவருக்கு என் திமிறலுக்கான காரணம் புரியவில்லை. ‘ஏன் இந்த திமிறல்... எதற்காக விலக துடிக்கிறாய்’ என்று கண்களினால், கேள்வி கணைகளைத் தொடுத்தார். அவரை அறியாமலே அவர் கரங்கள் என்னை மேலும் இறுக்கின. “போதும்... போதும்... தயவுசெய்து விட்டுருங்க...” என்று பதை பதைக்க அவரை பார்த்துக் கெஞ்சினேன். இன்னும் சிறிது நேரம் நீடித்திருந்தால், என்னை அவரிடம் இழந்திருப்பேன் என்பதுதான் உண்மை. அவரும் மனிதன்தானே. என்னுடைய ஒரு சின்ன ஆசை எத்தனை பெரிய ஆபத்தற்கு வழி நடத்துகிறது, என்பதை உணர்ந்து வெட்கப்பட்டேன். அவரது நல்ல மனதுக்கும், கொள்கைக்கும் எத்தனை இழுக்கை உண்டாக்கி விட்டேன் என்ற உணர்வு, எனது உள்ளத்துக்குள் கொந்தளிப்பை உருவாக்க, அவர் அணைப்பிலிருந்து வெளியேற, அவர் முகத்தைப் பார்த்துக் கெஞ்சினேன். இன்ப மயக்கத்திலிருந்த அவரும் தன்னிலை உணர்ந்தார். இந்த நிலை நீடித்தால்... இருவரும் சுதாகரித்து கொண்டோம்.

“நமக்குத் திருமணம் நடக்கும் வரை இந்த நினைவுகளிலேயே வாழ்ந்துருவேன். நம்முடைய தூய்மையான காதலுக்கு இது ஒரு களங்கமாகவே இருந்துவிட்டுப் போகட்டும்”, என்று தைரியமாக உணர்ச்சித் ததும்ப பேசியதைக் கேட்ட அவர் வாயடைத்து விட்டார். இருவரும் எழுந்து நடந்தோம்.

“எங்கள் பைபிளில் பெண்கள் பலவீனமானவர்கள் என்று கூறப்பட்டுள்ளது... உண்மைதான் என்றாலும், பெண்கள் மிகவும் மன வலிமை உள்ளவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இதை உன்னிடத்திலிருந்து தெரிந்து கொண்டேன்... என்னைப் பெரிய தப்பிலிருந்து காப்பாற்றிவிட்டாய்... நீ எனக்குக் கிடைச்சது உண்மையிலே இறைவனின் அருள்”, என்று என் மனவலிமையைப் புகழ்ந்து கூறியபோது எனக்குப் பெருமையாக இருந்தது.

அடுத்த நாள் முதல், பாடங்களைப் பட்டியலிட்டுப் படித்தோம். என்னிடத்தில் எந்தவித சலனமுமில்லை. ஆனால் அவர் முதல் நாள் கொஞ்சம் டிஸ்டர்ப்டா இருந்தார். பின்னர் சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டார்.

மறுநாள் என்னிடத்தில் ஒரு காகிதத்தை நீட்டினார். லவ் லெட்டரோ என்று எதிர்ப்பார்த்த எனக்கு ஆச்சரியம் காத்திருந்து. பெண்களைப் பற்றிய அழகான கவிதை அது.


பெண் ஜென்மம்


பெண்ஜென்மம் என்ன
குறைவானதா?
குறைவானது என்றுரைப்பர்
அறிவற்ற மதியீனர்
தாய்மையினை அறியாத
தரங்கெட்ட மனிதர்.

பெண்ஜென்மம் அன்றோ
தாய்குலம்
தாய்குலத்திற்கன்றோ
தரணியிலே முதலிடம்

‘அன்னையும் பிதாவும்
முன்னறி தெய்வம்’

அன்னை தமிழின்
மூதுரை அன்றோ!

அன்னைக்கே
அகிலத்தில்
முதலிடம்.

‘மாதா பிதா குரு தெய்வம்’
வேதங்கள் கூறும் ஞானவுரை.

பெண் ஜென்மம் ஒரு
தியாகத்தின் சின்னம்.

தாலி கழுத்தில் ஏறியதும்
தாய் வீட்டை
தியாகம் செய்தாள்.

அம்மாவின் அன்பதனை
அப்பாவின் அரவணைப்பை
உடன் பிறப்பின்
கெஞ்சல்களை
கொஞ்சல்களை
சிண்டுபிடி சண்டைகளை
பேச்சுகளை
பிதற்றல்களை
பதுங்கவைக்கும்
ப்ளாக் மெயிலை
உற்றாரை உறவினரை
அன்புமிகு தோழிகளை
அருமையான தோழர்களை
அத்தனையும்
பிறந்த வீட்டில் விட்டு விட்டு
நினைவுகளை சுமந்துக் கொண்டு
புக்ககத்தில் புகுந்துவிட்டாள்.

ஆண்களுக்கோ!
அத்தனையும்
என்றுமுண்டு.


காலம் எல்லாம்
கண்மணிப் போல்
காத்து வந்த
கற்புதனை
கணவனிடம்
தியாகம் செய்தாள்,
அந்த புனிதமான
பெண் ஜென்மம்.

அவன்
உயிர் அணுவை
கருவறையில்
ஈரைந்து மாதங்களாய்,
இன்னல் எல்லாம்
தான் சுமந்து,
மகவை
ஈன்றெடுக்கும் நாள்வரையில்
உடல்நலத்தைத் தியாகம் செய்து
உணர்வுகளைத் தியாகம் செய்து
புனர் ஜென்மம் எடுப்பதன்றோ
பெண்ஜென்மம்

அவள்
தியாகத்துக்கு
வேதங்களும் சாத்திரமும்
சாட்சி சொல்லும்.

மாதவளின்,
மகத்துவத்தை போற்றுவதே
தனி இன்பம்.

ஆணுக்கு அன்பளித்து சீரழிய
பிறந்தவளா பெண்?
இல்லை இல்லை

என்றுமில்லை
ஆணின்
சீரையும் உயிரையும்
சீரமைக்கப் பிறந்தவளே பெண்.

மஞ்சத்திலே சுமந்து
அவனை
நெஞ்சத்திலே
தினம் சுமக்கும்
வஞ்சமில்லா அஞ்சுகமே
பெண்ஜென்மம்

கணவனுக்காய் குடும்பத்திற்காய்
குழந்தைகளின் வளர்ச்சிக்காய்,
இஷ்டமில்லா கஷ்டங்களை
இன்பத்துடன் ஏற்றெடுக்கும்
பெண்ணன்றோ
தியாகத்திற்குச் சின்னம்!

போற்றுதலுக்குரியதன்றோ
பெண் ஜென்மம்!!.




பெண்களைப் பற்றிய உயர்வான அவர் எண்ணங்களை நினைத்து மகிழ்ந்தேன். நாட்கள் வேகமாக நகர்ந்ததைப் போன்றதோர் உணர்வு.

பரிட்ச்சை முடிந்தது. சில முடிவுகள் எடுத்தோம். எங்கள் காதலில் உறுதியுடன் இருந்தோம். வாரம்தோறும் கடிதம் எழுத வேண்டும். ‘விசேஷம் இருக்குதோ இல்லையோ கடிதம் எழுதுவது கண்டிப்பு’ என்ற முடிவு எடுக்கப்பட்டது.

ஃபேர்வல் டே நிகழ்வுக்குப்பின் என்னிடத்தில் பெரிய மாற்றம் உருவானதை நானே உணர்ந்தேன். மாறாக, அவர் மனதில் நிறைய சலனம் ஏற்பட்டதைப் பல முறை உணர்ந்தேன். கடைசி நாள் பிரியும் முன்பு என்னிடம் முத்தம் ஒன்றைக் கேட்டுக் கெஞ்சினார். நான் அதற்கு முழுமையாக மறுத்துவிட்டேன். காதலைப் பற்றி, எப்படி பேசியவரை நான் இந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டேனே என மனம் வருந்தினேன்.

“நம்முடைய திருமணம் நடக்கும் வரை இனி இது கிடையாது. எல்லாமே திருமணத்திற்குப் பின்னர்தான்”, என்று அவருக்குத் தைரியமூட்டினேன்.

நான் அவர் கைகளில் முத்தம் கொடுத்தேன் அவரும் என் கைகளில் முத்தமிட, இருவரும் பிரிந்தோம். கடிதங்களில் எங்கள் காதல் உறவு தொடர்ந்தது.
 
Top