Jeyakumar S
Member
அத்தியாயம் 13
ஆஸ்பத்திரி அறையில் என்னை, அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கும்படி, தனியாக விட்டுவிட்டு, விஜய் தன் அண்ணனை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்று, அப்பாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்திருந்தார்.
எங்களுடைய பேச்சுக்கிடையில், அறைக்கதவைத் திறந்து கொண்டு, அவரும் அப்பாவும் உள்ளே நுழைந்தனர்.
“நீ அப்பாவைக் கூப்பிடவா போன... மூத்தவன்கிட்ட ஸ்கூட்டர கொடுத்துவிட்டுருந்தா போதுமே... அவனே அப்பாவ அழைச்சிட்டு வந்திருப்பானே”, என்று அம்மா கூறினார்.
“இல்லம்மா அண்ணன் கையில ஸ்கூட்டர கொடுத்திருந்தா, அண்ணன்தான் அப்பாவ கூட்டிட்டு வரணும். அது மட்டுமில்ல ஸ்கூட்டர எனக்கிட்ட தந்துட்டு அவன் பஸ்ஸுல போகணும்... அதனாலத்தான், நான் அண்ணனை விட்டுட்டு அப்பாவக் கூட்டிட்டு வந்துட்டேன். நானும் இவளும் திரும்பி போவதுக்கு, ஸ்கூட்டரும் என் கையில இருக்கு... அதோடு நீங்க உங்க வருங்கால மருமகக்கிட்டத் தனியா பேசணும்னு தான், போனேன்…” என்று விளக்கினார்.
“என்னடா... வருங்கால மருமகள்னுச் சொல்ற... அவ வருங்கால மருமக இல்லடா... இப்பவும் எப்பவும் என் மருமகதான்”, என்று விஜயைத் திருத்தினார், அம்மா.
அவருடைய அம்மா, என்னை இப்பொழுதே மருமகளாக ஏற்றுக் கொண்டதைக் கேட்டு, அவர்கள் மீது மரியாதைக் கூடியது.
“என்னம்மா! உங்க அத்தை உன்னைப் போரடிச்சிட்டாளா?”, என்று அப்பா கேட்டார்.
“இல்ல மாமா... அத்தையோடு பேசிட்டு இருந்ததால, நம்ம வீட்டு விஷயங்களத் தெரிஞ்சுக்க வசதியா இருந்துச்சு“
“ரொம்ப சந்தோஷம்மா... எங்க எல்லாரப் பத்தியும் உங்க அத்த, உன்கிட்டச் சொல்லிருப்பாள்னு நினைக்கிறேன்... எங்களப் பொறுத்தவர, எங்க பிள்ளைகளுடைய விருப்பம் தான் எங்களுக்கு முக்கியம். ஊரு உலகத்தப் பத்தி எல்லாம், நாங்க கவலப்பட மாட்டோம். எங்களுக்கு ஒரு கஷ்டம்னா எங்க புள்ளைங்கதானே, எங்க கூடச் சேர்ந்து கஷ்டப்படுவாங்க. வேற ஒருத்தனும் எங்களுக்கு உதவிக்கு வர மாட்டான். உலகத்த நெனச்சிக் கவலப்பட்டு என்ன பிரயோஜனம். அதான், அவன் உன்னைப் பத்திச் சொன்னதும், ஓகே சொல்லிட்டோம். பிள்ளைங்க நீங்க சந்தோஷமா இருக்கிறதைப் பாத்தா, அதுதான் எங்களுக்குச் சந்தோஷம்.”, என்று எங்களுடைய திருமணத்தைக் குறித்தத் தங்களுடைய நிலைப்பாட்டை விளக்கினார்.
நான் மௌனம் சாதித்தேன். மாமா தன்னுடைய பேச்சினைத் தொடர்ந்தார்.
“எம்மா!... எம்மகன் ரொம்ப பாவம்மா, இழந்த மனசு. அவன்னா எங்க எல்லாருக்கும் உயிர். யாருக்கும் கஷ்டம் கொடுக்கமாட்டான். அவனால யாருக்கும் கஷ்டம் வரக்கூடாதுன்னு நினைப்பான். அதனாலத்தான் அவன் மனசுக்கு, உன்னைப் புடிச்சிருக்குன்னு சொன்னதும்... நீ கறுப்பா... செவப்பா… கட்டையா… நெட்டையா.. அழகா... இல்லையா... படிச்சிருக்காளா… படிக்காதவளா எதையும் கேக்கல, உடனே சரின்னுட்டோம். உன்ன மருமகள்னு நாங்களும், அண்ணி கொளுந்தியா, தங்கச்சின்னு என் பிள்ளைங்களும், மூத்த மருமகளும் கூப்பிடறதுக்கு... இவன் மேல நாங்க வச்சிருக்க அன்புதான்மா காரணம். நீ எங்களைத் தப்பா நினைச்சிக்காதம்மா. உங்க கல்யாணத்தைப் பார்த்துட்டுத்தான் கண்ண மூடுவேன்னு... உங்க அத்தை உயிரப் புடிச்சிட்டுக் காத்திட்டிருக்கா. எங்களைக் கை விட்டுறாதம்மா. அவனை, நீ தான்மா கடைசி வர பார்த்துக்கணும். அவன் மத்தவங்கள மாதிரியில்லம்மா, உன்னைக் காதலிச்சிட்டு, இன்னொருத்திய கல்யாணம் பண்ணிக்க மாட்டான். நல்லவன் அதனாலதாம்மா ரொம்ப கவலையாயிருக்கு”, என்று விஜயைப் பற்றி உயர்வாகக் கூறியதைக் கேட்டு என் கண்களில் கண்ணீர் துளிர்த்திருந்தது. எனக்கு மட்டுமில்ல எல்லோர் கண்களிலும் நீர் நிறைந்திருந்தது. அவர் சொன்னவைகள் அனைத்தும் உண்மை. விஜய் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டார்.
“நீங்க ஒண்ணு... அதுங்க சந்தோஷமா இருக்க வந்த இடத்துல அதுங்கள அழ வச்சிட்டு.”, என்று அத்தை மாமாவிடம், கோபப்பட்டார்.
நானும் கண்களில் துளிர்த்திருந்த நீரைத் துடைத்துக் கொண்டேன். மாமாவே தொடர்ந்தார்.
“மருமகள்ட சொல்ல வேண்டாம்னு தான் இருந்தேன்... இப்ப நம்ம வீட்டுப் பிள்ளதானே அவ... அதனாலதான் சென்னேன்... இப்ப சொல்லலன்னா... வேற எப்பச் சொல்றது?”, என்று அம்மாவுக்கு விளக்கமளித்தார்.
“எனக்கும் உங்க மகனைப் பத்தித் தெரியும் மாமா. ஆறு வருஷமா பழகுறேன். ஒரு நாள் கூட என்னைத் தவறான எண்ணத்துல தொட்டதில்ல. சினிமா… தியேட்டருன்னு. சுத்துனா என் பேருக் கெட்டுரும்னு, ஒரு சினிமாவுக்குக் கூடக் கூட்டிட்டுப் போனது கிடையாது. மரத்துக்கு கீழ இருந்து தனியா பேச வர மாட்டாரு. எதை எடுத்தாலும், உன் பேருக் கெட்டுறக் கூடாது . அது ஒண்ணு தான் எப்பவும்… அவரு மட்டுமில்லாம... நான் வேற யாரையாவதுக் காதலிச்சிருந்தா... நினைச்சுப் பாக்கவே அருவருப்பா இருக்கு...” , என்று எங்கள் காதல் புனிதமானது, ஊர் உலகைச் சுற்றித் திரியவில்லை என்ற விவரத்தை, நாசுக்காக அவர்களுக்குத் தெரிவித்து விட்டதில் மகிழ்ச்சி. காதல் என்றதும் காதலிப்பவர்களைக் குறித்துத் தப்புக் கணக்குப் போடுவதுதானே பலரது எண்ணம். விஜயைக் குறித்து, அவர் வீட்டிலுள்ளோர் அனைவருக்கும் தெரியும். என்றாலும், நானும் அவருக்கு எந்த பிரச்சனையும் கொடுக்கவில்லை என்பது அவர்களுக்கும் தெரிந்திருக்க வேண்டுமல்லவா. அதனால்தான் அதை சொல்லி வைத்தேன்.
“அப்படிபட்டவன் எதுக்கு உன்னை ஸ்கூட்டர்ல வச்சுச் சுத்துறான் தெரியுமா?... உன்னத்தான் கல்யாணம் பண்ண போறான்னு, ஊரார் எல்லோருக்கும் தெரியட்டும்னு தான். ஒரு பொண்ணுக்கூடச் சுத்துறான்னு ஊரு உலகுக்குத் தெரிஞ்சிட்டுன்னா, இந்த ஊர்ல எவனும் அவனுக்குப் பொண்ணு குடுக்கமாட்டான். நாங்களும் அவனுக்குப் பொண்ணு கேட்டுப் போக முடியாது. உன்னைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் பண்ண கூடாதுன்ன, ஒரே காரணத்துக்காக, உன்னை ஸ்கூட்டர்ல வச்சு சுத்துறான். பக்கத்து வீட்டுக் காரங்களே, நேர வந்து என்கிட்டயே, உன்னைப் பத்தி விசாரிச்சங்கன்னா பார்த்துக்கோ... அதுக்கு அண்ணனும் தம்பியும் சப்போட்டு. எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு நெனச்சிருக்கானுக... எனக்கு எல்லாம் தெரியும்..... ”, என்று நாங்கள் இருவரும் ஸ்கூட்டரில் பயணித்ததற்கான காரணம், தனக்கும் தெரியுமென்று, மாமா விளக்கமாகக் கூறினார்.
மாமாவின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அப்பொழுது கதவைத் திறந்து கொண்டு, அவர் உள்ளே வந்தார்.
“அம்மா... டாக்டரைப் பார்த்தேன். ஞாயிற்று கிழமை காலைல பத்து மணிக்கு மேல டிஸ்சார்ஜ் பண்ணிறலாம்னு சொன்னாரும்மா. ஞாயிற்று கிழமை, சர்சுக்குப் போயிட்டு வந்து, டிஸ்சார்ஜ் பண்ணிறலாம். அப்ப நாங்க கிளம்புறோம். எனக்கும் பசிக்குது... அப்பா!... நீங்களும், அம்மாவுக்கு சாப்பாடுக் கொடுங்க”, என்று கூறிவிட்டு அம்மா அப்பா இருவரிடமும் விடைப்பெற்றுக் கொண்டு வீட்டிற்குக் கிளம்பினோம்.
ஸ்கூட்டர் பயணம் இன்பமாக இருந்தது. ஸ்கூட்டரில், விஜயோடுச் சேர்ந்து பயணிப்பதில் இத்தனை விஷயம் அடங்கியிருக்கிறதா, என்று ஆச்சரியப்பட்டேன்.
மின்னும் விளக்கொளியில், சாலையின் இருளைக் கிழித்துக்கொண்டு ஸ்கூட்டர் பறந்தது. குளிர்ந்த காற்று என்னைத் தீண்டிச்செல்ல அவர் முதுகில் சாய்ந்து கொண்டு, பேசிக்கொண்டு, களித்துக் கொண்டு பயணித்தது என் நினைவில் தங்கிவிட்டது.